தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)

[முந்தைய பதிவின் தொடர்ச்சி… ]

DSC04888

வேலையும் மனைவியும் அமைந்தவன் பாக்கியசாலி என்பார்கள். நாஞ்சில் நாடனுக்கு ஆச்சி அமைந்தது நல்லூழ் – இரண்டுபக்கமும்தான். ஆனால் அவருக்கு வேலை அமையவில்லை. ரசனையும் நகைச்சுவையும் உடையவரான நாஞ்சில் நாடன் உள்ளே செலுத்தப்பட்ட சட்டையும் பாண்ட்டும் பூட்சும் ப்ரீ·ப்கேஸ¤மாக ஊர் ஊராக அலைந்து, மில் கம்பெனிக்காரர்களைச் சந்தித்து, பச்சைப்புன்னகை பெய்து, ரெடிமேட் ஆங்கிலத்தில் பேசி ,அவர்களுடைய கடுமையான முகங்களில் மெல்லமெல்ல புன்னகையைத் தருவித்து, சரக்குக்கு ஆர்டர் எடுத்து வந்து, மேலும் எடுத்திருக்கலாமே என்று மேலதிகாரியின் ராஜதந்திரப் புன்னகை தவழும் வசைக்கு ஆளாகி, ‘தாயோளி’ என்று இனிய புன்னகைக்குள் நினைத்தபடி வீடுதிரும்பும் வாழ்க்கை கொண்டிருந்தார்.

1994 ல் மில் எந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ‘பிராடி அன் கோ’வின் கோவை விற்பனை அலுவலகத்தில்  நான் அவரைப்பார்க்க முதல்முறையாகப் போயிருந்தபோது குளிர்வசதி செய்யபப்ட்ட சிறிய அறைக்குள் யாரிடமோ “நீங்க செருப்பால அடிக்கது என் பாக்கியமுல்லா? சரி சரி… வாறேன் நேரில வந்து உங்க கால நக்குதேன்… ஓக்கே” என்று ஆங்கில மொழியில் வேறு சொற்களில் நயமாகச் சொல்லி என்னைப் பார்த்து “நாறத்தேவ்டியாப்பொழைப்பு ஜெயமோகன். நான் முடிவு எடுத்தாச்சு…” என்றார்

நான் பீதியுடன், “என்ன?” என்றேன்.

“ரிசைன் பண்ணப்போறேன். பாத்தேளா?” என்றார்.

சீராக டைப் அடிக்கப்பட்ட ராஜினாமா கடிதம். “சர் ஐ ஹியர் பை இன்கிளைண்ட் டு சே த ·பாலோயிங் ·பாக்ட்ஸ்..” என்று ஒரு கண்ணீர்க் காவியம்.

“நல்லா நாலுபக்கமும் யோசிச்சுப் பாத்தாச்சு. மனுஷனுக்கு வாயும் வயிறும் மட்டுமில்ல மானமும் ஈனமும் இருக்கில்லா? சும்மா… எல்லாத்துக்கும் ஒரு லிமிட் உண்டு ஜெயமோகன். புழுவானாலும் போட்டு சமுட்டினாக்க எதுத்து கடிக்கும் பாத்துக்கிடுங்க… என்னான்னு நெனைக்கானுகோ?”

“அதுசரி… ஆனா இப்ப ராஜினாமா செய்யுகதுண்ணா பல பிரச்சினை இருக்கே?”

“இருக்கு. ஆனா நான் எல்லாத்தையும் தீர விசாரிச்சாச்சு…” நாஞ்சில் நாடன் ஒருசில காகிதங்களைப் பரப்பினார். அதில் விரிவான கணக்குகள். “பாத்தேளா ஷேரிலே இவ்ளவு இருக்கு. கொஞ்சம் பிஎ·ப் கிராஜூடி தருவான். மிச்சம் அங்கிண இங்கிண சேவிங்ஸ் கொஞ்சம் இருக்கு… சங்கீதா படிப்ப முடிக்குதவரைக்கும் ஓட்டிக்கிடலாம். பின்ன அவ என்னமாம் சம்பாதிப்பாள்ல? பின்ன என்ன ஜெயமோகன், மனுஷனானா மனுஷன மாதிரி வாழணும். இது என்ன பொழைப்பு?”

“சரி.ஆனாலும்…”

‘ஒரு ஆனாலும் இல்ல.. ஊருக்குப்போயி நாலு காய்ச்சில் சேம்பு சேனைண்ணு நட்டாலும் ஒருத்தனுக்கும் தலைய குனிக்காம மனுஷனா வாழலாம்… நான் முடிவுசெய்தாச்சு…”

“யோசிக்கணும்..”

