காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

காந்தி எந்த மடாதிபதியையும் சந்தித்ததில்லை, ஆசி வாங்கியதில்லை. அவர் சந்தித்த இந்து துறவியர் இருவர். சகோதரி நிவேதிதா மற்றும் நாராயணகுரு. அவர் மதித்த துறவி நாராயணகுரு மட்டுமே.

காந்தி ஒரு முறை காஞ்சி மஹாபெரியவாளை சந்தித்தார்.

//Though Periyavaa did not get directly into politics, he was interested in the happenings. At Nellichery in Palakkad (Present Day Kerala), Rajaji and Mahatma Gandhi met the Acharya in a cow shed. It was a practice in the mutt to wear silk clothes.// >;>;>; http://en.wikipedia.org/wiki/Chandrashekarendra_Saraswati

மகேஷ்

அன்புள்ள மகேஷ்,

இந்த விஷயங்களை நான் இன்றையகாந்தி நூலில் எழுதியிருக்கிறேன். இந்தக்கட்டுரையிலேயே கூட ஒரு வரியில் குறிப்பிட்டிருக்கிறேன்.

காந்தி எந்த மதத்தலைவரையும் அவராகச்சென்று சந்தித்து ஆசி வாங்கியதில்லை என்றே நான் எழுதியமைக்குப் பொருள். அந்த வரியில் உள்ள அரைப்புள்ளியை கவனியுங்கள். அவராகச்சென்று, அவர்களின் இடத்திற்குச் சென்று சந்தித்தது சகோதரி நிவேதிதை, நாராயணகுரு இருவரையுமே.

காந்தி கேரளத்திற்கு 1920இல் முதல்முறையாக வந்தார். ஆகஸ்ட் 20ஆம் தேதி கோழிக்கோட்டுக்கு வந்திறங்கிய காந்தி கிலாஃபத் இயக்கத்தை அங்கே பெருந்திரளான மக்கள் நடுவே ஆரம்பித்து வைத்தார். இரண்டாவது வருகை 1925இல். அது காந்தி ஆரம்பித்திருந்த ஹரிஜன இயக்கத்தையும் அதையொட்டி வைக்கத்தில் நாராயணகுருவின் மாணவரான காந்தியவாதி டி.கெ.மாதவன் அவர்கள் ஆரம்பித்திருந்த வைக்கம் ஆலயம் மற்றும் தெருநுழைவுப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக.

காந்தி மார்ச் 8ஆம் தேதி திருவனந்தபுரம் வந்திறங்கினார். மார்ச் 19 வரை கேரளத்தில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு வைக்கத்தில் அளிக்கப்பட்டது. மார்ச் 10ஆம் தேதி அன்றைய திருவிதாங்கூர் அரசி சேதுலட்சுமிபாயை சந்தித்து வைக்கம் ஆலயநுழைவுப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்.

மார்ச் 12ஆம்தேதி காந்தி வர்க்கலைக்கு வந்தார். நாராயணகுருவை அவரது வர்க்கலா ஆசிரமத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார். காந்திக்கு நாராயணகுருகுலத்தில் அதிதிபூஜை செய்யப்பட்டது. அப்போது நாராயணகுருவின் மாணவர் மூர்க்கோத்து குமாரன், டி.கெ.மாதவன் போன்றவர்கள் உடனிருந்தனர். கோட்டயம் ஆட்சித் தலைவரும் நாராயணகுருவின் சீடருமான என்.குமாரன் உரையாடலை மொழியாக்கம் செய்தார்.

இரண்டரை மணிநேரம் இந்த உரையாடல் நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அன்றுமாலை காந்தி திருவனந்தபுரத்தில் உரையாற்றினார். அதில் நாராயணகுருவுடனான சந்திப்பைப்பற்றி மிக உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டார். ‘உண்மையான மகான் ஒருவரின் அருகே அமர்ந்து விவேகம் மிக்க வார்த்தைகளைக் கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது’ என்றார்.

அதன் பின்னர் மார்ச் 13ஆம்தேதி வைக்கம் போராட்டத்தில் வைதிகர்களின் தரப்பை எடுத்த பழைமைவாதியான இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வீட்டுக்கதவைப் பூட்டிவிட்டு நம்பூதிரிப்பாடு உள்ளேயே இருந்தார். தீண்டாமையைப்பற்றி ஒரு பொதுவிவாதத்துக்கு வரமுடியுமா என காந்தி அவரிடம் சவால் விடுத்தார். நாராயணகுருவுடனான உரையாடலே இந்தத் தெளிவை அவருக்கு அளித்தது.

