விமர்சனங்கள்

கிணற்றுத் தவளைகள் !
( ஜெய மோகனுக்கு ஒரு மின்னஞ்சல் )

அன்பார்ந்த ஜெயமோகன்

உங்களைப்பற்றியோ உங்கள் நூல்களைப்பற்றியோ நான் முன்னதாக அறிந்திருக்கவில்லை.நீங்கள் நெடுங்காலமாக எழுதி ஒரு வட்டத்திற்குள் ஒரு இடத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திக்கொண்டாலும் நான் சமீபகாலத்தில்தான் உங்கள் எழுத்துக்களை த் திரும்பிப் பார்க்க நேரிட்டது.உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்க வேண்டுமென்ற விருப்பமும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.வெகுஜனப் பத்திரிக்கைளை இடக்கையால் ஒதுக்கி நேரடிப் பதிப்பை நீங்கள் கையாண்டது  கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களில் உங்களிலிருந்து நான் வேறு பட்டிருந்தாலும் மொழிசார்ந்த எண்ணங்களில் எவரையும்  நேசிப்பவன். இயல்பாக ஒரு எழுத்தாளனாக உருவெடுக்க எண்ணி அதற்கான முயற்சிகள் எதுவுமின்றிப் புறக் காரணங்களால் நான் தோல்வியுற்றவன் என்பதையும் அறிவேன்.

சமீபத்திய நாட்களில்  அவ்வப்போது உங்கள் இணையதளத்துக்கு வருவதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி குறித்த உங்கள் பதிவைப் பார்க்க நேரிட்டது.எழுத்துலகில் இன்னும் எத்தனையோ தூரத்தைக் கடக்க வேண்டிய  (நான் பக்கங்களை சொல்லவில்லை ) உங்களுக்கேற்ற பண்பாகத் தோன்றவில்லை. உங்களுக்கேற்பட்டிருந்த அளவுக்கதிகமான மேதாவித்தனமே இது போன்ற கருத்தை வெளியிட்டிருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.இந்தமண்ணில் இல்லாமற்போன, தான் பிறந்த சமூகத்துக்கு எதிராகத் தான் கொண்ட கருத்துக்களில் கடைசிவரையில் வாழ்ந்த மனிதரைப்பற்றி ஒரு சக வணிக எழுத்தாளன் (காசுக்காக எழுதும் எவரும் என்னைப்பொறுத்தவரை ஒரு வணிக எழுத்தாளன்தான்.) இப்படியும் எழுத முடியுமா?

முதல் பகுதியில் அவர் யாரென்று நான் அறியேன் என்று துவங்கிய நீங்கள்,அடுத்த சில வரிகளில் உங்களுக்கு அவர்மீது காழ்ப்பு வரநேர்ந்த காரணத்தை தந்திருக்கிறீர்கள். அதற்காக யாரோ ஒரு வாசகர் மூலமாகவோ அல்லது நீங்களாகவோ ஒரு களனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.நான் இப்படிப் பேசுவதற்குக்  காரணமும் உண்டு.      சமீபத்தில் நான் காண நேர்ந்த ஒரு சில குறுகிய வட்ட எழுத்தாளர்களின் இணையதளங்கள்,இந்த யுத்தியையே கடைப்பிடிப்பதைக்கண்டிருக்கிறேன்.வாசகர் எழுதும் கடிதமும் அதற்குத் தரப்படும் பதிலும்  ஒன்றுபோல நடைபயிலுவதைக்கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.