“என்னத்த யோசிக்கிறது? பாருங்க உக்காந்து நிம்மதியா ஒரு கதை எழுத முடியல்ல. ஒரு புஸ்தகத்த ஒழுங்கா வாசிச்சு முடிக்க முடியல்ல… உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன ஜெயமோகன், பாதிக்கதைகளை சும்மா பணம் குடுக்கனேன்னு அவசர அவசரமாட்டு எழுதிக்குடுக்கேன்… இனி அதெல்லாம் முடியாது. அவ்ளவுதான். எழுதியாச்சு. உள்ளதச் சொல்லப்போனா இத எழுதினம்பிறவுதான் ஒரு நிம்மதி மனசுக்கு…”

நான் அதே உச்சகட்ட அச்சத்துடன் சுந்தர ராமசாமிக்கு ·போன்செய்தேன். “சார் நீங்க நாஞ்சில் நாடன்கிட்ட பேசுங்க. ரிசைன் செய்யப்போறார்னு சொல்றார்”

“சொல்லிட்டாரா? சரிதான்”

“இல்ல சார்…”

“ஜெயமோகன், அவரு அந்த லெட்டரை எழுதி பதினஞ்சு வருஷத்துக்கு மேலே ஆகும்னு நினைக்கிறேன். அதெல்லாம் அப்டி குடுத்திர மாட்டார்… பேசாம வாங்கோ… அதிலே புதிசா ஏதாவது நல்ல ஸென்டன்ஸ் இருந்தா அப்றமா சொல்லுங்கோ”

மறுநாள் நான் பிராடிக்குப் போனேன். நாஞ்சில் நாடனின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கரிய மலையாளி தாண்டிச்சென்றார்.

“ஜெயமோகன் இந்த ஆளை நல்லா பாத்துக்கிடுங்க… என்னைக்குன்னாலும் இவன் உசிரு என் கையாலதான்… நான் செயிலுக்கு போகணும்ணு ஜாதக விதி இருக்கு பாத்துக்கிடுங்க…”

எதிர்காலத்தில் கொலையாகப்போகும் சிரியன் கிறிஸ்தவர் உள்ளே ·போனில் தன் விதியைப்பற்றி அறியாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

“யாரு இவரு?”

“எங்க மேனேஜர்…” நாஞ்சில் நாடன் அப்போது துணை விற்பனை மேலாளர். “என்ன அழும்பு பண்ணுகான் தெரியுமா? அயோக்கியபப்ய. ஒரு வேலையும் செய்யுகதில்ல. மில் ஓனர்மாரிட்ட ஐஸா கொழைஞ்சு பேசுவான்… மத்தவனுக அவனுக்கு மயித்துக்குச் சமானம்…. நான் என்ன சொல்லுகேண்ணா இந்த மலையாளிகளையே சேத்துவச்சுக் கொல்லணும்… என்ன நெனைக்கிறீய?”

“செய்யவேண்டியதுதான்” என்றேன்

“ஸ¤ப்ரமண்யம்!” என்று பக்கத்து கேபினில் மலையாள அழைப்பு. “சார்!” என நாஞ்சில் நாடன் பாய்ந்தோடினார்.

நான் இங்கிருந்து பார்க்கையில் அது ஒரு அலுவலக உரையாடல் போலவே தெரியவில்லை. காதல்கொண்ட இருவர் மத்தியில்தான் அப்படி ஒரு பூரிப்பும் முகமலர்ச்சியும் வெளிப்பட முடியும். சிரிப்பு முகமன் கொஞ்சல் குலாவல். நாணமும் உண்டு.

கதவைச் சாத்திக் கொண்டு வந்து ·பைலை மேஜைமேல் போட்ட நாடன் “…நிக்க வச்சு கொளுத்தணும்…” என்றார்.

கோவை ராம்நகரிலேயே அலுவலகம் இருந்ததனாலும் நாஞ்சில் நாடன் எந்த இலக்கிய நாடோடிக்கும் சாப்பாடும் வழிச்செலவும் முடிந்தால் திரவச்செலவும் அளிப்பவர் என்பதனாலும் பொதுவாக அவ்வலுவலகத்தில் இலக்கிய நடமாட்டம் அதிகம்.

