தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)

[முந்தைய பதிவின் தொடர்ச்சி… ]

 

b

நாஞ்சில் நாடன் எம்.எஸ்.ஸி படிப்பை முடித்த பிறகு வேலைதேடி பம்பாய்க்குச் சென்றார். அதற்கு முன் அவரது நகர அனுபவம் என்பது மாதுரை நகரின் ‘கிழ தாசி போன்ற’ வைகையும் தூசியும் கருமை படிந்த கோபுரங்களும் சுந்தரேஸ்பரரின் விபூதியும்தான். அவசரமாக நாகர்கோயில் ஒழுகிணசேரி தையல்காரரிடம் தைத்த, எல்லா விதமான சுப்ரமணியன்களுக்கும் பொருந்தகூடிய பாண்ட்டும் சட்டையும் அணிந்து ஒல்லியான உடல் மீது பதைக்கும் கண்கள் கொண்ட பெரிய தலையும் பவ்யமான சிரிப்புமாக பம்பாய்க்குச் செல்லும் நாஞ்சில் நாடனை இப்போதும் காணமுடிகிறது. நவீனத் தொழில் நாகரீகம் சுழித்து அலறி ஓடும் மாநகரத்தில் விக்டோரியா டெர்மினலில் நாஞ்சில் நாட்டிலிருந்து தகரப்பெட்டியுடனும் கரிமுகத்துடனும் வந்திறங்கும் ராமசாமிகள், சுப்ரமணியங்கள், கணபதியா பிள்ளைகள், அம்புரோஸ¤கள், தாவீதுகள் நடுவே அவருக்கும் ஒரு இடம் காத்திருந்திருக்கிறது. அதை எப்படியேனும் சென்றடையும் வைராக்கியம் அவரது நெஞ்சுக்குள் வறுமையால் உருவாக்கப்பட்டிருந்தது.

நாஞ்சில் நாடனுக்கு பம்பாய் என்றால் எறும்பரித்துக் கொண்டு செல்லும் புழுபோல நகரும் மாநகர் மின்ரயிலும், தெருவை அறுத்துச்செல்லும் சாக்கடையை பிரீ·ப் கேஸ¤டனும் ஷ¥க்காலுடன் தாவிக்கடக்கச்செய்யும் இடுங்கிய தெருக்களும்  கக்கூஸ் போக முறை வைத்துக் காத்திருக்கும் அறையும் இரவுத்தூக்கத்திற்கு முன் நெஞ்சில் தெளிந்து வரும் நாஞ்சில் நாட்டு நினைவுகளும்தான். தன் கதைகளில் மீண்டும் மீண்டும் அந்தச் சித்திரத்தை நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.

“பம்பாய்க்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு. எங்கியும் சாப்பிடலாம். எங்கியும் தூங்கலாம் யாரும் கேக்க மாட்டாங்க. பம்பாய் மாதிரி சீப்பா சாப்பாடு கெடைக்கிற எடத்தை பாத்ததே இல்லை. பாவ்பாஜி ரெண்டு சாப்பிட்டா  ஏப்பத்தில மணமா இருக்கும். மறுநாளைக்கு கூட மணம் இருக்கும், வேற மாதிரி…” என்றார் நாஞ்சில் நாடன்.

“சப்பாத்தி நல்லா சொளவு மாதிரி குடுப்பான். தொட்டுக்கிட உப்பும் வினிகரும் போட்ட பெரியவெங்காயம் போதும்ணாக்க ஒரு பிரச்சினையும் இல்ல. ஒரு சோடா கலர் குடிக்கிற காசிலே சாப்பிட்டுடலாம். ரொம்ப குளிர் கெடையாது. டிசம்பர் ஜனவரி தவிர மத்த நாட்களில ஒரு மாதிரி சமாளிச்சுகிட்டு தூங்கிடலாம். ·பாங்க் இல்லாட்டி பட்டை அடிச்சா கொசுக்கடி தெரியாது. கொசுதான் தலைசுத்திக் கஷ்டப்பபடும்.. ஏழைகளுக்கு ஏத்த நகரம்….”

