பெருவலி [சிறுகதை] -2

தொடர்ச்சி

[ 2 ]

கோமல் திரும்பி வந்துவிட்டார் என்று சுபமங்களா அலுவலகத்தில் சொன்னார்கள். “எப்படி இருக்கார்?” என்றேன். “நல்லாத்தான் இருக்கார்” “நடமாடுறாரா?” “இல்லை, ஆனா ஒக்காந்து பேசிட்டிருக்கார்.” அவரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ஸ்னேகா பதிப்பகத்தில் அச்சில் இருந்தது, மண். அதை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். அது அச்சானால் ஒரு பிரதியைக் கொண்டு சென்று அவருக்குக் கொடுக்க வேண்டும். அவர் இமயமுடிகளில், கைலாயத்தில் என்ன கண்டார் என்று கேட்கவேண்டும். சொல்லக்கூடும், அல்லது சென்று வந்த பெரும்பாலானவர்களைப்போல “சொல்லமுடியாது, நீயே போய்க்க வேண்டியதுதான்” என்று சொல்லவும் ஆகும்.

ஒருமாதம் கழித்துத்தான் சென்னைக்குச் செல்லமுடிந்தது. ஸ்னேகா பிரசுரத்தில் தொகுப்பு அச்சாகவே இல்லை. “வந்திரும் சார்” என்றார்கள். கோமல் வீட்டுக்கு கூப்பிட்டேன். யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. செல்வதா வேண்டாமா என்று தயங்கியபின் கிளம்பினேன். வீட்டு முன் யாரும் இல்லை. சிலமுறை கூப்பிட்டபோது கோமலின் மனைவி வந்து எந்த ஆர்வமும் இல்லாமல் “வாங்க” என்றார். கோமலின் மகள் மெல்லிய புன்னகையுடன் கடந்து சென்றாள். அந்த வீடுமுழுக்க மரணம் அமைதியின் வடிவில் பரவி விட்டிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும் டிவியிலோ எங்கோ கேட்பதாக நான் நினைத்த விசித்திர ஒலி கோமலின் குரல் என்று தெரிந்து என் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. முழுக்கமுழுக்க தன்னிலை மறந்து எழும் வலியின் ஒலி அது. எந்த மிருகமும் அந்த ஒலியைத்தான் எழுப்பும். முற்றிலும் கைவிடப்பட்டு, எந்த மனிதனிடமும் எதுவும் முறையிடுவதற்கற்றுப் போய், கண்ணுக்குத்தெரியாத ஒன்றை மட்டும் நோக்கி எழும் அழுகை. மன்றாட்டு அல்லது வசை அல்லது தன்னிரக்கம் அல்லது பிரார்த்தனை. அந்த வலியில் அவர் தன்னந்தனிமையாகவே இருக்க முடியும். அவரை ஆசிரியராக எண்ணுபவர்கள், அவரோடு தோள்சேர்ந்து நடந்த தோழர்கள், மனைவி, குழந்தைகள் அத்தனைபேரும் வேறெங்கோ, வேறேதோ உல்கில் வேறேதோ காலத்தில் நின்றுகொண்டு அவரைப் பார்க்கமுடியும் அவ்வளவுதான்.

“பாக்கணுமானா பாருங்கோ” என்றார் அவரது மனைவி. பேசாமல் திரும்பி விடலாமா என்றுதான் நினைத்தேன். திரும்புவதொன்றே உகந்ததும்கூட. ஆனால் ஒருவேளை அவர் என்னைத் தேடக்கூடும் என்று தோன்றியது. அப்படியென்றால் அவரைச் சந்திக்காமல் சென்றதைப்பற்றி நான் வருந்தக்கூடும். எழுந்து மெல்லக் கதவைத் திறந்தேன். அன்றுவரை அந்த அறையில் நான் உணராத ஒரு நாற்றம். மருந்துகளுடன் கலந்து எழுந்தது அது. படுக்கையில் கோமல் படுத்திருந்தார். முதல்பார்வையில் அது அவரல்ல என்று என் பிரக்ஞை மறுத்தது. அவரது பிடரிமயிர் முற்றிலும் உதிர்ந்துவிட்டிருந்தது. பஞ்சுபோல கொஞ்சம் மயிர் பக்கவாட்டில் தெரிந்தது.

நான் அவரைப் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றேன். அவரது முகம் மிக நன்றாக ஒடுங்கி பற்கள் மிகவும் வெளியே உந்தி தெரிந்தன. தொண்டை புடைத்து அதிர்ந்து கொண்டிருந்தது. அவரிலிருந்துதான் அந்த வலிமுனகல் எழுந்து கொண்டிருந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை, அந்த அறைக்குள் கண்ணுக்குத்தெரியாத வேறெவரோ இருக்கிறார்களா என்ன?

அவர் என்னைப் பார்த்தார். சிவந்த கண்களில் காய்ச்சல் தெரிந்தது. என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்பதுபோல் இருந்தது. நான் அருகே சென்று மோடாவில் அமர்ந்தேன். மெல்லிய முனகலுடன் “யாரு… மோகனா?” “ஆமா சார்” “நல்லா இருக்கீங்களா?” “ஆமாசார்…” “இமயமலை பயணத்தைப்பத்தி எழுதறேனே வாசிச்சீங்களா?” “ஆமாசார்…” என்றேன். “நெறைய எழுதணும்… சொல்லிச்சொல்லி கொஞ்சமா எழுதவச்சேன்… பாப்போம்” “சரியாயிடுவீங்க சார்… அவ்ளவுதூரம் போயிருக்கீங்க…” அவர் புன்னகைசெய்தார். என் சொற்களை நான் உபச்சாரமாகச் சொல்லவில்லை. என் நெஞ்சின் ஆழத்தில் இருந்து எழுந்த பிரார்த்தனையாகத்தான் சொன்னேன்.