சின்னக்குத்தூசி எளியதமிழில் அத்தனை பிரதேசமக்களும் ( குப்பத்து வழக்கல்ல )அறியும் வகையில் தான் ஏற்ற பகுத்தறிவுச்  சிந்தனைகளுக்கும் ,தான் சார்ந்த திராவிட இயக்கங்களுக்கும் வடிவம் கொடுத்தவர்.சந்தைகளில் ஜாலம் காட்டும் விருதுகளுக்காகவோ வயிற்றை நிரப்பத் தேவைப்படும் சன்மானங்களுக்காகவோ குறுகியவட்டத் துதிகளுக்காகவோ கிணற்றுத் தவளைகள் போல் அவர் என்றும் செயல்பட்டதில்லை.அவரை ஒரு வணிகக் கட்சியின் எழுத்தாளர் என்று எழுதியிருக்கிறீர்கள்.அப்படியென்றால் வாழ்வில் அங்கீகாரமற்ற அவலங்களை – மேலும் வேர்விடாமல் நிராகரிக்கப்படவேண்டிய நிகழ்வுகளை  வெளிச்சமிட்டுக்காட்டி,அதுதான் இலக்கியமென்று  எழுதுபவர் அத்தனைபேரும் இனாமாக எழுதுகிறார்களா?

ஒரு சமயம் விஜய் தொலைக்காட்சியில் மருத்துவர் சார்ந்த ஒருவிவாதத்தில் பங்கேற்ற தாங்கள்,தனிமனிதனாகத் துணிந்து பேசிய கருத்துக்கள் என் நினைவில் தங்களுக்கு ஒரு இடம் ஏற்படுத்தியது.அதற்குள்ளாகவே தாங்கள் எழுதிய அடுத்த கட்டுரையொன்றில் சுந்தரராமசாமியை மேற்கோள் காட்டிப்  பெரும்பாலும் தர்க்கத்திலிருந்து விலகிப் பிரச்சனைகளைத் தவிர்ப்பபதே நல்லது என்ற அறிவுரையையும்  தந்து,நான் அப்படித்தான் என்றும் அடித்துப் பேசியிருந்தீர்கள்.ஆனால் அடுத்தடுத்து உங்கள எழுத்துக்களில் தனி மனிதர் சார்ந்த நக்கல்கள் குறைந்தபாடில்லை.ஏன் இந்தத் தடுமாற்றம்.

நீங்கள் பேசுவதைப்போல இப்போதெல்லாம் நீங்கள் சுவர்களில் எழுதினால் கூட அடுத்த மாதங்களில் அச்சிட்டு வெளியிட ஆயிரம் பதிப்பகங்கள் காத்திருக்கலாம்.அதை வாசிப்பதற்கு ஒரு 500 பேர் இருந்தால் போதுமென்று நினைக்கிறீர்களா.அவை ஜனத்திரளிடம் சென்றடைய வேண்டாமா.அதுபோன்ற கட்டுரைகளில்கூட நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிற தனி நபர் நக்கல்கள் பலர் முகம் சுளிக்கக்  காரணமானதை  உணர்ந்திருக்கிறீர்களா.சாதாரண திண்டுக்கல் லியோனியும்,அசாதாரண வைரமுத்து ஜேசுதாசும் கூட உங்கள் இலக்கியங்களில் இடக்கையாலோ உலக்கையாலோ இகழப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன்.இந்தத் தனிமனிதர் இகழ்ச்சி உங்கள் நூல்களிலும் இடம் பெறவேண்டுமா?உங்கள் எழுத்து இலக்கியமா அல்லவா என்பதை நீங்களே நிச்சயிக்க முடியும் என்று கருதுகிறீர்களா?

தகுதி வாய்ந்த இலக்கியத் திறனாய்வாளர்கள்இப்போது தமிழில் இல்லை.அதனாலேதான் உங்களைப் போன்றவர்கள் தாம் எழுதிய எழுத்துக்கள்தாம்  இலக்கியங்கள் என்று பறைசாற்றிக் கொள்வதும்   மற்ற எழுத்துக்கள் திறனற்றவை என்று  குரலெழுப்புவதையும் எளிதாகக் காணமுடிகிறது.