1925 அக்டோபர் எட்டாம் தேதி வைக்கம் போராட்டம் சமரச ஒப்பந்தத்துக்கு வந்தது. காந்தி ஒட்டுமொத்த விளைவுகளை ஆராயும்படி வைக்கம் வீரரான டி.கெ.மாதவனுக்கு ஆணையிட்டார். அடுத்தபடியாக கேரளம் முழுக்க இதே ஆலயநுழைவுப்போரை முன்னெடுக்க முடியுமா என காந்தி எண்ணினார்.

இக்காலகட்டத்தில்தான் காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி காந்தியைச் சந்திக்க விரும்பி தூதனுப்பினார். அப்போது சந்திரசேகரருக்கு 31 வயதுதான். அவரோ அவரது மடமோ புகழ்பெற்ற ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் காந்தியைச்சுற்றி இருந்த பிராமணர்கள் காந்தி சந்திரசேகரரைச் சந்திக்கவேண்டுமென ஆசைப்பட்டார்கள்.

காந்தி சந்திரசேகரரைத் தவிர்த்ததாகத் தெரிகிறது. காரணம் வெளிப்படை. காந்தி தீண்டாமை குறித்துப் பேசிவந்த கருத்துக்கள் சந்திரசேகரருக்குப் பிடிக்கவில்லை. அது இந்துமதத்தை அழித்துவிடும்,அதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை என சந்திரசேகரர் சொல்லியனுப்பியிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிறவி இழிவு கொண்டவர்கள், அவர்களை உயர்சாதியினர் பார்ப்பதும் தீண்டுவதும் பெரும் பாவமே ஆகும் என வாதிட்டார்.

இதே நிலைப்பாட்டுடன் காந்தியை எதிர்த்து, அவரை சந்திக்கவிரும்பிய பழம்பெருமை மிக்க மடாதிபதியான பூரிசங்கராச்சாரியாரையும் காந்தி முற்றாகத் தவிர்த்துவிட்டிருந்தார். மேலும் பல வைதிகர்களை அவர் தவிர்த்திருந்தார்.

உண்மையில் காந்திக்குக் குழப்பம் இருந்தது. இந்து மூலநூல்களில் தலித்துக்களைத் தீண்டப்படாதவர்களாகவே நடத்தவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கே இருந்தது. மேலும் காந்தி அன்று காங்கிரஸுக்குள்ளேயே கடுமையான வைதிக எதிர்ப்பைச் சந்தித்துக்கொண்டிருந்தார். உண்மையில் நீண்ட சமரசங்கள் வழியாக காங்கிரஸ் உடையாமல் கொண்டுசென்றார்.

ஆகவே அவர் சந்திரசேகரரிடம் நேரடிச்சந்திப்பை தவிர்த்தார். இருவரிடம் அவர் தனக்கு வழிகாட்டும்படி கோரினார். ஒருவர் தாகூர். தாகூர் தன் நண்பரான ஷிதிமோகன் சென் [அமார்தியா சென்னின் தாத்தா] என்ற பேரரறிஞரிடம் கலந்து பேசியபின் இந்துமதத்தின் அடிப்படை மூலநூல்களில் இனவாதமோ சாதியவேறுபாடோ இல்லை எனத் தெளிவாக்கினார்.

காந்தி நாராயணகுருவைச் சந்தித்தும் இதே ஐயத்தையே கேட்டார். நாராயணகுரு இந்துமதத்தில் உள்ள ஸ்மிருதி-சுருதி வேறுபாட்டை விளக்கினார். ஸ்மிருதிகள் காலந்தோறும் மாறும் என்றும் யம ஸ்மிருதி, நாரதஸ்மிருதி முதலியவை அகற்றப்பட்டே மனு ஸ்மிருதி வந்துள்ளது என்றும் சொன்னார்.