“வலி இருக்கு இல்லசார்?” அபத்தமான, ஒருவேளை குரூரமான, கேள்வி. ஆனால் அதைத்தவிர அங்கே என்ன பேசுவது? “ஊழிற்பெருவலி யாவுள?” என்று சொல்லி உதடுகோண புன்னகை செய்தார். அவரை கோமல் என்று அகம்நம்பியது அச்சிரிப்பைக் கண்ட பிறகுதான். “பெருவலின்னு சொல்றார் பார்த்தீங்களா? தமிழிலே இப்டி நெறைய சிக்கல்கள் இருக்கு. வலிமைக்கும் வலிக்கும் என்ன சம்பந்தம்? வலி இல்லென்னா வலிமை கெடையாதா? இல்ல வலிமை ஜாஸ்தியா இருந்தா வலி ஜாஸ்தியா? ஆனா அந்த வார்த்தை பிடிச்சிருக்கு. பெருவலி… நெறையவாட்டி அதைச் சொல்லிட்டே இருக்கேன்…”

முனகி முனகிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொண்டிருந்தார். பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை விரும்பினார் என்று தோன்றியது. “வலிமரப்புக்கு ஊசி ஒண்ணும் போடலையா?” “எல்லாம் போட்டாச்சு. மடைன்னா அடைக்கலாம். உடைப்புன்னா ஒண்ணும் பண்ண முடியாதுல்ல” அவரது தஞ்சைப் பின்னணி எப்போதாவதுதான் வார்த்தைகளில் வரும். “உங்களுக்கு கிரா தெரியுமா, இவரு ராஜநாராயணன் இல்லை. கி.ரா.கோபாலன்.” “கேள்விப்பட்டிருக்கேன். கலைமகளிலே இருந்தார் இல்ல?” ”ஆமா. ஆரம்பத்திலே திருலோக சீதாராமோட பத்திரிகையிலே இருந்தார். அப்றம் மணிக்கொடி. கடைசியா கலைமகள். மணிக்கொடி கோஷ்டியிலே இவரும் உண்டு…”

“அவர் திடீர்னு ஒருநாள் காணாம போயிட்டார், எல்லாம் அறுபதுகளிலே. எங்கெங்கோ தேடிப்பார்த்து விட்டுட்டாங்க. அப்றம் மறுபடி பத்து வருஷம் கழிச்சு ஒருநாள் நான் காசியிலே போய்ண்டிருக்கறச்ச திடீர்னு ஒருசாமியார் வந்து என் தோளை தொட்டார். எங்கியோ பாத்த முகம். நான் தான் கிரான்னார். சார்னேன். சாமீன்னு கூப்பிடுன்னார். என்ன சாமி எப்டி இருக்கீங்கன்னேன். நல்லா இருக்கேன். நீ எப்டி இருக்கேன்னார். என்ன பண்றீங்கன்னேன். சாமியாரா ஆயிட்டேன். ஆயி எதை கண்டுபுடிச்சீங்கன்னேன். தூரத்திலே ஒரு மலை தெரியுது. பொன்மலை. கைலாசம். அதைப்பாத்து போய்ட்டே இருக்கேன். இப்பவும் தூரத்திலேதான் இருக்கு, வரட்டுமான்னு சொல்லிண்டு போய் கூட்டத்தோட சேர்ந்துக்கிட்டார்.”

“இந்த டிராவல் முழுக்க கிரா ஞாபகமாகவே இருந்தது. எங்கியாவது அவர் குறுக்கே வந்திடுவார், ஏதாவது ஒண்ணு சொல்லுவார்னு. யார் யாரோ எதுவோ கண்டுபுடிக்கலாம். ஒரு இலக்கியவாதி கண்டுபுடிச்சுச் சொன்னாத்தானே அதுக்கு மரியாதை என்ன?” என்றார் கோமல் “ஆனா கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கை இருக்கலை. பத்ரிநாதிலே இருந்து கேதார்நாத் போய் அங்கேருந்து கைலாசயாத்திரை ஆரம்பிச்சப்ப சட்டுன்னு அவ்ளவுதான் கிரா இப்ப கெடையாதுன்னு தோணிட்டுது. எங்கோ அவரு விழுந்து மட்கி மண்ணாயாச்சு. அப்டி எத்தனையோ பேர் வீட்டையும் சொந்தங்களையும் விட்டுட்டு வந்திருக்காங்க. எதையோ தேடி எதையெதையோ கண்டுபிடிச்சு செத்திருக்காங்க. எல்லாம் அந்த மண்ணிலத்தான் இருக்கும்..”

“கஷ்டப்பட்டீங்களா?” “அதைப்பத்தி என்ன பேச்சு?. கண்ணமூடிண்டு எம்பி கெணத்திலே குதிக்கிற மாதிரி பாய்ஞ்சு நாலஞ்சடி போயிடுவேன். அப்றம் கொஞ்சநேரம் நிப்பேன்” என்றார். “நின்னா ஆசுவாசமா இருக்குமோ?” என்று கேட்டேன்.”யார்யா நீரு…நின்னா வேற மாதிரி வலி. நடக்கறச்ச கடப்பாரையால அடிக்கிற மாதிரின்னா நின்னா மண்வெட்டியால வெட்டுற மாதிரி…ஒரு சேஞ்ச் இருக்கறது நல்லதுதானே? பெருவலி… பாதாளத்திலே ஒரு ராஜா இருந்தானே, மாவலி. பெருமாள் அவனை ஒர்ரே மிதியா மிதிச்சு பாதாளத்துக்குத் தள்ளிட்டார். பேரே எப்டி பாத்தியா, மா-வலி… பெருமாளே மிதிச்சா அப்டி ஒரு வலி இருக்கத்தானே செய்யும்?”

