வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39

பகுதி ஆறு : பொற்பன்றி – 4

bl-e1513402911361காந்தாரியின் அறைமுன்னால் வெளியேவந்து துச்சளையை கைபற்றி அழைத்துச்சென்ற சுதேஷ்ணை “என்னடி களைத்துப்போயிருக்கிறாய்?” என்றாள். துச்சளை “நானா? நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள் சுதேஷ்ணை. “இங்கே நிகழ்வனவற்றை கேட்டால் சிரிப்பா வரும்? வாடி” என்று தேஸ்ரவை அவள் இன்னொரு கையை பற்றினாள். தசார்ணை தாரையிடம் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றாள். “பேரரசரை பார்க்கச் சென்றோம்” என்றாள் தாரை. எப்படி இருக்கிறார் என அவள் கேட்பாளென தாரை எண்ணினாள். ஆனால் “வா” என்று மட்டும் தசார்ணை சொன்னாள்.

காந்தாரியின் அறைக்குள் சத்யசேனையும் சத்யவிரதையும் இருந்தார்கள். சத்யசேனை “வாடி…” என்றாள். துச்சளை அருகே சென்று காந்தாரியின் கால்களை தொட்டாள். காந்தாரியின் கைகள் நீண்டுவந்து அவள் தலையை தொட்டன. பின்னர் மெல்ல சரிந்து மெத்தைமேல் அமைந்தன. துச்சளை “தந்தையை பார்க்கச் சென்றேன், அன்னையே” என்றாள். “என்ன சொல்கிறார்?” என்றாள் காந்தாரி. “அழுதார்” என்றாள் துச்சளை. “ஆம், எப்போதும் அழுகிறார். எவரை நோக்கினாலும் மைந்தனிடம் சென்று பேசும்படி கோருகிறார்” என்றாள் காந்தாரி. துச்சளை “என்னிடமும் சொன்னார்” என்றாள்.

“நாம் என்ன செய்ய முடியும்?” என்று சொல்லி காந்தாரி பெருமூச்சுவிட்டாள். துச்சளை சத்யசேனையை நோக்க அவள் மெல்ல அப்பேச்சை ஒழியும்படி வாயசைத்தாள். “ஊழ் என்பார்கள். ஆனால் கண்ணெதிரே தெரிவது ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அதை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதுதான், அங்குதான் மீட்பும் இறைவனும் இருப்பதைப்போல” என்ற காந்தாரி கையசைத்து “அதை விடுக… சைந்தவர் எங்கிருக்கிறார்?” என்றாள். துச்சளை அதற்கு மறுமொழி சொல்லவில்லை. சில கணங்கள் பொறுத்துவிட்டு காந்தாரி அதை அப்படியே கடந்து “ஓய்வெடுத்தாயா? அப்படியே வந்துவிட்டவள் போலிருக்கிறாய்” என்றாள்.

துச்சளை “ஓய்வெடுக்கவேண்டும்… பொழுதிருக்கிறதே” என்றாள். காந்தாரி “நாளை காலை பிரகதியையும் பார்த்துவிடு” என்றாள். துச்சளை வியப்புடன் சத்யசேனையை பார்க்க அவள் புன்னகை செய்தாள். காந்தாரி “அவள்தான் இதற்காக முயற்சி செய்தாள். நான் சென்று அதன்பொருட்டு அவளிடம் பேசினேன்” என்றாள். துச்சளை பெருமூச்சுடன் “ஆம், அனைவரும் முயற்சி செய்யவேண்டியதுதானே” என்றாள். அத்துடன் அனைத்துச் சொற்களும் முடிந்துவிட அவர்கள் வெறுமனே அமர்ந்திருந்தார்கள்.

கலைந்தவள்போல துச்சளை “நான் கிளம்புகிறேன், அன்னையே. மூத்தவரை நாளை துயிலுக்குப் பின் நல்லுள்ளத்துடன் பார்க்கலாமென எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், களைத்திருப்பாய்” என்றாள் காந்தாரி. துச்சளை மீண்டும் அன்னையின் காலடிகளை வணங்கிவிட்டு எழுந்துகொண்டாள். தாரை ஏமாற்றமாக உணர்ந்தாள், ஆனால் அவ்வாறுதான் அது நிகழுமென்பதையும் முன்னரே அவள் உணர்ந்திருந்தாள். துச்சளை அன்னையரை தனித்தனியாக வணங்கி விடைபெற்றுக்கொண்டாள்.