“பம்பாயில் சேட்டுகளுக்குப் பெரிய பந்தா எல்லாம் கிடையாது” என்றார் நாஞ்சில் நாடன். அவர்கள் பரம ஏழைகளையும் மனிதனாக மதித்தார்கள். காரணம் அவனும் சில்லறைக் காசு வைத்திருக்க வாய்ப்புண்டே. சேட்டு முயன்றால் அந்தப் பணம் அவரது முந்திக்கு வரக்கூடியதுதானே? நடுத்தெருவில் கண்டஸா காரை நிறுத்தி வைத்து கதவை பாதித் திறந்து தையல் இலையில் பானிபூரி பேல்பூரி சாப்பிடும் சேட்டு குதப்பும் பலூன் வாயில் சிறிய சிவந்த உதடுகளுடன்  சொந்தமாக அதட்டி மேற்கொண்டு சட்டினி வாங்கிப் போட்டுக் கொள்வார். சாப்பிடுவதற்கென்றே ஆண்டவன் படைத்த உயிரினமான சேடாணி கொடுத்த காசுக்கு கடைசித்துளி வரை சட்டினி வாங்குவதற்காக கணவனுக்கு ஊக்கம் அளிப்பாள்.”

“ஒரு மாதிரி நியாயத்துக்குக் கட்டுபட்ட ஊர். அநியாயத்த பத்தி நினைக்கணுமானா ஞாயித்துக்கிழமை நினைச்சாத்தான் உண்டு. அண்ணைக்கு தோத்தி குர்தா நனைச்சுக் காயப் போடணும். கடைக்கண்ணிக்கு போகணும். மாசந்தோறும் அளவு மாறுத பொண்டாட்டிக்கு ஜாக்கெட் தைக்க குடுக்கணும்…. எல்லா கஷ்டத்திலும் ஒரு நட்பும் உறவும் இருந்தது அங்க ஜெயமோகன். எனக்கு பம்பாயை பிடிச்சிருக்கான்னு கேட்டா பிடிச்சிருக்குண்ணு தான் சொல்லணும். ஆனா எப்பமும் அங்கேருந்து தப்பி வாறதைப்பத்தியே தான் நினைச்சிட்டிருந்தேன்.”

நேர் எதிராக அவரது ‘வீரின’மங்கலம் பாசத்தைச் சொல்லலாம். அதை அவருக்குப் பிடித்திருந்ததா என்று கேட்டால் பிடிக்கவில்லை. அங்குள்ள ‘குடிக்கிற தண்ணியிலே குஞ்சாமணியை விட்டு ஆழம் பார்க்கிற’ வெள்ளாளார்கள் , உளுந்தங்களியும் முந்திரிக்கொத்துமாக நகரப்பேருந்துக்கு நிற்கும் போது சர்வதேச உளவு நிறுவனங்களுக்கு உரிய கண்களுடன் ஆட்களை நோட்டம் போடும் வெள்ளாட்டிகள், வெற்றிலைப்பாக்குக் கடைகளில் தினத்தந்தியில் ‘நடிகை அசின் தொழிலதிபராமே?’ ‘ஆமாம். தொழில் விரிவாக நடப்பதாகக் கேள்வி’ போன்று குருவியார் அளிக்கும் ஞானப்பிசிறுகளை அள்ளி விழுங்கும் பிளஸ் டூ படிப்பாளிகள். பஸ்ஸை விட்டு ‘வீரின’மங்கலத்தில் இறங்கினாலே நாஞ்சில் நாடனுக்கு கசப்பும் கரிப்பும் வந்துகொண்டே இருக்கும்.

ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் வந்துகொண்டே இருக்க விரும்பும் ஊர் இது. அங்கே இன்னும் ஆறு ஓடத்தான் செய்கிறது. சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு முட்டளவு நீரில் திருப்பதியில் கொடிமரத்தடியில் சாமிகும்பிடுதல்போல விழுந்து குளித்து துவட்டிப் போகலாம். .ஆற்றங்கரை முழுக்க  சடை விரித்த ஆலமரங்கள். கல்யாணத்துக்கு பந்தல்கால் நாட்டும்போது ஆற்றங்கரையில் ஒரு ஆலமரக்கிளை நடும் வழக்கம் அவர் ஊரில் உண்டு. பல மரங்கள் இப்போது படர்ந்து பந்தலித்துவிட்டன. “பிது எங்க சித்தப்பா சித்திய கட்டுறப்ப நட்டமரம்…” கல்யாணம் ஆனவர்கள் பேரன் பேத்தி எடுத்து கனிந்து தளர்ந்துவிட்டார்கள். விழுதோடிப்பரவும் மரத்துக்கு முறித்த கிளைகளின் வடுவல்லாமல் ஒன்றும் பங்கம் இல்லை.

