கோட்டி – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் கோட்டி சிறுகதையை சமீபத்தில் படித்தேன். கதை முடிகையில் இது ஒரு கோட்டியைப் பற்றியதல்ல, கோட்டிக்கார உலகத்தைப் பற்றியது என்பது விளங்கியது. “பிழைக்கத்தெரியாத” மனிதர்களைப் பாத்திரமாகக்கொண்டு தாங்கள் எழுதிய (நான் படித்த) மூன்றாவது சிறுகதை இதுவென்று நினைக்கிறேன்.முதல் இரண்டு “சோற்றுக்கணக்கு”,”யானை டாக்டர்”. இச்சிறுகதையைப் பற்றி என்னுடைய ப்ளாகில் எழுதவிருப்பதை இங்கே தருகிறேன்.

கணேசன் என்ற ஜூனியர் லாயர், தான் பெண் பார்க்கச் செல்கையில் பூமேடை என்ற கொள்கைவாதியை சந்திக்கிறான். (கொள்கைவாதி:அப்படி யாராவது இன்று உயிருடன் இருக்கிறார்களா என்ன?… ஒன்றை கவனித்தால் “வாதி” என்று முடியும் எல்லா வார்த்தைகளும் இன்று கெட்ட வார்த்தையாய்ப் போய் விட்டன…அரசியல்வாதி,தீவிரவாதி).பின் அவன் பூமேடையோடு உரையாடத் தொடங்குகையில் அவரைப் பற்றிக் கதை விரிவடைகின்றது.

பூமேடை காந்தியால் ஈர்க்கப்பட்டு, அவரது கொள்கையை விடாதிருப்பவர். சத்தியாக்கிரகம், சிறை, பிரசங்கம் என்று வாழ்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனது சொத்துக்களை விட்டு விட்டுப் பைத்தியக்காரப்பட்டம் கட்டிக்கொண்டு திரிகின்றார். அரசாங்கத்தின் குறையை முதலில் பிரசங்கம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு தர முனைகிறார். ஆனால் அவரையும் அவரது வார்த்தைகளையும் கோமாளியின் கூற்றாகவே சமூகம் எடுத்துக்கொள்கிறது. ஆனாலும் மக்கள் பிரச்சனைகளை அவர் முதலில் தொடங்குவதால், சில அரசாங்கத்திடம் ஏதோ ஒரு வகையில் போய் சேர்கின்றது, மாற்றங்களும் நிகழ்கின்றது.

பூமேடை, காந்தீயக் கொள்கையுடன், கம்யூனிசமும் சேர்த்தே பரப்ப முயல்வது கதையெங்கும் தெரிகின்றது. சமுதாய நடப்பைப் பற்றிய ஓயாத நையாண்டிப்பேச்சுக்களால் அவருக்கு நிறைய அடியும், சிறை வாசமும் கிடைக்கின்றது. அதற்கென்றே பிறந்தது போல் அவரது செயலில் சாகும்வரை எந்த மாற்றமும் இருப்பதில்லை, மாற அவர் விரும்பவும் இல்லை. அவருக்குக் கிடைக்கத் தோதுபடும் தியாகி பென்ஷனை செத்தவனுக்குப் போடும் வாய்க்கரிசி என்றும், இன்னமும் சர்வீசில் இருக்கும் தனக்கு அது எதற்கென்றும் கூறி மறுத்துவிடுகிறார். (அங்கேயும் நக்கல்!)

இறுதியாக லாயர் கணேசன் மருத்துவமனையில் சேர்த்து அவரின் நோயை குணப்படுத்த முயல்கிறான்.ஆனால் அங்கேயும் அவர் வரிசையில் அனுமதிக்கப்படாத ஆளுங்கட்சி ஆட்களிடமும் அந்த டாக்டரிடமும் நையாண்டி செய்வதால் மருத்துவமனையை விட்டே துரத்தப்படுகிறார். பின்பு அவரை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து விடுவதாக முடிகின்றது.

சகல லட்சணங்களோடு எழுதப்பட்ட இந்த சிறுகதையில் என்னை மிகவும் கவர்ந்தது பூமேடையின் சமுதாயத்தை சாட்டையால் விளாசும் நக்கல் பேச்சுக்கள்தான். பென்ஷனை “செத்தவனுக்குப் போடும் வாய்க்கரிசி” என்றும், சர்க்கார் மருத்துவமனையை “அனாதைகள் நிம்மதியாக வந்து சாகும் இடமென்றும்” சொல்லும் அணியை ரசித்தேன். அரசாங்க ஆஸ்பத்திரிகள் அப்படி இருக்கப்போய்தானே இன்று சாமானியனும் தனியாரைத் தேடி ஓடுகின்றான். வியர்வையும்,ரத்தமும் சிந்தி சேர்த்த பணம் முழுவதையும் காய்ச்சல்,தலைவலி வைத்தியத்திற்கே செலவு செய்கிறான்.இது ஒரு டிசைன், அரசாங்க ஆஸ்பத்திரி அப்படியும், தனியார் ஆஸ்பத்திரி இப்படியுமாக இருந்தாக வேண்டும்.

இந்த சமுதாய அமைப்பில் நம் கண்ணுக்குத் தெரியாத வலை ஒன்று உள்ளது. அதில் நாமெல்லாம் தெரிந்தே பிணைக்கப்பட்டுள்ளோம். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதில் உழன்றே ஆக வேண்டியதுதான். பூமேடையைப் போல் எதிர்த்துக் குரல் கொடுக்க முயன்றால் “பிழைக்கத் தெரியாதவன்” என்று கூறிப் புறங்கையால் உந்தி விடும் இந்த ஆடையில்லாத ஊர்.

வாழ்த்துக்கள் ஜெயமோகன்!

பின் குறிப்பு: தங்களின் நாவல்களான காடு, ஏழாம் உலகம் போன்ற நாவல்களைப் பற்றி எனது பார்வையில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.எழுத முடியுமா என்று தெரியவில்லை,புதுக்கணவன் மனைவியை முத்தமிடத்தயங்குவதைப் போல் தயக்கமாக உள்ளது.

அன்புடன்,

இப்ராஹிம், பெங்களூர்.

அன்புள்ள அகமது இப்ராகீம்,

நன்றி. கோட்டியை மிக நெருக்கமாக உணர்வதற்கு நம்முள் ஒரு கோட்டித்தனம் இருந்தாகவேண்டும். நீங்கள் சொல்வது உண்மைதான். இலட்சியவாதம் கோட்டித்தனமாக ஆகும் காலகட்டம் இது. ஆனாலும் அவர்களே சிலவற்றை மேலே கொண்டு செல்கிறார்கள். கிளைகள் வெளியே தெரிகின்றன. வேர்கள்தான் நீரும் பிடிப்புமாக இருக்கின்றன இல்லையா?

நல்ல மொழியில் சீராக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் சனாதனம்-5
அடுத்த கட்டுரைகயா – இன்னும் ஒரு கடிதம்