மக்கள் மொழியில் எழுதிய ஜெயகாந்தனையோ,இலக்கியத் தமிழில் எழுதிய நா பா வையோ இன்னும் எவரும் எட்டிப்பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.சமீப காலத்தில் தமிழுக்கு நவீன தடத்தைச்  சுட்டிக்காட்டி எழுத்துலகில் திருப்பங்களை ஏற்படுத்திய சுஜாதாவையே இன்னும் இந்த இலக்கிய உலகம் அங்கீகரிக்கவில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

அடுத்தவர் எழுத்துக்களை இகழ்வதை விடுத்துத் தன் எழுத்துக்களில் கவனம் சேர்த்தால் விருதுகள் தானே தேடி வரும். அதுவன்றி விருதுகளை எண்ணி நாவில் நீர்  வடியப் பேசுபவர்களைத் தேடி எந்த
விருதும் வந்ததில்லை என்பதுதான் உண்மை.

சென்னையிலிருந்து …

பாண்டியன் ஜி.

அன்புள்ள பாண்டியன்,

தங்கள் கடிதம் மூலம் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டேன்.கடிதம் எழுதியமைக்கு நன்றி.

இந்தப்பதிலை இவ்வகையான பல கடிதங்களுக்குப் பொதுவாக எழுதுகிறேன். ஒருவேளை உங்களுக்கும் யோசிக்கும்படியான ஒரு விளக்கமாக இருக்கலாம்.

முதலில் நாம் ஒருவர் இறந்தபின்னர் அவரைப்பற்றிப்  பொதுவாகப்பேசுவதற்கும்,அறிவுத்தளத்தில் பேசிக்கொள்வதற்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப்புரிதல் இல்லாமல்தான் அதிக வாசிப்போ அறிவுத்தள அறிமுகமோ இல்லாதவர்கள் சிலர் உள்ளே புகுந்து உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள்.

ஒருவர் இறந்துபோகும்போது பொதுவான தளத்தில்  அவரைப்பற்றி இரங்கலும் சொந்தக்காரர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் அனுதாபமும் தெரிவிக்கிறோம். அது மரபு. ஒரு சமூகச்சடங்கு. பழங்குடிவாழ்க்கையில் இருந்து நீண்டு இன்றைய வாழ்க்கை வரை வந்திருக்கும் நீத்தார் வழிபாடு என்ற மனநிலை இதன்பின்னால் உள்ளது. இறந்தவர்களை வழிபடுவதும், அவர்களின் நினைவைப்  புனிதமாக்கிப் போற்றுவதும், கதைகளைக் கட்டிக்கொள்வதும் நம் மரபில் நெடுங்காலமாகவே உள்ள முறை.  அந்த உணர்வுகளே இறந்தவர்களின் விஷயத்தில் தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலையாக இன்றும் நீடிக்கின்றன.

இந்த மனநிலைகள் எதற்கும் அறிவுத்தளத்தில் இடமில்லை. அறிவுத்தளத்தில் எப்போதும் உண்மையான உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டுமே மதிப்பு. எதன்பொருட்டும் மிகைக்கும் பொய்க்கும் அங்கே இடமிருக்க முடியாது. அப்படி அனுமதித்தால் படிப்படியாக மொத்த அறிவியக்கமே வெறும் சம்பிரதாயப்பேச்சுகளாக மாறிவிடும்.

ஒருவர் இறந்து போகும்போது அவரைப்பற்றி மிகையான,பொய்யான பிம்பங்களை அவரைச்சார்ந்தவர்கள் உருவாக்கி அதை வரலாறாக நிலைநாட்டுவது மிகமிகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் இது எப்போதுமே நிகழ்கிறது. இறந்தவரைப்பற்றி அப்படி ஒரு பொய் நிலைநாட்டப்படும்போது அதை எதிர்த்து அல்லது ஐயப்பட்டு உண்மையை முன்வைப்பதென்பது இறந்தவரை அவமதிப்பது என்றும் மரணத்தை அவமதிப்பது என்றும் ஒரு நெருக்கடி கட்டமைக்கப்படுகிறது. அதற்கு நம் சூழலில் உள்ள அந்த சம்பிரதாய உணர்ச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.