நாஞ்சில் நாடனின் குணத்தில் முக்கிய அம்சம் அவரால் எவருக்கும் எதற்கும் ‘முடியாது’, ‘இல்லை’ என்று சொல்ல முடியாது என்பதே. “என்ன சொல்லுகேண்ணா…”, “அதாவது இப்ப இருக்கிற நிலைமையிலே”, ” உள்ளதச் சொல்லப்போனா…”, என்றெல்லாம் தான் ஆரம்பிக்க முடியும். கொஞ்சம் கட்டாயபப்டுத்தி அவருக்கு கால் லிட்டர் விளக்கெண்ணையைப் புகட்டிவிடமுடியும். சிந்தி எருமை மேலேயே கடித்து உறிஞ்சும் இலக்கிய ஒட்டுண்ணிகளுக்கு இது நல்ல மென்மையான சருமம்.

புகழ்பெற்ற கவிஞர் அடிக்கடி வருவார். அவரது வருகை கல் நெஞ்சையும் கரைக்கக் கூடியது. பரட்டைத்தலை. பரிதாபகரமான தாடி. பவ்யத்தின் பவ்யமான தோற்றம். “சுப்ரமணியம் சார்வாள் இருக்காரா?” நாஞ்சில் நாடன் மனமுருகி சாப்பாடு போட்டு செலவுக்காசும் கொடுத்து அனுப்புவார். போனவேகத்திலேயே பந்து திரும்பிவரும். இம்முறை அம்பிக்குள் இருந்து அன்னியன் வெளியே வந்திருக்கும். “டேய் நாஞ்சில் நாடா, வெளியே வாடா.. டேய் உனக்கு கவிதை பத்தித் தெரியுமாடா? டேய் விடிய விடியப் பேசுவோம்டா… பேசுவோமா? டேய், புதுமைப்பித்தன் போனான் நான் வந்து நிக்கிறேண்டா…டேய்…”

நாஞ்சில் நாடன் லாட்ஜில் அறைபோட்டுக் கொடுத்த கவிஞர்கள் அங்கிருந்து பெட்ஷீட் போர்வைகளை மடித்து எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் சொன்னார் என நாலாபக்கமும் கடன் வாங்கிவிட்டு ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். பத்துவருஷம் முன்னால் வந்து நின்றுபோன சிறுபத்திரிகைக்கும் வரவே வராத சிறுபத்திரிகைக்கும் அவரிடம் ஆயுள் சந்தாவை கட்டாயபடுத்தி கண்ணீர் மல்கவைத்து வாங்கியிருக்கிறார்கள்.

சிற்றிதழ் சார்ந்த ‘ஒட்டுண்ணித் தொந்தரவு’ எல்லாருக்கும் உள்ளதுதான் என்றாலும் நாஞ்சில் நாடன் அளவுக்கு அதனால் துன்பமடைந்தவர்கள் குறைவு. நாஞ்சில் நாடன் மூக்குக் கண்ணாடியை ஏற்றிப்போட்டபடி “…குறிவச்சு நம்மளைத்தேடி வராங்க ஜெயமோகன்… பயம்மா இருக்கு” என்றார்.

“ஒண்ணுரெண்டு வாட்டி குடுக்கப்பிடாது, நாஞ்சில். முரட்டுத்தனமா துரத்தி விட்டிரணும்” என்றார் [தமிழினி] வசந்தகுமார், “நம்மகிட்ட எவனுமே வரதில்லியே”

“அப்டி பாக்க முடியுமா? அவனும் நம்பியில்லா வாரான்?” நாஞ்சில் நாடன் சொன்னார் “வந்து எறங்கியிருதான். கையிலே அஞ்சு பைசா இல்லாம… என்ன செய்றது? அவன் ஊரவிட்டு போனாத்தானே நமக்கு நிம்மதி…”

“இதெல்லாம் கோழைத்தனம்” வசந்தகுமார் சொன்னார். “இந்த ஒட்டுண்ணிகள் என்ன எழுதியிருக்காங்க? ஒண்ணுமே இல்ல. சரி எழுதவேண்டாம், படிப்பாங்களான்னு கேட்டா அதுவுமில்ல. அப்ப அவனுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்? நாலு எழுத்தாளர்கள் அட்ரஸ் கையிலே இருந்தா இலக்கியவாதி ஆயிடலாமா? தமிழிலே நல்லா எழுதக்கூடிய பல இளைஞர்கள் கடுமையா வேலைசெய்து குடும்பத்த காப்பாத்திட்டு ஓய்வு நேரத்த சேமிச்சு எழுதிட்டிருக்காங்க. அவங்களுக்கு யாரும் ஒண்ணும் பண்றதில்ல…”