சட்டென்று எதிர்பாராமல் யாரோ தாக்கியது போல “அம்மா!” என்று அலறினார். “அம்மா அம்மா அம்மா” என்று கொஞ்சநேரம் அரற்றினார். நான் எழுந்து விடலாமா என்று யோசித்தேன். “பொறப்படறேளா” “இல்லை” என்று அமர்ந்துகொண்டேன். “இமயமலைக்கு போய் கைலாசத்த பாக்காம செத்திருந்தேன்னா மறுபடி இங்கேயே பொறந்து மறுபடியும் இந்த நாடகங்களை எல்லாம் போட்டு தமிழ்நாட்டை ஒருவழி பண்ணியிருப்பேன். தப்பிச்சிட்டீங்க…” என்றார். கண்களை மூடிக்கொண்டார். இமைகள் மேல் மெல்லிய சதை அதிர்ந்தது. வலது கன்னம் இழுபட்டு இழுபட்டு துடித்தது. பின் கண்களைத் திறந்து “கண்ணை மூடினா மலையிலே நான் போய்ட்டிருக்கிறதை பாக்க முடியறது” என்றார்.

“உயரம்தான் இமயமலை. காலடியிலே இருந்து இறங்கி சரசரன்னு கிலோமீட்டர் கிலோமீட்டரா போய்ட்டே இருக்கிற பாதாளம் கூட பெரிய உயரம்தான், என்ன தலைகீழா நிக்கிற மாதிரி யோசிச்சுப்பாக்கணும். மனுஷனை சின்னச்சின்னதா எறும்புகளா ஆக்கற உயரம். அந்தி மாதிரி எப்பவும் ஒரு கருக்கிருட்டு. மலையோட இடுப்பில சுத்தின அர்ணாக்கொடி மாதிரி பாதை. கொஞ்ச தூரம் போனதும் பக்கவாட்டிலே இருந்து பெரிய மலை அப்டியே திரும்பி கண்முன்னாடி எழுந்திரிச்சு வந்து நின்னுட்டிருக்கும். இதோ இருக்கேன்னு… பிரம்மாண்டமான பூதம். பூதகணங்கள் தலையிலே வளைவா வானத்தை தாங்கிண்டு நிழலும் இருளுமா நீலமும் கருப்புமா ஒக்காந்திண்டிருக்கு. ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டு தியானத்திலே இருக்கிற மாதிரி.

“இந்த மலைக்கு அந்தப்பக்கம் திரும்பினா கைலாசம்னு சொன்னாங்க. அதைகேட்டப்பவே என் கூட இருந்தவங்க கைகூப்பிண்டு அரற்ற ஆரம்பிச்சாச்சு. திடீர்னு காரணமே இல்லாம எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம் வந்தது. அங்க ஒரு பெரிய மொட்டை மலையைத்தான் பாக்கப்போறோம்னு ஒரு நினைப்பு. ஏன்னா அதைத்தான் உள்ளுக்குள்ள எதிர்பார்த்திட்டிருந்தேன். என்னோட லாஜிக் மைண்டு அதைத்தான் கணக்குபோட்டு வச்சிருந்தது. முப்பதுவருஷமா முட்டாத்தனமா ஏதோ கனவ வளத்து வச்சுண்டு இது வரைக்கும் வந்தாச்சு. அந்தக்கனவு என் அன்றாட வாழ்க்கையிலே இருந்த சலிப்பை இல்லாம பண்ணி ஒரு சின்ன குளுமைய மனசிலே நிறைச்சிட்டிருந்தது… அதை அப்டியே விட்டிருக்கணும்… இவ்ளவுதூரம் வந்திருக்கக்கூடாது…

அந்த ஒரே எண்ணம்தான் மனசு முழுக்க. வந்திருக்கக் கூடாது. வந்திருக்கக் கூடாது. அப்டியே கால் உறைஞ்சிடுத்து. என்னால என்னோட கை விரலைக்கூட அசைக்க முடியலை. ஏன் இமையக்கூட அசைக்க முடியலை. என் மனசும் அந்த ஒரே வார்த்தையிலே அப்டியே உறைஞ்சிடுத்து. வந்திருக்கக் கூடாது வந்திருக்கக் கூடாது. திடீர்னு ஒரு பயம். நான் செத்துட்டேனா? அந்த வார்த்தையிலேயே என் மூச்சு நின்னுட்டுதா? இப்ப என் சடலத்துக்குள்ள நின்னுட்டு இதை யோசிச்சிட்டிருக்கேனா? இதுதான் மரணமா?

உண்மையிலே, மோகன் என் உடம்பு சடலம் மாதிரி குளுந்து உறைஞ்சு எங்கியோ இருந்தது. வலிக்குதான்னு பாத்தேன். வலியே இல்லை. ஆமா அப்ப செத்தாச்சு. அப்பாடா செத்துட்டேன். இனிமே வலியே இல்லை. ஊழிற்பெருவலி யாவுள? அடடா, செத்தாலும் விடமாட்டேங்கிறாரே தாடிக்காரர். பெருவலி மறைஞ்சாச்சு. மாவலிக்கு மோட்சம் கிடைச்சாச்சு. செத்துட்டேன், செத்துட்டேன்னு கொண்டாடணும் போல இருக்கு. துள்ளிக்குதிச்சு ஆர்ப்பரிக்கணும்போல இருக்கு.

அந்த மலை ஏறுற வழி முழுக்க வடநாட்டுக்கார பக்தர்ங்க கைதட்டி ஆடிட்டே பாடிட்டே வர்ரதை கவனிச்சப்ப நானும் அதேமாதிரி ஆடிட்டே ஏறணும்னு நெனைச்சேன். ஆனால் அந்த வலி இல்லாம இருந்தாக்கூட ஆடியிருப்பேன்னு சொல்ல முடியாது. வலி இல்லாம இருந்திருந்தா மலைக்கு வந்திருப்பேனாங்கிறதே சந்தேகம்தான். அப்ப ஆடணும்ணு தோணிச்சு. ஆனா என்னை அந்த உடம்புக்குள்ளே இருந்து வெளியே கொண்டுவர முடியலை. அப்ப பீதி வந்திட்டுது. இதுக்குள்ளே மாட்டிண்டு இங்கேயே கெடக்கப்போறானா? பொறியிலே மாட்டிண்டு பொறியோட மட்கி அழுகிப்போற காட்டெலி மாதிரி…

எல்லாம் ஒரு நாலஞ்சு செகண்டு மயக்கம்தான். தெளிஞ்சுட்டுது. அப்டியே ஓரமா ஒக்காந்துட்டேன். வேண்டாம். அவங்கள்லாம் கைலாசத்தை பாக்கட்டும். நான் திரும்பிடறேன். எனக்கு அது மானசகைலாசமாகவே இருந்திடட்டும்னு நெனைச்சேன். எங்கூட ஒரு மார்வாடிக்காரி வந்தா. கீழே இருந்தே என்னை அவதான் அப்பப்ப அன்பா பாத்துக்கிட்டவ, நல்ல ஸ்தூல சரீரம். மூச்சு வாங்கி வாய ஸீல்மிருகம் மாதிரி பொளந்து முகத்தை தூக்கி தூக்கி பொதபொதன்னு நடந்து வர்ரா. சதையெல்லாம் ததும்புது. அந்தகுளிரிலயும் நெத்தியெல்லாம் வேர்வை.