என்னைப்பொறுத்தவரை நான் ஏதேனும் வகையில் சமூகத்திற்கோ அல்லது தனிப்பட்டமுறையில் எனக்கோ முக்கியமானவர்கள் என்று நினைப்பவர்களைப்பற்றி மட்டுமே அஞ்சலிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளில் அந்த மனிதர் ஏன் முக்கியமானவர், அவரது பங்களிப்பு என்ன என்று எந்த வித மிகையும் இல்லாமல் கூறியிருக்கிறேன். எனக்கு நேர்பழக்கம் உள்ளவரென்றால் அவரது ஆளுமையின் நுண்ணிய சித்திரத்தையும் அளித்திருக்கிறேன். கூடவே அவர்களின் எதிர்மறைக்கூறுகளைப்பற்றியும் கறாராகவே எழுதியிருக்கிறேன். எனக்கு மிகமிக நெருக்கமானவர்களாக நான் உணர்ந்த நித்ய சைதன்ய யதி முதல் லோகிததாஸ் வரை அனைவரைப்பற்றியும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். அதுவே முறையானது என நான் உறுதியாக நினைக்கிறேன்.

சின்னக்குத்தூசி,தமிழின் தரக்குறைவான இதழியலின் மூத்தபிரதிநிதி என்று மட்டுமே நினைக்கிறேன். ஆகவே அவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் இங்கே அஞ்சலிக் கட்டுரைகள் எழுதியவர்கள் சிலர்  அவரை ஏதோ இதழியல் பிதாமகர் என்ற அளவில் எழுதியபோதே அவரைப் பற்றி என் மதிப்பீட்டை முன்வைக்க நேர்ந்தது. அது ஒன்றும் விவாதத்துக்குரிய கருத்தும் அல்ல. தமிழில் நாற்பது வருடங்களாக அவர் எழுதிய கட்டுரைகளில் எதையாவது ஒருமுறையாவது தமிழ் அறிவுலகம், ஏன் திராவிட இயக்க அறிவுஜீவிகள், பொருட்படுத்தியிருக்கிறார்களா என்று பார்த்தாலே போதும்.

சின்னக்குத்தூசியின் இதழியல் பணி என்பது,திமுகவின் எதிரிகளை எல்லாவகையிலும் தரம்தாழ்ந்துசென்று தாக்கி வசைபாடி முரசொலியில் அவர் எழுதிக் குவித்த கட்டுரைகள் மட்டுமே. சரித்திரநாயகர்களான காந்தி,நேரு,சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோரைப்பற்றி அவர் எழுதிய வசைகளும் திரிபுகளும் அவதூறுகளும் அதிகம். இந்தத் தருணத்தில் சின்னக்குத்தூசி இறந்துவிட்டார் என்பதற்காக அவரது எழுத்தையும் ஆளுமையையும் பொய்யாகப் புகழ்வதென்பது அவர் செய்த அனைத்தையும் நியாயப்படுத்துவதாகும். ஒருவர் என்ன செய்தாலும் இறந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது எனக்கு உவப்பான நியாயம் அல்ல.

அவரது ஆளுமை மேல் சரியான மதிப்பீட்டை முன்வைப்பதன்மூலமே அவரது வசைகளைச் சரியான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். அதையே செய்திருக்கிறேன்.

*

இனி உங்கள் கடிதத்தின் பொதுவான ஒரு தொனி. அதாவது நான் என் ‘சோலியை’ப் பார்க்கவேண்டும், எவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்கிறீர்கள். சின்னக்குத்தூசி போல எந்தத் தளத்திலும் அடிப்படை வாசிப்பில்லாத ஒருவர் நாற்பதாண்டுக்காலம் சரித்திரநாயகர்களை வசைபாடியது உங்களுக்கு சரியாகத் தோன்றுகிறது. ஆனால் நான்  முறையான தர்க்கங்களுடன் என் கருத்துக்களை முன்வைப்பது உங்களுக்குப் பெரும் பிழையாகத் தெரிகிறது.