நாஞ்சில் நாடன் அவர் படித்த பள்ளியில் ஒரு இலஞ்சிமரம் நட்டார். “நான் நட்ட மரம் பாத்துக்கிடுங்க. இந்தா தண்டி இருக்கு. நாம போனாலும் அது அங்க நிக்குமில்லா?”என்று சொன்னபோது பெரிய கண்ணாடிச்சில்லுகளில் மரக்கிளைநிழல்கள் ஓடும் கார் வேகத்தில் பின்னகர்ந்தன. உணர்ச்சியை அவதானிக்க முடியவில்லை. “செகண்ட் ஷோ சினிமா விட்டால் அம்பது பைசா பொரிகடலையை தின்னுட்டு திருப்பதிசாரம் வழியாட்டு நடந்தே வந்திருவோம். இப்ப நெனைச்சா முகுது வலிக்குது”

அந்தக் காலத்தில் நாஞ்சில் நாடன் சரியான தீனா மூனா கானா. திமுக பதவிக்கு வந்த முதல்தேர்தலில் அம்பாசிடர் காரில் மைக் கட்டி தொண்டை உடையும்வரை செந்தமிழில் சொல்லடுக்கிப் பிரசாரம் செய்தவர். அண்ணாத்துரை இறந்தபோது மொட்டைபோட சென்னைபோகவேண்டுமென காசுக்குப் பரிதவித்து சித்தப்பாவிடம் அடிவாங்கி அமைந்தவர். இப்போது என்ன சொல்கிறார்? “அப்ப காமராஜ் சொன்னார் தமிழ்நாட்டில் விஷ விருட்சம் உள்ளே நுழைஞ்சிட்டுதுன்னு…  அது சரியான பேச்சு…இனிமே லேசிலே வெட்ட முடியாது.” பின்னர் அவரது மனம் திராவிட இயக்கத்தின் தமிழ்க் கூச்சலை ஒரு கசப்பான சிரிப்புடனல்லாது எண்ணிக் கொண்டதில்லை.

வேலை மாறி நாஞ்சில் நாடன் கோயம்புத்தூருக்குத்தான் வந்தார். அது ஒரு தமிழக பம்பாய்தான் அவருக்கு. இருபது வருடங்களாக அங்கே வாழ்ந்தும் அவர் அந்நிலத்தவராக ஆகவில்லை. முள் ஆடி ஆடி வீரநாராயண மங்கலத்திலேயே வந்து நிற்கும். ஆனால் அவருக்கு கொங்கு கவுண்டர்கள் மேல் உள்ள மோகம் அபாரமானது. “அருமையான ஆட்கள்… அன்பா நடந்துகிடுயது எப்டீண்ணு அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிடணும்…” அவருக்கு அவரது பயணங்களில் பல சிற்றூர்களில் மனமுவந்து உபசரித்து அன்னமிட்ட கவுண்டச்சிகளின் நெஞ்சை நிறையவைக்கும் நினைவுகள் உண்டு. பல உறவுகள் மிக ஆழமானவை. இப்போதும் தொடர்பவை. “மண்ணில பாடுபடுத ஜனம். அவங்களுக்கு அதுக்குண்டான ஒரு பண்பாடு இருக்கு. அது மத்தவங்களுக்கு வராது” என்பார் நாஞ்சில் நாடன்

சமீபத்தில் ஓய்வுபெற்றபின் ஊருக்கே வந்துவிடுவார் என்று வேதசகாய குமார் சொன்னார். வரமாட்டார் என்றேன். அவருக்கு சற்று தூரத்தில் நின்று வீரநாராயண மங்கலத்தைப் பார்த்தால்தான் அதை சகித்துக் கொள்ள முடியும். கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வீட்டில் இருந்துகொண்டு ‘நல்ல காலம் பொறந்து’ வீரநாராயண மங்கலம் ஏகும் பொன்னாளைக் கனவு கண்டுகொண்டிருப்பார் என்றேன். அவரால் கொங்குமண்ணை விட்டு வரவே முடியாது. அதுதான் நடந்தது.