அவளால என்கிட்ட துண்டு துண்டாத்தான் பேசமுடியறது. ’வரலையா? கைலாஷ் வந்தாச்சு. இதோ இருக்கு. இதோ கன்முன்னாடி தெரியுது கைலாஷ்…’ அப்டீன்னு சொல்றா. நான் வலிக்குது என்பதுபோல வாயசைச்சேன். அவள் ’ஒரு எட்டுதான் இதோ இருக்கு இவ்வளவுதூரம் வந்துட்டீங்களே’ன்னு கேட்டா. அவளோட வாழ்க்கையிலே கடைசி லட்சியமா அத வச்சிட்டிருந்துருப்பா போல. ’அதோ எனக்கு விளிம்பு தெரியறது, பக்வான் கைலாஷ்!’னு சொல்றப்பவே கண்ணுலே தண்ணி வந்து கன்னங்களிலே உருளுது. கைகளை கூப்பிட்டு மெல்ல ஆடிகிட்டு பஜனை மாதிரி என்னமோ பாடுறா. பைத்தியம்புடிச்சவ மாதிரி இருக்கா.

அந்தக் கும்பலிலே கிட்டத்தட்ட அத்தனைபேருமே அப்டித்தான் இருக்காங்க. நான் மட்டும் குளுந்து உறைஞ்சு வேற எங்கியோ நின்னுட்டு அவங்கள ஆச்சரியமா பாத்துண்டிருந்தேன். அவ என் கையைப் புடிச்சு வாங்கன்னு தூக்க வந்தா. ’இல்லம்மா என்னால முடியலை நீ போ’ன்னேன். ’நீங்க வாங்க, நீங்க வராம நான் எப்டி போறது?’ன்னு என் பக்கத்திலேயே நின்னுட்டா. எல்லாரும் முன்னாடி போயாச்சு. இருட்டு பரவின மலைப்பாதையில நானும் அவளும் மட்டும்தான். எங்கேயே பொறந்து எங்கேயோ எப்டியோ வாழ்ந்த ரெண்டு ஜீவன். அங்க நாங்க அப்டி நிக்கணும்னு எழுதியிருந்தது.

நான் திடமா ’பெஹன்ஜீ நீங்க போங்க, நான் ஒரு அஞ்சு நிமிஷத்திலே வந்திடறேன்’னேன். ’இல்லை உங்கள தனியா விட்டுட்டு போகமாட்டேன்’னா. ’அவங்க இப்ப திரும்பி வந்திடுவாங்க’ன்னேன். ’சரி பரவாயில்லை, நான் கைலாஷ்ஜியை பாக்கக்கூடாதுன்னு ருத்ரனோட கட்டளைன்னா அப்டி ஆகட்டும். எப்டி தனியா விட்டுட்டு போவேன்’னா. எனக்கு மனசு நெகிழ்ந்துட்டுது. எப்ப வேணுமானாலும் எதையும் விட்டுக்குடுக்க ரெடியான ஒரு வாழ்க்கை. எந்தப் பிடியிலயும் இறுக்கம் இல்லை. கையிலே ஒண்ணுமே நிக்காது. அதனால அவங்க ஒண்ணையுமே சாதிக்க முடியாது. ஆனா மிக முக்கியமான எதையெல்லாமோ அடைஞ்சிடறாங்க இல்லியா?

’நான் தனியா இருக்கனும்னு நெனைக்கறேன். என்னை விட்டிருங்க’ன்னு கடுமையா சொன்னேன் ’நீங்கபோய் பாத்துட்டு திரும்பி வந்து என்னை கூட்டிட்டு போங்க. அதுவரை ஒக்காந்திருக்கேன்’னேன். கொஞ்சம் தயங்கிட்டு ’இங்கேயே இருங்க இதோ வந்திடறேன்’னு கெளம்பி ஓடிப்போனா. மலைச்சரிவுப்பாதையிலே நான் மட்டும் தனியா உக்காந்திருந்தேன். அந்த தனிமையை ஃபீல் பண்ணத்தான் அவ்ளவுதூரம் வந்தேனான்னு நினைச்சுகிட்டேன். அதுகூட என்னோட உச்சமா இருக்கலாம் இல்லையா? ஒருவேளை சிவன் நினைச்சதே இதுதானோ. இதுதான் என்னோட பிரைவேட் கைலாசமோ.

தனியா அங்கே ஒக்காந்திட்டிருந்தேன். அந்த நானே வேற யாரோ மாதிரி இருக்கு. கனமான பூட்ஸ். ஸ்வெட்டர் மேலே கனமான கோட்டு. வெள்ளை வெளேர்னு பனிக்குல்லா. எம்ஜிஆர் போடுவாரே அதை மாதிரி. கழுத்திலே மஃப்ளர். மொத்தத்திலே என்னோட மூக்கும் நெத்தியும் மட்டும்தான் கைலாசம் பாக்க போயிருக்குன்னு தோண்றது.