உங்கள் எழுத்தாளர்கள்,காந்தியையும் காமராஜரையும் தரமிறங்கி வசைபாடலாம். வரலாற்றுத் திரிபுகளைப் பதிவு செய்து வைக்கலாம் . அது அரசியல். ஆனால் அப்படித் தரமிறங்கி எழுதியவர் ஒருவர் என்று சுட்டிக்காட்டுவது காழ்ப்பு, சனநாயக விரோதம் இல்லையா? ஈவேராவும் அண்ணாத்துரையும் எல்லாரையும் வசைபாடுவது அரசியல் தரப்பு.  அவர்களைத் திருப்பி விமர்சனம் செய்தால் அது தாக்குதல், உங்கள் மனம் புண்படும் இல்லையா?

நண்பரே, எப்போதாவது இந்தமாதிரி முரண்பாடுகளைப்பற்றித் திரும்பிப்பார்த்து யோசிப்பீர்களா?

சரி விடுங்கள். இந்தக்கடிதத்தையே எடுத்துக்கொள்வோம். நீங்கள் யார்? என்ன சாதித்திருக்கிறீர்கள்? நீங்களே சொல்லிக்கொள்வதைப் போல எழுத முயன்றிருக்கிறீர்கள் எப்போதோ , இல்லையா? ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப்பற்றி என்னுடைய விமர்சனத்தைக் கண்டதும் பொங்கி எழுந்து என்னை வசைபாடுகிறீர்கள். நான் வணிக எழுத்தாளன், நாக்கு தொங்க விருதுகளுக்கு அலைபவன் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அதைப்  பிரசுரிக்கிறீர்கள். ஆனால் என்னுடைய எந்த நூலையும் வாசித்ததில்லை. என் தகுதி என்ன, என் சாதனை என்ன எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ள அக்கறையும் இல்லை. என் கருத்துக்களைக்கூட முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை.

யோசித்துப்பாருங்கள்.சின்னக்குத்தூசியை விமர்சித்தால் இதையெல்லாம் என்னைப்பற்றிச் சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் காந்தியை வசைபாடிய சின்னக்குத்தூசியை நான் அவர் வசைபாடினார் என்று சொல்வதே அவமதிப்பு, காழ்ப்பு என நினைக்கிறீர்கள்.

அய்யா, விமர்சனம் என்றால் உங்களுக்கு மட்டுமே உரிமை கொண்டதுதானா? பிறருக்கு அதற்கு அனுமதியே கிடையதா? ஊர் பேர் தெரியாத ஒருவரான நீங்கள் என்னை விமர்சித்து எழுதிய வரிகளின் கடுமையில் கால்வாசிகூட நான் எவரைப்பற்றிய விமர்சனத்திலும் காட்டியதில்லையே. அதை நான் தங்கள் மேலான கவனத்துக்குக்  கொண்டுவரலாமா?

நீங்கள் அளித்த அறிவுரைகளுக்கு நன்றி. என்னைத் திரும்பிப்பார்த்திருப்பதற்கு மகிழ்ச்சி.  கருத்துலகம் என்பது முரண்பட்டு இயங்கும் பல்வேறு தரப்புகளினாலேயே ஆனது. ஆகவேதான் நீங்கள் என்னுடைய கருத்துக்களை முரண்பட்டு விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள்.  தொடர்ந்து எழுதுவீர்கள். நல்ல விஷயம். ஆனால் ஐயா,  உங்களுக்கு நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அந்த உரிமை எனக்கு மட்டும் கிடையாதா?

கொஞ்சம் ஜனநாயகபூர்வமாகச் சிந்திக்கும்படி கோருகிறேன்

அன்புடன்

ஜெ

சின்னக்குத்தூசி

 

விமர்சனவடை

 

விவாதங்களின் எல்லை


விவாதம் என்னும் முரணியக்கம்

 

விவாதிப்பவர்களைப்பற்றி


இலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும்

 

 

முந்தைய கட்டுரைஓர் ஆயுர்வேதி
அடுத்த கட்டுரைகாடு, களம்-கடிதங்கள்