நாஞ்சில் நாடன் அரைநாள் விடுப்பில் வீர நாராயண மங்கலம் வந்தால்கூட கிட்டத்தட்ட பத்து சொந்தக்காரர் வீட்டுக்கு போய் வருவார். தம்பி தங்கைகள், சித்தி பிள்ளைகள், மச்சினிகள். மருமக்கள், கொழுந்தியாள்கள். போகிற வழியில் நல்லதாக ஒரு கட்டு முருங்கைக்காய் வாங்கிக் கொள்வார். மலிவாகக் கிடைத்தால் பூமுள் கொண்ட வெண்டைக்காய் நாலு கிலோ. அல்லது ஊதாப் பளபளப்புடன் கத்திரிக்காய். சாளைமீன்கூட வாங்கிக் கொண்டுபோனதாக வேதசகாயகுமார் சொன்னார். மதினிகளைப் பொருத்தவரை அவர்கள் ஆத்மாவுக்குள் நுழையும் சாவிக்கொத்துடன் தேவதூதனே வந்ததுபோலத்தான். நாஞ்சில் நாடனுக்குச் சமைக்கும்போதுதான் ஒரு பெண்ணின் உச்சகட்ட திறமை வெளிப்படுமென நினைக்கிறேன்.

திரும்பி கோவை போவதும் இதே சீரில்தான். குட்டிச்சாக்கில் நாலுகிலோ பொடியரிசி. [மச்சினிச்சி குடுத்தா. கொஞ்சம் பயறு உடைச்சுபோட்டு கஞ்சிவச்சு துள்ளி நெய்யும் விட்டு பப்படமும் ஊறுகாயும் என்னமாம் ஒரு துவரனும் வச்சு குடிச்சா மனசு நெறைஞ்சிரும்] மனதை வாய் வழியாக நிரப்ப முடியும் என நான் இதுவரை உணர்ந்ததில்லை. பெரிய மதினி கொடுத்த தேங்காய்; தம்பி கொடுத்த கருப்பட்டி; அம்மா கொடுத்த ஊறுகாய்; [இதை ஒரு முறை எனக்கும் கொடுத்தார்கள். அந்த அம்மா ஒரு ஊறுகாய் மேதை] அதன் பின் நாஞ்சில் நாடனே வடசேரி சந்தைக்கு முன்னால் போய் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து வாங்கும் முரல் கருவாடு [கருவாடுன்னா அதுக்கு ராஜா முரல்தான். வாளைய வேணுமானா அமைச்சராட்டு வலப்பக்கம் இருத்தலாம்] தவறவே விடாத முந்திரிக்கொத்து, வாழைக்காய் சிப்ஸ், காராச்சேவு ஆகியவற்றை கோட்டாறு ஆஸ்பத்திரி முக்கில் நின்று வாங்கினால் பயணம் தொடங்கியாகிவிட்டது. கிட்டத்தட்ட நிலவுக்குப் போகும் ஆம்ஸ்ஸ்டிராங் போல. சமீப காலம் வரை நானும் வேதசகாய குமாரும் பஸ் வரை போய் நின்று பேசி பிரியாவிடை கொடுப்போம்..

அடுத்த நாளுக்கு அடுத்த நாளே நாஞ்சில் நாடன் மீண்டும் சுடச்சுட நாகர்கோயிலில் தென்படுவார். “கொழுந்தியா மக சடங்காயிட்டா… நாளைக்கு தண்ணி ஊத்து..” என்பார்.

“இப்பதானே வந்திட்டு போனீங்க?”

“அதுக்கென்ன செய்யியது? அவ சும்மால்ல வட்டாடிட்டு இருந்தா ஒரு க்ளூ கூட குடுக்கல்லியே”.

அதன் பின் வரிசையாக வளைக்காப்பு, பிரசவம், இருபத்தெட்டு கெட்டு, பிள்ளைகளுக்கு அவ்வையாரமன் சன்னிதியிலே காதுகுத்து, மொட்டை போடுதல்… இருக்கவே இருக்கிறது சிவலோகப் பதவியை அடைந்த மூத்தபிள்ளைவாள்களின் துட்டி விசாரணை, காடேத்து, பதினாறு அடியந்திரம். இன்னபிற. நாஞ்சிநாடன் வராமல் சொந்தத்தில் சடங்கு சம்பிரதாயம் இல்லை. “அவாள் இருக்கபப்ட்டது ஒருமாதிரி ஐஸரியம் பாத்தேளா?” என்று ஒருவர் ஒரு சடங்குவீட்டில் என்னிடம் சொன்னார்.