நல்ல இருட்டு. இருட்டுன்னா நாம இங்க பாக்கிற இருட்டு இல்லை. ஒருமாதிரி நீலநிறமான இருட்டு. தூரத்திலே வெள்ளிமலைகளோட உச்சி மட்டும் சாம்பல்நிறமான வானத்திலே தூரிகையால தீட்டினமாதிரி தெரிஞ்சுது. சரிவெல்லாம் நீலத்திரைய போட்டு மூடினதுமாதிரி இருந்தது. சத்தமே இல்லை. அதுக்கு ஒரு காரணம் நம்ம காது நல்லா அடைச்சுக்கிடும்ங்கிறதுதான். எங்க ட்ரூப் பக்கத்திலேதான் நின்னுட்டிருந்தது. ஆனா அவங்களோட சத்தம் ரொம்ப தூரத்திலே கேக்கற மாதிரி இருந்தது. குளிரிலே உடம்பு அதுவே தூக்கித்தூக்கி போட்டுது. ஆச்சரியமென்னன்னா வலியே இல்லை. வலி இருந்துதான்னா இருந்திருக்கலாம், நான் அதை ஃபீல் பண்ணலை.

சாயங்காலம் மூணு மூணரைதான் இருக்கும். ஆனா அங்க நேரமே கெடையாது. ஏன் காலமே கெடையாது. மலைச்சிகரங்களுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்? அதெல்லாம் அப்டியே காலாதீதமா ஒக்காந்திண்டிருக்கு. சீக்கியர்கள் அவங்க கடவுளை சத்ஸ்ரீ அகால்னு கும்பிடுறாங்க. அகாலம். அகால். என்ன ஒரு வார்த்தை. அகாலத்திலே யாராச்சும் காலமாக முடியுமா என்ன? காலா சற்று என்னருகே வாடா உன்னை உதைக்கிறேன். ஏன் வலிக்கவே இல்லை? வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கைமேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும் மரணமும் இல்லாத எடத்திலே ஏது வலி.

அப்டியே ஒக்காந்திட்டிருக்கேன். கண்மட்டும் மலைச்சரிவுகளை தேடித்தேடி பாத்துண்டிருக்கு. என்னமோ நடந்திரும்ங்கிறது மாதிரி. ஆனா அது அப்ப தெரியலை. அப்றம் கோட்டுப் பையிலே இருந்து பைனாகுலரை எடுத்து வச்சுண்டு மலைச்சரிவுகளை பாத்தேன். அப்ப சட்டுன்னு தூரத்திலே அதை பார்த்தேன். அந்த எருமைக்கன்னுக்குட்டியை. சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. என்னோட கற்பனைன்னோ பிரமைன்னோ சொல்வீங்க. ஆனா உண்மை. சத்தியமான உண்மை. அதே கன்னுக்குட்டி, அதே எடம். சாரதானந்தர் எடுத்த அந்த போட்டோ மாதிரி அதே காட்சி. சத்தியமா அதே கன்னுக்குட்டிதான்.

ஒரு ரெண்டு மூணு கிலோமீட்டர் தள்ளி பெரிய வெள்ளைநிறமான மலைச்சரிவு. அதெல்லாம் வெள்ளைமண்ணும் கூழாங்கல்லும்னுதான் நெனைச்சிருந்தேன். அது வெள்ளைப்பனி. பொருக்குபொருக்கா உப்பை கொட்டிவச்சதுமாதிரி. அதிலே முன்னங்காலை மடக்கிண்டு தலையை திருப்பி கண்ணை மூடி படுத்திருக்கு. அப்டியே ஆழ்ந்துபோனதுமாதிரி படுத்திருக்கு. ஒரு படபடப்பு வந்து என் பார்வையை மறைச்சிட்டுது. உண்மைதானா, இல்லை ஏதாவது மனப்பிராந்தியா? மறுபடியும் பாத்தேன். அதேதான்.. அந்த எருமைக்கன்னுக்குட்டியேதான்.

பொறந்து ஒரு நாலஞ்சுமாசம் ஆகியிருக்கும். புத்தம்புதிசு. பரிசுத்தமான ஒடம்பு. ஒரு பிரம்மாண்டமான எலிக்குஞ்சுன்னு ஒருசமயம் தோணிச்சு. பிரம்மாண்டமான கருங்கல் நந்தின்னு இன்னொரு சமயம் தோணிச்சு. சட்டுன்னு அது பக்கத்திலே போய் அதை அப்டியே அள்ளி உள்ளங்கையிலே எடுத்துக்கிட்டேன். அதோட காலடியிலே நின்னேன். அதோட குளம்புக்கே என்னளவுக்கு உயரம். என்னஒரு சருமம். சாம்பல்நிறமான கண்ணாடித் துருவல் மாதிரி முடி. எளம் நுங்கு மாதிரி மூக்கு. சிப்பிகள் மாதிரி குளம்புகள். இவ்ளவு தூய்மையா? இவ்ளவு பரிசுத்தமா இது… சாரதானந்தா என்ன பண்ணினார்? இதை படம் எடுத்த அந்த செகண்டிலேயே அவர் செத்துப்போகலையா?

அந்தம்மா திரும்பி வந்தப்ப நான் அங்கியே மல்லாந்து மயக்கம்போட்டு படுத்திருந்தேன். அவ வந்து என்னை உலுக்கி மூஞ்சியிலே தண்ணி தெளிச்சு எழுப்பினா. ஃப்ளாஸ்கிலே இருந்து சூடான காபிய குடிக்க வச்சா. நான் எந்திரிக்க போனப்ப ’இல்லை அசையவேண்டாம்… கொஞ்ச நேரம்போகட்டும்னா’ ’இல்லை, இப்பவே நான் கைலாசத்தைப் பாக்கணும்’னு கெளம்பிட்டேன். ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அஞ்சு நிமிஷத்திலே போய்ட்டேன். அங்க இருந்த கனமில்லாத காற்றிலே நான் பஞ்சுமாதிரி போய்ட்டே இருந்தேன்.