அறையை விட்டு அவர்கள் வெளியே வந்தபோதுதான் அப்பால் சம்ஹிதையும் சுஸ்ரவையும் நிகுதியும் சுபையும் ஓடிவருவதை கண்டார்கள். சுஸ்ரவை அருகே வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு “அரசப்பணிக்காக மூத்தவர் அழைத்திருந்தாரடி. இப்போதுதான் வரமுடிந்தது” என்றாள். நிகுதி “என்னடி உடனே கிளம்பிவிட்டாய்?” என்றாள். “நான் களைத்திருக்கிறேன். சற்று ஓய்வெடுக்கலாம் என்று…” என்றாள் துச்சளை. “ஆம், களைத்திருப்பாய்… நீண்ட பயணம். செல்க!” என்றாள் சம்ஹிதை. அவர்களிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு துச்சளை நடந்தாள்.

தாரை உடன் சென்றாள். “மெய்யாகவே களைப்பாக இருக்கிறதடி” என்றாள் துச்சளை. “ஆம், அரசி. ஒருநாளில் ஏராளமான சந்திப்புகள், பற்பல உணர்வுநிலைகள்” என்றாள் தாரை. “அதல்ல…” என்று சற்று தயங்கிய துச்சளை “நான் அங்கிருக்கையில் எல்லாம் அன்னையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். இங்கே இருக்கையில் எப்படி மகிழ்ந்திருப்பேன் என உளம்விரிப்பேன். ஆனால் ஒவ்வொருமுறையும் இங்கே நுழையும் கணம் வரை உளப்பெருக்கையும் சந்திப்புகளின்போது உறைதலையும்தான் உணர்கிறேன்” என்றாள். தாரை “எனக்கும் அவ்வாறுதான். மச்சநாட்டில் இருப்பதைப்போல கனவு வராத நாளே இல்லை. ஆனால் அங்குசென்றால் மறுநாளே கிளம்பிவிடத் தோன்றும்” என்றாள்.

“நமக்கு பிறந்தவீட்டில் இடமில்லை, நம்மை வெளித்தள்ளி அவர்கள் வேறொரு உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நமக்கு நுழைவொப்புதல் இல்லை. நாம் நுழைந்தால் அவர்கள் திகைக்கிறார்கள். அயலவர் என முறைமைச்சொல் உரைக்கிறார்கள். விழிகள் நீ ஏன் இங்கு வந்தாய் என கேட்டுக்கொண்டே இருக்கின்றன” என்றாள் துச்சளை. “நாம் திரும்ப நினைப்பது உண்மையில் நம் இளமைக்கு. அதை இங்கே விட்டுவந்துள்ளோம் என எண்ணிக்கொள்கிறோம். அது இங்கில்லை, சென்றவை அனைத்தும் கரைந்துமறையும் தொடுவானில் உள்ளது. எதுவும் மீளமுடியாத முடிவிலி அது” என்றபின் துச்சளை பெருமூச்சுவிட்டு “சற்று துயில்கொள்ளவேண்டும்… நீ சென்று ஓய்வெடு” என்றாள்.

துச்சளையின் அறைவாயிலில் சாரிகை காத்து நின்றிருந்தாள். “மஞ்சம் ஒருக்கிவிட்டேன், அரசி. இரவுணவும் காத்துள்ளது” என்றாள். “வேண்டியதில்லை… நான் நேராகவே துயில்கொள்ளவிருக்கிறேன்” என்றாள் துச்சளை. “அக்கையே, நீங்கள் இன்றிரவு எதை கனவுகாண்பீர்கள் என எனக்குத் தெரியும்…” என்றாள் தாரை. துச்சளை “நீ என்ன எண்ணுகிறாய் என புரிகிறது. ஆனால் மெய்யாகவே எனக்கு அது உள்ளத்தின் ஆழத்திற்குள் சென்று மறைந்துவிட்டது. அது ஓர் அலைக்கழிப்பாக இருக்கும்வரைதான் இருப்புகொண்டிருந்தது. விடைபெற்றதுமே ஏதுமில்லை என்றாகிவிட்டது” என்றாள்.