ஒவ்வொரு ஸ்மிருதியும் ஒவ்வொரு நீதியை சொல்லக்கூடியது. ஆனால் சுருதிகள் மாறுவதில்லை. அவையே ஞானத்தின் அடிப்படை. சுருதி எனக் கருதப்படும் நூல்களில் சில இடைச்செருகல்களைத் தவிர்த்தால் எங்கும் சாதிவேறுபாடு சொல்லப்படவில்லை என்றார். அதன்பின்னரே நீலகண்டன் நம்பூதிரிப்பாடிடம் பொதுவிவாதத்துக்கு காந்தி தயாரானார். அப்போதும் சந்திரசேகரரைச் சந்திக்கத் தயாராகவில்லை.

மீண்டும் காந்தி கேரளத்துக்கு வந்தது 1927 அக்டோபர் 9இல். அக்டோபர் 15 வரை அவர் கேரளத்தில் இருந்தார். இம்முறை காந்தி கேரளத்துக்கு வந்தது வைக்கம் போராட்ட வெற்றியைத் தொடர்ந்து அவர் டி.கெ.மாதவன் தலைமையில் கேரளம் முழுக்கத் தொடங்கியிருந்த ஆலய நுழைவுப்போராட்டத்தை முன்னெடுப்பதற்காக.

காந்தி அக்டோபர் 10ஆம் தேதி திருவிதாங்கூர் மகாராணி சேதுலட்சுமிபாயையும் இளவரசரையும் சந்தித்தார். திருவார்ப்பு கோயிலில் டி.கெ.மாதவன் தலைமையில் நிகழும் போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறையை ஏவவேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அவர் எர்ணாகுளம் வழியாக திரிச்சூர் வந்தார். அங்கே கதர் நூற்புப் போட்டியைத் தலைமை தாங்கிப் பரிசளித்தார்.

காந்தி அக்டோபர் 15 அன்று பாலக்காடு வந்தார். அப்போது மாலையில் 15 நிமிடங்களை சந்திரசேகரருக்கு ஒதுக்க ஒத்துக்கொண்டார். காந்தியின் இந்த கறார்த் தன்மைக்குக் காரணம் அவரால் விரிவாக சாஸ்திர விவாதங்களில் ஈடுபட முடியாதென்பதும், அறிஞரான சந்திரசேகரரை சந்தித்துப்பேச அவர் அஞ்சினார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

பாலக்காட்டில் நெல்லிச்சேரியில் காந்தி தங்கியிருந்த இடமருகே பாலக்காட்டு காங்கிரஸ்காரரின் இல்லத்துக்கு சந்திரசேகரர் வந்தார். காந்தி சூத்திரர் ஆதலால் சந்திரசேகரர் அவருக்கு முறையான ‘தரிசனம்’ கொடுக்க விரும்பவில்லை. சந்திப்பை காங்கிரஸ்காரரின் தொழுவத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார். அதை காந்திக்கு ராஜாஜி சிரித்துக்கொண்டே தெரிவித்தபோது காந்தி ‘தொழுவம் சுத்தமாக இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’ என்றார்.

சந்திப்பு 15 நிமிடத்துக்கும் குறைவாகவே நடந்தது. ராஜாஜியும் பாலக்காட்டைச்சேர்ந்த இரு காங்கிரஸ்காரர்களும் கலந்துகொண்டார்கள். உரையாடலில் இருவரும் இந்துஸ்தானியில் பேசிக்கொண்டார்கள். சந்திரசேகரர் கண்ணீருடன் இந்துமதத்தை அழிக்கவேண்டாம் என காந்தியைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கையை விடுப்பதற்காகவே அவர் பல நூறு கிலோமீட்டர் நடந்து தஞ்சாவூரில் இருந்து வந்திருந்தார்.

காந்தி மிக்க பணிவுடன் ‘ஒரே ஒரு சுருதி நூலில் ஒரே ஒரு வரியையாவது ஆதாரமாகக் காட்டுங்கள். நான் யோசிக்கிறேன்’ எனக் கேட்டுக்கொண்டார். சந்திரசேகரர் கீதையைச் சுட்டிக்காட்ட காந்தி கீதையின் அந்த வரி தவறாக விளக்கப்படுகிறது, ஏனென்றால் அந்தப் பொருளுக்கு முற்றிலும் மாறாகவே மொத்த கீதையும் உள்ளது என்று சொன்னார்.