“சாம்பல்நிறமா வானம். கறுப்பு கொடைவழியா மத்தியான்ன சூரியனைப் பாக்கற மாதிரி வானத்திலே ஒரு ஊமைவெளிச்சம். சூரியன் இல்லை. கைலாசம் எங்கேன்னு பாக்கறேன். நாலஞ்சு உயரமான பனிமலைகள், வெள்ளைக்கூடாரத்தை வானத்திலே இழுத்து கட்டி வச்சதுமாதிரி. சட்டுன்னு பார்த்துட்டேன். அப்டியே உடம்பு பரவசமாகி சிலிர்த்து பனிக்கட்டியா ஆயிட்டுது. சூடா கண்ணீர் ஊறி கொட்டிட்டேஇருக்கு. ரெண்டுகையையும் மார்பிலே கோத்துக்கிட்டேன். உதட்டை இறுக்கி கடிச்சுகிட்டு அப்டியே நின்னேன். ’கர்மாவை கழிச்சாச்சுன்னு’ யாரோ சொன்னாங்க. இல்ல நானே நெனைச்சுகிட்டேனா?

குளிர்ந்த காத்து கீழே மலைச்சரிவிலே இருந்து ஏறிவந்து மேலே போச்சு. அப்றம் மேலே இருந்து மயில்பீலிகளை கொட்டுறமாதிரி கனமான பனிக்காற்று வந்து மூடிட்டு கீழே போச்சு. கைலாசத்தோட வலப்பக்க சரிவிலே வெள்ளை செம்மறிக்கூட்டம் நிக்கற மாதிரி பனிமேகம். மடியிலே ஒரு பட்டுத்துவாலைய போட்டுண்டு கைகளை கோத்து வச்சுண்டு அது தியானத்திலே இருந்தது. ஒரு சத்தம் கெடையாது. அகாலம். சத்தம் இல்லேன்னா சொல்றது. இருக்கு. காத்து போற சத்தம் கேட்டுண்டே இருக்கு. கடலுக்குள்ள படகிலே போனா மெட்ராஸோட ஒட்டுமொத்த சத்தம் அலையலையான இரைச்சலா கேக்கும். அதே மாதிரி காத்தோட சத்தம். சிலர் தும்மறாங்க, சிலர் மூச்சு விட்டு ஏங்கறாங்க, சிலர் மெல்ல விசும்பறாங்க. எங்க கூடவே வந்த நாலுகுதிரைகள் செருக்கடிச்சு காலால தரைய தட்டுற சத்தம். ஆனா எல்லா சத்தமும் சேர்ந்து பெரிய நிசப்தமா ஆயிட்டுது. எங்க எல்லார் மனசிலயும் ஓடிண்டிருந்த எல்லா காலமும் சேர்ந்து அகாலமா ஆயிட்டுது.

சாம்பல் நெறமான வானத்திலே அங்கங்க சிவப்பு தெரிய ஆரம்பிச்சது. ரோஸ் நெறத்த பஞ்சிலே முக்கி அங்கங்க ஒத்தி எடுத்தது மாதிரி. அப்றம் செவப்பு அப்டியே வானத்தோட கீழ் வளைவிலே நல்லா எறங்க ஆரம்பிச்சுது. வானத்தோட மேல்தோலை உரிச்சிட்டது மாதிரின்னு தோணிச்சு. அப்பதான் நான் என் வலிய மறுபடி ஃபீல் பண்ண ஆரம்பிச்சேன். பழுக்கக் காய்ச்சின சூட்டுக்கோலை என்மேலே அழுத்தி வருடிட்டே போறதுமாதிரி. பழுக்க காய்ச்சின பாதரசமே ரத்தமா மாறி உடம்பு முழுக்க ஓடுறது மாதிரி. உடம்புக்குள்ள எல்லா உறுப்புகளும் தீக்காயம்பட்டு வெந்து வடிஞ்சிட்டிருக்கு.

என்னையே உசிரோட யாரோ தோலுரிக்க ஆரம்பிச்சாங்க. தோலை உரிச்ச எடங்களிலே சதை நின்னு விதிக்குது. மொத்தமா தோலை உரிச்சு விட்டுட்டு போய்ட்டாங்க. வெளிக்காத்துல சதை திகைச்சு நடுங்கிண்டிருக்கு. என் பார்வை ரொம்ப மங்கியிருக்கனும். நான் கீழே விழுறமாதிரி தோணிச்சு. எங்கியோ மெரினா பீச்சிலே கடல்காத்திலே விழுறேனான்னு ஒரு பிரமை. அப்ப திடீர்னு ஏகப்பட்ட குரல்கள் ஜெய் ஸ்ரீ கைலாஷ்னு கூவறமாதிரி இருந்தது. மெட்ராஸிலே ஏது வடநாட்டுக்கூட்டம்? இல்ல இது ராமேஸ்வரமா…

சட்டுன்னு கன்ணத்தெறந்தேன். என் கண்ணுமுன்னால பொன்னால ஆன ஒரு கோபுரமா கைலாசம் வானத்திலே தகதகன்னு நின்னுட்டிருந்தது. அதோட ஒருபக்கம் கண்கூசற மஞ்சளிலே மின்னுது. இன்னொருபக்கம் வளைவுகளிலே இருட்டோட புடைப்புகள் பொன்னா ஜொலிக்குது. பொன். ஆகாசத்துப்பொன். பரிசுத்தமான பொன்மலை. மனுஷன் அள்ள முடியாத செல்வம்… இன்னும் இருக்கு. இத்தனைக்கு அப்பாலும் அது அங்க இருக்கு. எப்பவும் இருந்துண்டேதான் இருக்கும்.

“அங்க நின்னுட்டிருந்த எம்பது பேரும் கண்ணிர் விட்டுட்டிருந்தாங்கன்னு சொன்னா நீங்க நம்பமாட்டீங்க. ஏன் கண்ணீர்? துக்கமா துக்கம் வழிஞ்சு போன ஆனந்தமா? ஒவ்வொரு மனசும் ஒரு பிரபஞ்சம். அங்கே ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு சொற்கமும் நரகமும். ஆனா பொதுவா எல்லாருமே மனுஷங்கதானே. சின்னப்பூச்சிங்க ஒரு கூழாங்கல்லிலே ஒண்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. இவ்ளவு அற்பமா இவ்ளவு கேவலமா வாழ விதிக்கப்பட்டிருந்தாலும், இவ்ளவு துக்கத்தையும் வலியையும் அனுபவிச்சு அர்த்தமில்லாம சாக விதிக்கப்பட்டிருந்தாலும் யாரோ மானுடம் மேலே இந்த மகத்தான மணிமுடிய சூட்டியிருக்காங்களே! தாங்க முடியலை. அந்த மகத்தான கௌரவத்தை குடுத்த அது எதிர்பார்க்கிறதத்தான் செய்றோமா?