“ஏதுமில்லை என்றா?” என்றாள் தாரை. “அவ்வாறல்ல, அது ஒரு நிறைவு. ஒரு நல்ல நினைவு. அதற்கப்பால் இன்று ஒன்றுமில்லை” என்றாள் துச்சளை. “என்ன நிறைவு? நீங்கள் எவருக்கும் பிழையிழைக்கவில்லை என்பதா?” என்றாள் தாரை. “அல்ல, அப்படி நான் எண்ணியிருந்தேன், அதுவல்ல. என்மேல் இன்னமும் அது அங்கே உள்ளதா என்ற நிலைக்கழிவுதான். அது நிறைவுற்றுவிட்டது” என்ற துச்சளை புன்னகையுடன் அவள் தோளில் கைவைத்து “அது அமைந்ததுமே இது மேலெழுந்துவிட்டதடி… இன்றிரவு நான் தந்தையை எண்ணி துயில்நீப்பேன் என நினைக்கிறேன்” என்றாள்.

“அன்னை ஏன் தந்தையைக் குறித்து அத்தனை விலகல் கொண்டிருக்கிறார்?” என்றாள் தாரை. “அவர்கள் எப்போதுமே அப்படித்தான். அவர்கள் அறிந்த அந்த முதல் திருதராஷ்டிரரை தன் விழிகளுக்குள் நிறுத்தி மேலே இறுக்கமாக கட்டுபோட்டுக் கொண்டார்கள். அதன்பின் அவர்கள் தந்தையை நோக்கியதே இல்லை. அந்த பாவையை கணவனென எண்ணி அதில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தந்தையை மெய்யாகவே தெரியாது” என்றாள் துச்சளை. “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். அவர்கள் பதின்மரும் ஒரு குழுவாக இருப்பதனாலேயே பிறரில்லா உலகொன்று அமைந்துவிட்டது” என்றபின் “வருகிறேன், அக்கையே” என்று சொல்லி தாள்தொட்டுவிட்டுச் சென்றாள் தாரை.

துச்சளை அறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் அமர்ந்தாள். சாரிகை அவளுடைய கடகங்களையும் சிலம்புகளையும் குழைகளையும் பதக்கமாலையையும் சரப்பொளி மாலையையும் கழற்றி ஆமையோட்டுச் செப்பில் இட்டு அப்பால் வைத்தாள். ஒரு மரச்சீப்பைக்கொண்டு அவள் உள்ளங்கால்களையும் முழங்கால்களையும் அழுத்தமாக வாரிவிட்டாள். கண்களை மூடி அவள் அந்த மெல்லிய வலியின் இனிமையை அறிந்தாள். உடலெங்கும் முடிச்சிட்டுக்கொண்ட நரம்புகள் மெல்ல பிரிந்து தளர்வதை உணர்ந்தாள். மனம் எண்ணைப்பரப்பில் என வழுக்கி வழுக்கி எதிலோ ஏற முயன்றது.

செல்லும்போது தான் சொன்னது அல்ல மெய், எஞ்சிய ஏதோ ஒன்றுதான் என தாரை உணர்வாள் என்று தோன்றியது. தான் சொன்னதுமல்ல என இன்னொரு எண்ணம் அவளுக்குள் வந்தது. உள்ளத்தை நுணுகி ஆராய்வதெல்லாம் எவையெவை பொய் என்றும் பொருத்தமில்லாதவை என்றும் வகுத்துக்கொள்ளவே. உள்ளத்தை மொழிகொண்டு அள்ளவே இயலாது. எது அப்பாலிருக்கிறதோ அதுவே அனைத்தையும் ஆளும் உண்மை.

அதைத்தான் பிரம்மத்தைக் குறித்தும் சொல்கிறார்கள் என்று எண்ணியதும் அவளுக்கு புன்னகை வந்தது. “அரசி?” என்று சாரிகை கேட்டாள். “ஒன்றுமில்லையடி… ஏதோ எண்ணம்” என்றபின் அவள் தலையைத் தொட்டு “நீ படுத்துக்கொள்… உணவருந்தினாயா?” என்றாள். “இல்லை” என்றாள் சாரிகை. “சென்று உணவருந்தி மீள்க… நான் துயில்கிறேன்” என்றபின் அவள் மெல்ல கையூன்றி படுத்தாள். எப்போதுமே மல்லாந்து படுக்கையில் உணரும் எடையின்மை. முதுகெலும்பு சுமை ஒழிந்து விடுதலை கொள்கிறது. அவ்வுணர்வு உடலெங்கும் பரவும். உள்ளமும் ஓய்வுகொள்ளும்.

