ரவிசங்கர்,ஜக்கி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

என்னளவில் என் அனுபவத்தைப் பதிவு செய்ய விழைகிறேன்… முதலில் தத்துவத்தையும் நம் ஆன்மீகத்தையும் ஓரளவு பயின்ற பிறகு யோகா செய்பவர்களுக்கு அதிகக் குழப்பங்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன்… அந்த வகையில் ஓஷோவிற்கு நான் கடன்பட்டவன். பல வருடங்களாக ஈஷா யோகாவை செய்து வருகிறேன்.. ஈஷாவின் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன்… லொளகீக ரீதியாக யோகா நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே வேலை செய்கிறது (நான் அதை ஒழுங்காகப் பயிலும் பட்சத்தில்).

இதற்கு முன் வேதாத்ரி மகரிஷியின் யோகாவைப் பயின்றேன்.. ஆனால் அவரது தத்துவங்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை… ஆகவே அவரது யோகாவும் அதிகப் பலன்களை எனக்குத் தரவில்லை…

யோகாவையும் குருவையும் பிரித்துப்பார்க்க முடியாது என்பது மிகவும் உண்மை.

மற்றபடி, ஜக்கியிடமோ, தியான லிங்கத்திலோ, பிற நிகழ்ச்சிகளிலோ நான் எந்தவித அதிர்வுகளையோ அனுபவத்தையோ உணர்ந்ததில்லை… ஆனால் ஜக்கியை வசிஷ்டவிசுவாமித்ரபரமஹம்சர்களுடன் ஒப்பிடுவதில்லை. அவர் புத்தஞானத்தை அடைந்தவரா இல்லையா என்பது என் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷ்யம்.

ஆனால், குறுக்கு வழியில் செல்லாமல், மந்திரவித்தைகளைக் காட்டாமல், போலி நம்பிக்கைகளை விதைக்காமல், யோகாவின் மூலம் அவர் பணமே சம்பாதித்தாலும் அதில் என்ன தவறு இருக்க முடியும்…

நன்றி
ரத்தன்

அன்புள்ள ஜெ

வழக்கம்போல கார்ப்பரேட் குருக்களைப்பற்றிய உங்கள் பதிவு துல்லியமானதாக இருந்தது. இந்தவினாக்களுக்கு ஒன்று இந்தப்பக்கம் அல்லது அந்தப்பக்கம் என்றுதான் பதில்கள் சொல்லப்பட்டு வருகின்றன. துல்லியமாக எது ஏன் என்று சொல்லியிருக்கும் இந்தப் பதிவு முக்கியமானது

ஆனால் அந்தக் கடிதத்தில் ரவிசங்கர், ஜக்கி, நித்யானந்தா என்று ஒரு ஒப்புமை சொல்லப்பட்டிருந்தது. இது அறியாமை. அப்படிப்பார்த்தால் ஏன் பிரேமானந்தாவை சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஜக்கி, ரவிசங்கர் இருவரும் தங்களைக் கடவுள் என்றோ கடவுள் அவதாரம் என்றோ பரமஹம்சர்கள் என்றோ சொல்லிக்கொள்ளவில்லை. அற்புதங்கள் செய்கிறோம் என்று கிளெய்ம் பண்னவில்லை. அவர்கள் யோக-தியான குருநாதர்களாக மட்டுமே தங்களை முன்வைக்கிறார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளில் பொய்யான வாக்குறுதி எதையும் வழங்குவதில்லை. உண்மையில் குறைத்துதான் சொல்கிறார்கள். நோய்களை இது தீர்க்கும் என்றுகூட சொல்வதில்லை. நோய்களைத் தீர்ப்பது நீங்கள் செய்யும் யோகம்தானே ஒழிய குருவோ அமைப்போ அல்ல என்றுதான் சொல்கிறார்கள். நிறைய எச்சரிக்கைகள்தான் கொடுக்கிறார்கள். இது கடினமான மார்க்கம் என்றுதான் சொல்கிறார்கள். அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் செய்கிறார்கள்

அப்படியென்றால் இவர்கள்மீது ஏன் இத்தனை கொலைவெறி? முடவர்கள் நடக்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள் என்று விளம்பரம்செய்து ஆள்திரட்டும் பாதிரியார்களுக்கு இங்கே உள்ள நாத்திக அமைப்புகளே மைதானங்களைக் கொடுக்கிறார்கள். அவர்களை கௌரவிக்கிறார்கள். இவர்கள் என்ன தப்பு செய்கிறார்கள் என்கிறார்கள்? ஒரே குற்றச்சாட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது. அது ஒருசேவை. ஆகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டாய வசூல் இல்லையே. அந்தப் பணம் கூட இங்கே ஆன்மீகசேவைக்கும் ஏழைஎளியமக்களுக்கான சேவைக்கும்தானே செலவிடப்படுகிறது? சுனாமி வந்தபோது எந்தக் கிறித்தவ அமைப்பும் அல்லது அரசாங்கமும் அங்கே வரவில்லை. முதலில் வந்தது ரவிசங்கரும் ஜக்கியும் அமிர்தானந்தமயியும் தானே? அவர்கள் செலவிட்ட பணமெல்லாம் அவர்கள் இப்படிக் கட்டணம் வசூலித்து உண்டுபண்ணிய பணம்தானே? அதாவது கொடுக்கமுடிந்தவர்களின் பணம் இப்படி ஏழைகளுக்குச் செல்கிறது. இதுதானே நியாயமானது

வெறும் வெறுப்புப்பிரச்சாரம் நடக்கிறது. ஜக்கியும் ரவிசங்கரும் நாத்திகர்களின் அரைவேக்காட்டுப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை அறிவுபூர்வமாக முறியடிக்கிறார்கள். ஆகவேதான் இந்தப் பிரச்சாரம்

ரவி கண்ணன்

சென்னை

முந்தைய கட்டுரைகாளிகாம்பாள்
அடுத்த கட்டுரைபூமணியின் நிலம்