அய்யய்யோ அய்யய்யோன்னு அகம் கூப்பாடு போடுது… கூசி சிலுத்துட்டுது உடம்பு. என்னென்னமோ கீழ்மையெல்லாம் ஞாபகம் வந்து மனசு கொந்தளிக்குது. கீழ்மைகளைப்பாத்து பாத்து கண்புளிக்கிற ஒரு துறையிலே இருந்தவன் நான் மோகன். பெரியவங்களோட கீழ்மை. சிறியவங்களோட கீழ்மை. இத்தனை கீழ்மைகளுக்கும் மேலே இந்த கிரீடத்தை தூக்கி வச்சு மனுஷனை ஆசீர்வதிச்ச முட்டாள் யாரு? மனுஷன் எத்தனை மகத்தான வார்த்தை. சொல்லிட்டான். ஆனா, நான் எட்டு பேராலே ராவெல்லாம் கற்பழிக்கப்பட்ட பன்னிரண்டு வயசுப்பொண்ண கைத்தாங்கலா அவ அம்மா தூக்கிண்டு போறத பாத்திருக்கேன் மோகன். எட்டு பேரும் பொண்களை பெத்த அப்பாக்கள். ஈவிரக்கமில்லாம ஏமாத்தப்பட்ட பொண்கள் நின்னு கதறுறத பாத்திருக்கேன். அநீதிகளை விழுங்கி விழுங்கி வயிறே ஆசிட்டால நிறைஞ்சுடுத்து.

“கபோதி, உனக்கெதுக்குடா முதுகெலும்பு? நீ நின்னு எரிஞ்சிருக்க வேண்டிய எடங்களிலே எல்லாம் குளுந்து கல்லா நின்ன கோழை தானேடா? அன்னிக்கு உன் வாயிலே எழுந்த சாபத்தையெல்லாம் துப்பாம உள்ளுக்குள்ள சேத்து வச்சிட்டே. எல்லாம் படிஞ்சு உன் முதுகெலும்பு உளுத்துப்போச்சு. உப்பு பட்ட இரும்பு மாதிரி துருப்பிடிச்சு தொங்கி போச்சு. இந்தா, என் முதுகெலும்பு ஒண்ணை ஒண்ணு கவ்விண்டிருக்கிற நூறு தேளு மாதிரி இருக்கு. நூறு கொடுக்கு. நூறு வெஷம்… என் மேலேயா தூக்கி வச்சிருக்கே இந்த பொற்கிரீடத்த? வெளையாடுறியா? கேலி பண்றியா? நான் பட்ட சிறுமைக்குமேலே இன்னும் சிறுமைப்பட்டு கூசி புழுவா மலமா இங்க நிக்கணும்னு நெனைக்கறியா?

எங்க இருக்கே? இருக்கியா? நீ இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்டேனே. நீ இல்லாத எடத்திலே எதுவும் நடக்கலாம். நீ இல்லேன்னா எல்லாத்தையும் நியாயப்படுத்திடலாம். நீ இல்லேன்னா எல்லாத்துக்கும் வேற அர்த்தம் வந்திடுது. ஆனா எங்கேயோ அலகிட முடியா வெளியிலே உக்காந்துண்டு பாவி மனுஷன் மேலே இந்த மகத்தான ஒளிக்கிரீடத்த தூக்கி வச்சிருக்கே.

அய்யோ, இந்த தருணத்திலே ஒரு கணம் ஒரே ஒரு கணம் அதை நான் என் தலையிலே சூடிக்க முடியுமானா எல்லாமே அர்த்தமாயிடும். ஒண்ணும் வீணாப்போகலைன்னு ஆயிடும். நான் வாழ்ந்ததுக்கும் வந்ததுக்கும் அர்த்தம் வந்திடும். டேய், பாவிகளா உங்க ஒவ்வொருத்தன் சார்பிலயும் இத நான் எடுத்து தலையிலே வச்சுக்குவேண்டா… ஏன்னா நீங்களும் உங்க எட்டுதலைமுறையும் படுற எல்லா வலியையும் நான் தின்னாச்சு. நானும் என் ஏழு முன்னோர்களும் செஞ்ச எல்லாத்துக்கும் நான் தண்டனைய அனுபவிச்சாச்சுடா… நான் ஏசு போல. எனக்கு முள்முடி வேணாம். இப்ப இந்த பொன்முடி வேணும். நீ எங்க இருந்தாலும் சரி, நீ நியாயமறிஞ்சவனா இருந்தா மனுஷன்ங்கிற அற்பப்புழு மேலே உனக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தா அந்த பொன்முடி இப்ப என் தலையிலே வந்தாகணும்… இப்ப…

இத எப்டி நான் சொல்றதுன்னு தெரியலை… சத்தியமா தெரியலை. இது கண்டிப்பா சீக்குபுடிச்ச மனசோட பிரமை கெடையாது. என் தலையிலே அந்த மாபெரும் கிரீடம் வந்து ஒக்காந்தது. அந்த ஒளியிலே என் உடம்பே தங்கமா ஜொலிச்சது. கீழே விரிஞ்சுகிடந்த மொத்த உலகத்துக்கும் சக்ரவர்த்தியா அங்கே நின்னேன். அத்தனைபேர் மேலேயும் கட்டுக்கடங்காத கருணை பெருகி ஒரு பிரம்மாண்டமான அவலாஞ்சி மாதிரி மலையெறங்கி போய் கோடை மழை மாதிரி பூமி மேலே கொட்டிச்சு. குளிரக்குளிர உலகம் அதிலே நனைஞ்சு மலர்ந்து நின்னுட்டிருந்தது. அங்க நின்னு அத்தனை பேரையும் பூர்ணமா மன்னிச்சேன். நேத்தும் இன்னைக்கும் நாளைக்குமான அத்தனை மனுஷங்களையும் மன்னிச்சேன்.