சந்திரசேகரரால் மேலே பேசமுடியவில்லை. காந்தி ‘உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் ஒரு மௌல்வியைச் சந்திக்கவேண்டும்’ என்று சொல்லி சந்திப்பை முடித்துக்கொண்டார். அது வைக்கம் மௌலவி என பின்னாளில் புகழ்பெற்ற வைக்கம் அப்துல்காதர் மௌலவி. நாராயணகுருவின் இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புடையவராக இருந்த காந்தியவாதி அவர். சுவதேசாபிமானி என்ற நாளிதழின் நிறுவனர்

சந்திரசேகரரிடம் காந்தி கொஞ்சம் உதாசீனமாகவே நடந்துகொண்டதாக அன்று பிராமணர்கள் நினைத்தனர். அது உண்மையும் கூட. காந்தி பக்தரான கல்கி போன்றவர்கள்கூட சந்திரசேகரரை கடுமையாக, நேரடியாகத் தாக்கி எழுதியமைக்கும் இந்நிகழ்வு ஒரு தூண்டுகோல். தீண்டாமையை ஒழிப்பது வழியாக காந்தி இந்துமதத்தை அசுத்தமாக்குகிறார் என சந்திரசேகரர் சொன்னதற்கு ‘நீங்கள் ஒன்றும் ஜகத்குரு [உலகின் குரு] அல்ல, ஒரு மடாதிபதி மட்டுமே. அந்த இடத்தில் இருந்தால் போதும்’ என கல்கி பதில் எழுதினார்.

கல்கி ஸ்மார்த்தர்.அன்றைய பிராமணர்களால் வழிபடப்பட்டவர். ஆகவே இந்த தாக்குதல் சந்திரசேகரரை அதிர்ச்சி அடையச்செய்தது. அதன்பின் தீண்டாமைக்கு ஆதரவாக நேரடியாகப்பேசுவதைக் கட்டுப்படுத்திக்கொண்டார். அல்லது அந்த அமைப்பு அவரை கட்டுப்படுத்தியது. ஆனால் கடைசிக்காலம் வரை அவர் சாதிநோக்கும் தீண்டாமைநோக்கும் கொண்டவராகவே நீடித்தார். அவரது நூல்களே சான்று

இன்றும்கூட சம்பிரதாய ஸ்மார்த்தர்கள் காந்தியை வெறுக்கிறார்கள். ராதாராஜன் போன்ற [போலிப்] பிராமண வெறியர்களின் நூல்களில் காந்தி சங்கராசாரியாரை மதிக்கவில்லை என நீடிக்கும் குற்றச்சாட்டுக்கு இந்நிகழ்வே காரணம்.

அன்று மாலை கோயம்புத்தூருக்கு வந்த காந்தி அங்கே கோவை அய்யாமுத்து ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் பேசினார். ஒருவர் சந்திரசேகரருடனான சந்திப்பு பற்றிக் கேட்டபோது காந்தி ‘சொல்லும்படி ஏதுமில்லை. ஒரு தனிப்பட்ட உரையாடல் மட்டுமே’ என்றார்.

சந்திரசேகரர் பின்னரும் பல உரைகளில் அவரது தீண்டாமைச் சிந்தனையை முன்வைத்துப் பேசினார். அவை அச்சாகியும் உள்ளன. தீண்டாமை சட்ட விரோதமாக ஆனபின் அந்த உரைகள் பலவும் திருத்தி எழுதப்பட்டன. இன்று காந்தியை சந்திரசேகரர் சந்தித்தது ஸ்மார்த்த பிராமணர்களின் நூல்களில் பலவாறாகத் திரித்து எழுதப்படுகிறது. காந்தி அவரைச் சந்தித்து காலில் விழுந்து ஆசிபெற்றார் என்றுகூட எழுதியிருக்கிறார்கள்.

இன்னும் நூறுவருடம் ஆகாத ஒரு வரலாற்றுக்கே இத்தனை திரிபுகள். ஒருபக்கம் திராவிடத் திரிபு இன்னொரு பக்கம் பிராமணத் திரிபு. காந்தியை மீட்டெடுப்பது தாரில் சிக்கிய வண்ணத்துப்பூச்சியை மீட்பது போலத்தான்.

ஜெ


வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும்

முந்தைய கட்டுரைஅஞ்ஞாடி மதிப்புரை
அடுத்த கட்டுரைகாந்தியின் சனாதனம் – கடிதங்கள்