கல்யாணம் என்றால் அது ஒரு பலநாள் திருவிழா. பெண்பார்க்க வருவதில் தொடக்கம். பின்னர் நிச்சய தாம்பூலம், தாலிக்குப் பொன்னுருக்கு, பந்தல்கால் நாட்டல், தாலிகெட்டு, மறுவீடு, அடுக்களை பார்த்தல் எல்லாம் கழிந்து சகல கறிகளும் சென்றுசேரும் பரம்பொருளான  பழங்கறியில் ஆல்கஹால் அதிகரித்த பிறகே விடைபெற்றுச் செல்வார். நாஞ்சில் நாடன் உறவு வட்டாரங்களில் கல்யாணச் சமையலுக்கு குறிப்படி எழுதும் கௌரவம் முற்றிலும் அவருக்கே. வேறு ஆள் போட்டால் சரியாக வராது. இத்தனை கோட்டை அரிசிக்கு எத்தனை பனம்பாய், எத்தனை அகப்பை தேவை என்பதை யூக்ளிட் போல கணித்துச் சொல்லிவிடுவார் என்பார்கள். [நாஞ்சில் நாடன் கணிதம் முதுகலை] அவர் பட்டியல் போட்டார் என்றால் வழக்கமாக மண்ணாந்தைகள் தவிர்த்துவிடும் விஷயங்களை முதலிலேயே போட்டுவிடுவார்.

அவரது கல்யாணவருகைகளில் எல்லாம் எனக்கும் வேதசகாய குமாருக்கும் அழைப்பிதழ் உண்டு. நாங்கள் முந்தினநாளே ‘கறிக்கு வெட்டுக்கு’ போய் சேர்ந்துவிடுவோம். நாஞ்சில் நாடன் சட்டையைக் கழற்றி துவர்த்தை தலையில் கட்டி தகரநாற்காலியில் சப்பணமிட்டு அமர்ந்தால் மொத்தக் காய்கறியையும் அவர்தான் வெட்டப்போகிறார் என்று தோன்றும். ஆனால் ஒரு ஏழுமணி அளவில் பையை திறந்து உள்ளிருந்து போளி, மைசூர் பாகு வகையறாக்களை எடுப்பார். சர்க்கரை வியாதிக்காரரான வேத சகாய குமார் தவிர்த்துவிடுவார். அதைவிட சர்க்கரை அளவு அதிகமானவரான நாஞ்சில் நாடன் “ஒருநாளைக்கு சாப்பிடலாம்… சும்மாவா வெள்ளக்காரன் மாத்திரயக் கண்டுபிடிச்சிருக்கான்?” என்பார்.

இலக்கியச் சர்ச்சைகள்; வேடிக்கைகள்; சிரிப்பு;. சுடச்சுட கட்டன் சாயா; அதன் பின் முதலில் பொரித்த வாழைக்காய் சர்க்கரை உப்பேரி; பின்னர் சூடாகக் கொட்டாங்கச்சியில் புளிசேரி வகையறாக்கள்; பிரம்ம முகூர்த்ததில்  வெல்லக்குமிழி வெடிக்க பிரதமன்;. அதன்பின் காலைச் சிற்றுண்டிக்கு ரசவடையாக ஊறவேண்டிய பருப்புவடையும் மீண்டும் கட்டன் சாயாவும். “இப்டி ராத்திரி பூரா இருந்து இலக்கியம் பேசினா நல்லாத்தான் இருக்கு இல்ல?” காலையில் நான் அரைப்போதை நிலையில் வீட்டுக்குப் போய் கட்டிலில் குப்புறப் படுப்பேன். நாஞ்சில் நாடனுக்கு மறுநாள்தான் வேலையே. பந்தியில் சாப்பிடவேண்டும். பந்தி விசாரிக்க வேண்டும். ஒரு முந்நூறு நாநூறு புன்னகைகள், முகமன்கள். ஐம்பது அறுபது விபூதிப் பூசல்கள். சாயங்காலம் கூப்பிட்டால் “ஜெயமோகன், மிஞ்சின அடைப்பிரதமனை சூடு பண்ணி குடிக்கேன். நல்லா கெட்டியாட்டு ஆகியிருக்கு. தேங்காப்பால் போட்டு சூடு பண்ணி எளக்கினது… நல்லாருக்கு”