கைகால்கள் தளரத் தொடங்கின. எண்ணங்கள் எங்கெங்கோ சிக்கி நின்றன, முள்வெளியில் பரவிய பஞ்சுத்துகள்கள். மெல்லிய தென்றல் ஒன்றை அவள் உணர்ந்தாள். புன்னகையுடன் தன் முகம் விரிந்திருப்பதை உள்ளிருந்து அறிந்தாள். மூச்சுஅடைத்து உடல் உலுக்கிக்கொண்டபோது சற்று புரண்டு ஒருக்களித்துப் படுத்தாள். துயிலில் அவள் புன்னகைப்பதை சாரிகை நோக்கி நின்றாள். பின்னர் அவள் ஆழ்துயிலில் மூழ்கியதை ஓங்கிஎழுந்த குறட்டை காட்டியது.

bl-e1513402911361பின்னிரவில் தன்னை சாரிகை தட்டி எழுப்பியதைக்கேட்டு துச்சளை எழுந்து அமர்ந்தாள். சிந்துநாட்டில் இருப்பதாக எண்ணிக்கொண்டு “என்ன ஆயிற்று? என்ன?” என்றாள். “அரசி, இளைய அரசி தாரை வந்துள்ளார்” என்றாள். “இப்போது பொழுதென்ன?” என்றாள் துச்சளை. “பின்னிரவு அரசி… முதற்சாமம்.” துச்சளை “வரச்சொல்” என்றபடி எழுந்து நின்று கூந்தலைச் சுழற்றிக் கட்டினாள். அவளுடைய அணிகளை சாரிகை எடுத்து அளிக்க ஒவ்வொன்றாக அணிந்துகொண்டிருக்கையில் தாரை உள்ளே வந்து வணங்கினாள்.

“அரசி, அரசர் இன்று காலைதான் கலிதேவனுக்கான தலைக்கோள் சடங்கை செய்கிறார்.” துச்சளை “யார் சொன்னது?” என்றாள். “சற்றுமுன் என் தலைவர் வந்தார். பதற்றம் கொண்டிருந்தார். அவரை வடக்குக்கோட்டைக் காவலுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கே புராணகங்கையில் இருந்து சில பூசெய்கைப் பொருட்களை ஓர் அந்தணர் குழு கொண்டுசென்றது. அவர்களனைவரும் கருநிறப் பட்டை கச்சையாகக் கட்டியிருப்பதைக் கண்டு ஐயுற்று அங்கே அவர்களுக்கு உதவிசெய்த முதியவரிடம் கேட்டிருக்கிறார். புலர்காலையில் நிகழும் ஓர் அரண்மனைப் பூசெய்கைக்காக கொண்டுசெல்வதாக சொல்லியிருக்கிறார்கள். பன்னிரு கருநாகங்கள் அவை…”

துச்சளை “அவை எதற்கு?” என்றாள். “அவை கலிதேவனுக்குரியவை. பூசெய்கைக்கெனவே கொண்டுசெல்லப்படுகின்றன. ஐயமே இல்லை” என்று தாரை சொன்னாள். “நான் உடனே நூல்களை ஆராய்ந்தேன். கலிதேவனுக்குரிய கராளகம் என்னும் பூசெய்கைக்குரிய பொருட்கள் அவை… கலிங்கப்பூசகர் எங்கே இருக்கிறார்கள் என்று என் கொழுநர் உடனே ஆராயச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அந்தியிலேயே மேற்குக்காட்டுக்கு சென்றுவிட்டதாக சொன்னார்களாம். உறுதிசெய்துகொண்டு இங்கே ஓடிவந்தார்.”

“என்னடி செய்வது?” என்று துச்சளை கேட்டாள். “நாம் இறுதி முயற்சி ஒன்றை செய்யலாம், அரசி. பேரரசர் கோரிய பின்னர் நாம் அதை செய்யவில்லையே என்னும் உளக்குறை நமக்கு உருவாகாது. அதன்பின்னர் இறைவழி” என்றாள் தாரை. “ஆனால்…” என துச்சளை தயங்க “அங்கே பூசெய்கை நிகழுமென்றால் செல்லும் வழி முழுமையாகவே காக்கப்பட்டிருக்கும். இப்போதே நாம் கிளம்பினால் அரண்மனையிலிருந்து மேற்குக்காட்டுக்குள் செல்லும் சுரங்கப்பாதை வழியாக அங்கே செல்லலாம். சற்று சுற்றிச்செல்வதாக இருந்தாலும் அங்கே சென்றடைந்துவிட முடியும். என் தலைவருக்கு அப்பாதை தெரியும்… அது கோட்டைச்சுவருக்கு அடியிலேயே செல்கிறது” என்றாள் தாரை.