“அதுவும் சரிதான்…”, நாஞ்சில் நாடன் பெருமூச்சுவிட்டு, “அண்ணைக்கு பாருங்க ஆடிட்டிங். மேலேருந்து ஏகப்பட்டபேரு வந்திருக்காங்க. நான் மேனேஜர் ரூமிலேருந்து வந்து பாத்தா என் ரூமிலே இவரு உக்காந்திருக்கார். எனக்கு திக்குன்னு ஆகிப்போச்சு. ராத்திரி கரெண்டு போய் சிடி உள்ள சிக்கிகிட்டா ஒரு வெப்ராளம் வரும் பாருங்க… அதுமாதிரி.. நெலை கொள்ளல்ல… பாத்தேன் ஒரு முந்நூறு ரூபாய எடுத்துக் குடுத்தேன். என்னமோ சாமிப்பிரசாதத்த வாங்கிகிடுகது மாதிரி பொத்திக் கும்பிட்டு வாங்கிட்டு போறார்…”

“என்ன சிடி?” என்றேன்

“அப்றமா வந்தாரா?” என்றார் வசந்த குமார்

“அதானே நேக்கு. முந்நூறு ரூபாய்க்கு சரக்கு ஏத்திட்டாருண்ணாக்க அவரால கடைவாசலை தாண்டமுடியாது. மறுநாள் காலம்பறதான் எந்திரிப்பார்..”

“என்ன சிடி அது நாஞ்சில்?”

“இப்டி குடுத்தே ஒரு தலைமொறைய உருவாக்கிட்டீங்க நாஞ்சில். இப்ப பாருங்க அதேமாதிரி அடுத்த வரிசை ஆளுங்க உருவாகியாச்சு…. நீங்கதான் ஆபீசராச்சே. பியூன் கிட்டே சொல்லி இனிமே உள்ளவிடாதீங்கன்னு சொன்னா என்ன?”

“அதெப்டி? பிரம்மஹத்தி வாசலிலே உக்காந்திரும்ணுல்லா சாஸ்திரம்?”

“என்ன சிடி அது?”

“சும்மா இருங்க ஜெயன்… நடுவிலே பூந்துட்டு…” வசந்தகுமார் சொன்னர் “…இதெல்லாம் அனாவசியம். எந்தத் தொழிலுக்கும் அதுக்குண்டான ஒரு தர்மம் உண்டு. திருடன்கூட ஒரே வீட்டில நாலுவாட்டி நுழைய மாட்டான்”

ஒருவழியாக நாஞ்சில் நாடன் ஓய்வு பெறும் நாளை நெருங்கினார். அவரது கணிதத் திறமை உச்சத்தில் வெளிப்பட்ட நாள்கள். “எக்ஸ்டென்ஷனுக்கு வாய்ப்பிருக்காண்ணு தெரியல்ல… கம்பெனிக்கு நம்மளை தேவை இருக்கு… நைஸா பேசிப் பாப்போம்” ஒன்றும் நடக்கவில்லை. கருணைமனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒருவருடம் ஒன்பதுமாதம் ஆறுமாதம்.. நூற்றி ஐம்பத்தி மூன்று நாட்கள்… இரண்டாயிரத்தி நாநூறு மணி நேரம்..

ஒரு தாளில் நிமிடக் கணக்கில் அதைப்போட்டு வைத்திருந்தார். “சார் இது ஒரு நல்ல கதையா இருக்கும் போலிருக்கே” அக்கதை ஓம் சக்தியில் வெளியாகியது. ஓய்வு பெறும்போதுள்ள செலவுகள் முதலீடுகள் வட்டிகள் வரவுக் கணக்குகள். ·போன் செய்தாலே பிலாக்காணம்தான். ‘…ஒண்ணும்புரியல்ல ஜெயமோகன். சங்கீதாவுக்கு படிப்பு முடியதுக்கு இன்னும் நாள் இருக்கு. பையன் வேற எஞ்சீனியரிங் போறான்… என்ன செய்யதுண்ணு தெரியல்ல.. தம்பிக இருக்கானுக. ஒண்ணும் பயப்படாதேண்ணு அவனுக ஆயிரம் மட்டம் சொல்லியாச்சு. இருந்தாலும் நம்ம பிள்ளைகளுக்கு நாம கஷ்டப்பட்டு செய்தாத்தானே ஒரு நெறைவு…”