தன் பெரிய குடும்பத்தை கடுமையான வறுமையிலிருந்து மீட்டு கரைசேர்த்த முன்னோடி நாஞ்சில் நாடன். ஒருகட்டம் வரை அவரது உழைப்பும் தியாகமும்தான் அவர் குடும்பத்துக்கு உணவாகியிருக்கிறது. இன்று அவரது குடும்பம் மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்ததாக உள்ளது. எல்லா தம்பிகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பொதுவாக இம்மாதிரி தியாகிகளை முற்றிலும் உதாசீனம் செய்யும் தம்பிதங்கைகளைப் பற்றித்தான் நாம் அறிந்திருக்கிறோம். நேர் மாறாக நாஞ்சில் நாடன் அவரது குடும்பத்துக்கு மதிப்பு மிக்க அரிய வரம் போல. அவரது தம்பிகளுக்கு மட்டுமல்ல, கொழுந்திகளுக்கும் கூட.

குற்றாலத்தில் பழைய குற்றாலம் செல்லும் பாதையில் டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் சமாதியிடத்தில் ஆழமான அமைதியில் பசுக்களின் கழுத்துமணி ஒலிக்கும் சூழலில் நினைவு விழா. அஞ்சலி நடந்துகொண்டிருக்கும்போது ஒரு ஃபோன் வந்தது நாஞ்சில் நாடனுக்கு. அவர் அனைத்தையும் மறந்து உரையாட ஆரம்பித்துவிட்டார். மறுமுனையில் அவரது தம்பியின் சிறு மகன். கொஞ்சல்கள், குலாவல்கள், வாக்குறுதிகள், நலம் விசாரிப்புகள். அந்தச் சூழலில் இருந்த அமைதியில் அவரது குரல் உரக்க ஒலிக்க நான் தர்மசங்கடமாக உணர்ந்தேன். இங்கிதத்தின் உச்சி என நான் நினைக்கும் நாஞ்சில் நாடன் அல்ல அது. சங்கடமாக இருந்தது. நாஞ்சில் உருகி வழிந்துகொண்டே இருந்தார்.

திரும்பி வரும்போது அருகே வந்த ஒரு முதியவர் சொன்னார். “கரெக்டா அவாள் அஞ்சலி நடக்கிறப்ப பிள்ளைச்சத்தம் கேட்டுது பாத்தேளா? இவரு கொஞ்சிப்பேசினது ரொம்ப நல்லா இருந்தது. அவாள் அப்டித்தான். பிள்ளைகள்னாக்க உசிரு. மீசையும் கண்ணுமா பிள்ளையளைப்பாத்து சிரிக்கிறப்ப அப்டியே சாமி மேலேருந்து வந்தது மாதிரி இருக்கும்…”என்றார்.

“நீங்க பாத்திருக்கிகளா?” என்றேன்.

“சின்னவயசுல பல தடவ திருநெல்வேலியிலே அவாள் வீட்டுக்குப்போய் பாத்திருக்கேன். பிள்ளையளைப்பாத்தா அவாளும் ஒரு பிள்ளைதான். எல்லாத்தையும் மறந்திருவார்…”

‘எல்லாவற்றையும்’ மறக்க வைக்கும்படி குழந்தைக்குரலால் ஈர்க்கபப்டுவது அனைவருக்கும் சாத்தியமல்ல. “பிள்ள வச்சிரு.. பெரியப்பா அப்றமா பேசுகேன்” என்று சொன்னால் அது நாஞ்சில் நாடனே அல்ல. சொந்தம் பந்தங்களில் நண்பர்கள் வீடுகளில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் என்றும் பிரியவரான சுப்பிரமணியம் தாத்தா அவரது ஆகிருதிக்கு முழுக்கச்செல்வதே குழந்தைகளுடன் விளையாட, தவழ ஆரம்பிக்கும்போதுதான்.

[தொடரும்]

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 28, 2007

முந்தைய கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7
அடுத்த கட்டுரைஅரசியல்வெளி