உடலில் குடியேறிய பரபரப்புடன் துச்சளை “செல்வோமடி” என்று கிளம்பினாள். உடனே திரும்பி “என் முத்திரைக்கணையாழியை எடு” என்றாள். சாரிகை “நானும் வரமுடியாதல்லவா, அரசி?” என்றாள். “அரசகுடியினரன்றி பிறர் அந்தப் பாதையை அறியலாகாது” என்று தாரை சொன்னாள். “அவ்வாறென்றால் உடல்கொதிப்பு ஆற்றும் சூர்ணங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அரசி. நெடுந்தொலைவு நடக்கவேண்டியிருக்கும்” என்று சாரிகை சொன்னாள். “விரைந்து எடு… உடனே” என்றாள் துச்சளை.

சாரிகை உள்ளே ஓட “நம்மால் என்னடி செய்யமுடியும்?” என்றாள் துச்சளை. “நாம் காலில் விழுவோம். முடிந்தால் அந்தப் பூசெய்கையை மங்கலக்குறை செய்து நிறுத்துவோம். இன்று நான் செல்லும் எந்தப் பூசெய்கையும் அவ்வாறாகும். மாதக்குருதிநாள் இன்று” என்றாள் தாரை. துச்சளை புரிந்துகொள்ளாமல் விழித்து நோக்கினாள். “செல்வோம் அரசி, நமக்கு பொழுதில்லை” என்று தாரை கிளம்பினாள். “ஆம்” என்று துச்சளை உடன் கிளம்ப கையில் மருத்துவத்தூள் கொண்ட தந்தச்சிமிழுடன் சாரிகை பின்னால் ஓடிவந்து “பெற்றுக்கொள்க, அரசி” என்றாள்.

அதை வாங்கி இடையில் செருகிக்கொண்டு துச்சளை உடலை உந்தி உந்தி நடந்தாள். “நாம் அகத்தறைக்குச் செல்லவேண்டும். கருவூலம் செல்லும் பாதையில் நம்மிடம் நிற்கச் சொன்னார். அங்கிருந்து மேலும் கீழிறங்கிச்சென்று அடித்தளத்து அறையிலிருந்தே சுரங்கத்திற்குள் செல்லவேண்டுமென எண்ணுகிறேன்” என்றாள் தாரை. “எப்படி எண்ணினாய் அதை?” என்றாள் துச்சளை. “நான் முன்னரே அதை ஒருவாறாக கணித்திருந்தேன். ஏனென்றால் இங்கு வந்தநாள் முதல் இந்த அரண்மனையை கலிங்கச் சிற்பநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன்.” துச்சளை புன்னகைத்து “உனக்கு எதிலெல்லாம் ஆர்வம்?” என்றாள். “அனைத்திலும்… ஏனென்றால் நான் இங்கே ஆற்ற பணி என ஏதுமில்லை” என்றாள் தாரை.

அவர்கள் நாலைந்து இடங்களில் நின்று மூச்சுவாங்கித்தான் கருவூலத்திற்கு செல்லவேண்டியிருந்தது. இரவுக் காவலர்களின் விழிகளில் வியப்பு தெரிந்தது. “நாம் செல்வது சற்றுபொழுதுக்குள் விதுரருக்குத் தெரிந்துவிடும். கிளம்பும்போதே கணிகர் அறிந்திருப்பார்” என்றாள் தாரை. “நம்மை அவர்கள் செல்ல ஒப்புவார்களா?” என்று துச்சளை கேட்டாள். “அவர்கள் உய்த்தறியாதது ஒன்றே, என்னால் அரண்மனையின் சுரங்கப்பாதையை அறிந்துகொள்ளமுடியும் என்று… கணிகருக்கும் விதுரருக்கும்கூட அந்தப் பாதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை…” துச்சளை “மெய்யாகவா, நீயே கண்டுபிடித்தாயா? உன் கொழுநருக்குத் தெரியும் என்றாய்?” என்றாள். “அவருக்கு நான் சொன்னேன்” என்றாள் தாரை. துச்சளை புன்னகைத்து “நீ ஒரு அரசுமதியாளராக மலரவிருக்கிறாய்” என்று சொல்லி அவள் தோளை பற்றினாள்.