ஓய்வுநாள். உச்சக்கட்ட ரத்த அழுத்தம் இருந்த நாள்கள். ” ஒருவழியா ஏறக்கட்டியாச்சு… இனி அந்தப் பார எளவ தொடவேண்டாமுல்லா…. இனி ஒரு மனுஷன மாதிரி வாழணும்… நாவல் ஒண்ணு யோசிச்சிருக்கேன். எழுதணும். நம்ம பூர்வீகம் முனிஞ்சிக்கரப்பட்டி மூலக்கரைப்பட்டி. அங்கேருந்து முப்பாட்டன் காலத்திலே வந்து வீரநாராயண மங்கலத்திலே குடியேறியிருக்காங்க. எங்க அம்மைக்கு நெடுமங்காடு. மலையாளமெல்லாம் மறந்துபோச்சுண்ணாலும் மீன் கொழம்பிலே மலையாள வாசனை வீசும்… எல்லாத்தையும் பத்தி ஆற அமர உக்காந்து ஒரு நாவல் எழுதிரணும்… என்னன்னு சொல்றீக? சும்மா இதுவரை பூட்ஸ¤ம் டையும் கட்டிட்டு வாழ்ந்தாச்சு.. நெறைய படிக்கணும். புஸ்தகம் குமிஞ்சு கெடக்கு வீட்டிலே”

ஓய்வு பெற்று ஒரு இரண்டுவாரம் சட்டைபோடாமல் சாயவேட்டியும் ஈரிழைத்துவர்த்துமாக வீட்டில் இருந்தபின் வாழ்க்கையே காலியாகக் கிடந்தது. ஆகவே அதுவரை செய்துவந்த அதே ‘சீண்டிரம் பிடிச்ச’ தொழிலை தனியாகச் செய்வதென ஆரம்பித்தார். நாஞ்சில் ஏஜென்ஸீஸ் தொடக்கம். புரப்ரைட்டர்  ஆச்சிதான். சுப்ரமணியம் பிள்ளை அலுவலக உதவியாளர் கம் டிராவலிங் சேல்ஸ்மேன். கையில் பிரீ·ப் கெஸ¤ம் ஷ¥வுமாக மீண்டும் அதே மில்கள் தோறும் பயணம்.

“சும்ம இருந்தா ஒருமாதிரி வெக்ஸ் ஆயிடுது…. அதாக்கும் கெளம்பியாச்சு…” நாஞ்சில் நாடனுக்கு ஆழமான அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அலுவலகத்தில் சம்பாதித்த அதே தொகையை, சமயங்களில் அதைவிடவும் அதிகமாகக் கூட, அதேவேலையை தனியாகச் செய்து சம்பாதிக்க முடிந்தது. வாரத்தில் ஒருசில நாள்கள் மட்டுமே வேலை. அவரது ‘கிளையண்டு’களில் பாதிபேருக்கு அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்று தெரியும். அவருக்காகத்தான் அவரது நிறுவனத்துக்கு உத்தரவுகள் அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

“மோசம் போயிட்டேன் ஜெயமோகன். அப்பவே வெளியே வந்து இதைச் செஞ்சிருந்தா இப்ப காரும் பங்களாவுமா எங்கியோ இருந்திருப்பேன்… இப்ப மில்தொழிலே டவுனாக கெடக்குத காலகட்டம்… இப்பவே நமக்கு இந்த ஆர்டர் வருதுண்ணா.. என்னத்த சொல்ல…”

“சார்… எண்ணையபோட்டு மணலிலே பொரண்டாலும் ஒட்டுற மணல்தானே ஒட்டும்…” நான் மேலும் பழமொழிகளுக்காக மனதுக்குள் துழாவினென். ‘காதறுந்த ஊசியும் வாராது கடைவழில்க்கே’ அது பொருத்தமாக படவில்லை. வேறு? ஒன்றும் தகையவில்லை

நாஞ்சில் நாடன் ஆழமாகப் பெருமூச்செறிந்தார். ஆத்மாவே புகைந்து கருகும் மணத்துடன் வெளியேறுவதுபோல.

“என்னமாம் எழுதினீங்களா சார்?”

“என்னத்த எழுத? நாவல் அங்கிண கெடக்கு. முடிக்கணும். நாலஞ்சு கட்டுரை எழுதினேன். கும்பமுனி சிறுகதை இருக்கு, எழுதணும். நாளைக்கு மதுரைக்குபோய்ட்டு அப்டியே ராஜபாளையம் போய் வந்து மறுநாளே பாலக்காடு போகணும். அடுத்த திங்க்கக்கிழமை நேரம் கெடைக்கும்ணு தோணுது பாப்போம். எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்குல்லா?”

[தொடரும்]

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Dec 28, 2007 @ 0:04

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72