அப்ப ஒண்ணு நடந்தது. அங்க நின்ன அத்தனைபேரும் என்னைத் திரும்பிப்பார்த்தாங்க. அத்தனை கண்ணிலயும் பரவசமும் பக்தியும். சிலர் முகத்திலே கண்ணீர் ஒளிவிட்டுது. சிலர் கைய கூப்பிட்டாங்க. பெஹன் என்னமோ சொல்ல வாயெடுத்து உதடு அப்டியே நின்னுட்டுது. நான் அவங்களப் பாத்தேன். அவங்களப் பாக்கவும் இல்ல”

நீண்ட அமைதி. அறைக்குள் இருந்த மங்கிய வெளிச்சத்தில் கோமலின் உடல் கிடந்தது. அவர் அப்போது அங்கே இல்லை. அவர் பேசினாரா இல்லை அனைத்தையும் நான் கற்பனைசெய்துகொண்டேனா? என் மனம் விம்மிக்கொண்டிருந்தது. இரு விரல்களால் கண்களை அழுத்தி என் கண்ணீரை அடக்கிக்கொண்டேன்.

“அம்மா! அம்மா! அம்மா!” என்று கோமல் பெரிய குரலில் அலறினார். அவரது மனைவி வந்து அருகே பேசாமல் நின்றார். அவர் தீயருகே நிற்பது போல இருந்தது முகம். கோமல் கைகாட்ட அவர் கோமலை பிடித்து சற்றே அசைத்து அமர்த்தினார். “அம்மா, எங்கம்மா, தாயே, எங்கம்மா!“ என்று கதறி நடுங்கும் கரங்களால் அவர் தோளைப்பற்றிக்கொண்டார். தலையணையை மாற்றி விட்டு ஒரு மாத்திரையை கொடுத்தார். அதை அவர் விழுங்கி கண்களை மூடினார். “அம்மா! அம்மா! அம்மா!” என்று கத்திக்கொண்டே இருந்தார். உரத்த குரல் மெல்ல முனகலாகியது.

சட்டென்று கண்களை திறந்து என்னைப்பார்த்தார். “நீயா?” என்பது போல. பின் பெருமூச்சு விட்டார். “அன்னிக்கு திரும்பறப்ப நான் எல்லா வார்த்தைகளையும் இழந்துட்டேன். இனிமே சொல்லிக்கவும் தெரிஞ்சுக்கவும் ஒண்ணுமில்லை. இவ்ளவுதான். கணக்குக்கு கீழே கோடு போட்டு விடைய எழுதியாச்சு. கணக்கையே அழிச்சுடலாம். என்ன? ஒவ்வொரு அடியாதூக்கி வச்சு வந்திட்டிருந்தேன். வர்ர வழியிலே வலி அறிமுகமான இன்னொரு ஆள் மாதிரி தனியா கூடவே வந்தது. பரவாயில்லை, இதைமாதிரி கடைசி வரை கூடவர்ர நண்பன் வேற எங்க கெடைப்பான்? ஊழிற்பெருவலி. ஊழெனும் பெருவலி…

அன்னிக்கு ராத்திரி நான் பெஹன்ஜி கிட்டே கேட்டேன். ஏன் அங்க எல்லாரும் என்னை திரும்பிப்பாத்தீங்கன்னு. அவ சொன்னா ’பாயிஜி உங்கமேலே பக்கத்துப்பாறையிலே பட்டு பிரதிபலிச்ச சாயங்கால வெயில் பட்டுட்டிருந்தது. நீங்க பொன்னிறமான வெளிச்சத்திலே நின்னுட்டிருந்தீங்க. ஒரு ரெண்டு நிமிஷம் நீங்க ஒரு தங்கச்சிலை மாதிரி இருந்தீங்க. உங்க தலையிலே இருந்த பனிக்குல்லா பொன்னால செஞ்ச கிரீடம் மாதிரி ஜொலிச்சுது. உங்களுக்கு கைலாஷ்ஜியோச ஆசீர்வாதம் இருக்கு.’ நான் சட்டுன்னு போர்வையை முகத்துமேலே தூக்கிண்டு அழுதேன்.”

மீண்டும் ஆழமான மௌனம். நான் கிளம்ப வேண்டும் என்று நினைத்தேன். அதை உடனே அவர் உணர்ந்து “நேரமாச்சு என்ன? பாக்கலாம். எங்க எப்பன்னு தெரியலை. ஆனா பாக்கவும் கூடும்.” மீண்டும் அந்த கோணலான சிரிப்பு. “நேத்து ராத்திரி இந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு சத்தம். எருமைக்குட்டி காதை அடிச்சுக்கிடற மாதிரி. நெஜம்மா. எலைச்சத்தமா கூட இருக்கலாம். இல்லை அதுவாக்கூட இருக்கலாம். தெரியலை” என்று சிரித்தார். “அதை என்னமோ பயங்கரமான எருமைன்னு சொல்லி பயமுறுத்திட்டாங்க. அது ரொம்பச்சின்ன கண்ணுக்குட்டி. பரிசுத்தமான கொழந்தை. செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, பூக்குட்டின்னு அதோட குளுந்த மூக்கை புடிச்சு கொஞ்சணும்னு தோணும்.”

நான் வெளியே இறங்கியபோது மதியம் வெந்து நீராவி காதுகளில் வீசியது. நிழல்கள் நீள, மரங்களின் இலைப்பரப்புகள் வாடிய மணம் பரப்ப, மாலை வந்துகொண்டிருந்தது. தலைகுனிந்து தனிமையில் நெடுநேரம் நடந்து சென்றேன்.

முந்தைய கட்டுரைபெருவலி[ சிறுகதை] -1
அடுத்த கட்டுரையானை டாக்டர் – ஆங்கில மொழிபெயர்ப்பு