நெய்ப்பந்தங்கள் எரிந்த சிறிய இடைநாழியினூடாக அவர்கள் சென்றனர். வழி மறித்த வீரர்கள் துச்சளையைக் கண்டதும் தலைவணங்கினர். கருவூலத்திற்கு அருகே விகர்ணன் நின்றிருந்தான். அவர்களைக் கண்டதும் அருகே வந்து துச்சளையிடம் தலைவணங்கி “நீ சொன்ன குறிகளைக்கொண்டு சுரங்கப்பாதையின் தொடக்கத்தை கண்டறிந்துவிட்டேன்… அது ஒரு கற்சுவர். அதனருகே மூன்றுமுகச் சிம்மமும் அதன் காலடியில் புறாக்களும் இருந்தன” என்றான். “ஆம், அதுவேதான்” என்றாள் தாரை. “வருக, இங்கிருந்து இரண்டு நிலை கீழிறங்கவேண்டும்… மிகக் குறுகலான படிகள்” என்றான்.

“பிடித்துக்கொள்ளடி” என்று துச்சளை சொன்னாள். தாரை துச்சளையை தாங்கிக்கொண்டு ஒருவர் மட்டுமே செல்லுமளவுக்கு சிறிய கற்படிகளில் இறங்கினாள். “ஈரமாக உள்ளதா?” என்றாள் துச்சளை. “இல்லை அரசி, ஆழம் என்பதனால் ஊற்றுக்குளுமை கொண்டுள்ளது” என்று விகர்ணன் சொன்னான். “சுரங்கம் நான் செல்லுமளவுக்கு பெரிதாக இருக்குமல்லவா?” என்று துச்சளை கேட்டாள். “மாமன்னர் ஹஸ்தி சென்றிருக்கிறார் என்றால் எவரும் செல்லலாம்” என்று தாரை சொன்னாள். “ஆம்” என்று துச்சளை புன்னகைத்தாள். “எங்களுக்கு இத்தனை எடையை அவர்தான் விட்டுச்சென்றிருக்கிறார்.”

அந்தச் சுவர் அருகே வந்ததும் சுற்றுமுற்றும் நோக்கிய விகர்ணன் “என்ன செய்யவேண்டும், தாரை?” என்றான். “பொறுங்கள்” என்று முன்னால் சென்ற தாரை அந்தப் புறாக்களை எண்ணி அதன் பின் விரல்விட்டுக் கணித்து ஓர் எண்ணை அடைந்து சிம்மங்களைப்பற்றி ஒன்பதுமுறை அழுத்தினாள். மெல்லிய ஓசையுடன் பித்தளை உருளைகள்மேல் அமைந்த கற்பாளம் விலகி சுரங்கப்பாதையை காட்டியது. “உள்ளே இருளாக உள்ளதே, ஒளி வேண்டாமா?” என்றாள் துச்சளை. “விளக்கு தேவை, அது அங்கே கெடுகாற்றுகள் உள்ளனவா என்று அறிவதற்கும்தான்… சிறிய சுடர்கொண்ட நெய்விளக்கு மட்டுமே உள்ளே புகைவிடாதிருக்கும்” என்றாள் தாரை. விகர்ணன் “நான் கொண்டுவந்துள்ளேன்” என தன் தோல்பையை திறந்து உள்ளிருந்து பீதர்நாட்டு சிற்றகலை எடுத்தான். அதன் நெய்த்திரியை சுடர்பொருத்தி கையிலேந்திக்கொண்டு முன்னால் இறங்கி உள்ளே சென்றான். “மிகச் சிறிய படிகள், அரசி” என்றான்.

படிகளினினூடாக இறங்கும்போது “அறியாத இருளுலகு ஒன்றுக்கு செல்வதுபோல் உணர்கிறேன்” என்றாள் துச்சளை. தாரை “இந்தப் பாதையின் பெயரே காளநாகம் என்பதுதான். நாகத்தின் வாய்க்குள் நுழைந்துள்ளோம்” என்று சொன்னாள். விகர்ணன் மேலும் சென்றபின் “இதனூடாகச் செல்லவியலாது அரசி… மிகக் குறுகிய பாதை. படுத்துத் தவழ்ந்தாலொழிய எவரும் கடக்கமுடியாது” என்றான். தாரை அருகே சென்று குனிந்து நோக்கினாள். துச்சளை “ஆம், இது எனக்கான பாதை அல்ல” என்றாள். “தவழலாம், ஆனால் எத்தனை தொலைவு அப்படிச் செல்லமுடியும்?” என்று விகர்ணன் சொன்னான்.

“பொறுங்கள்” என்று தாரை சொல்லி “விளக்கை சுவர்களில் காட்டுக!” என்றாள். விகர்ணன் விளக்கொளியை சுவர்களில் பாய்ச்ச அவள் அங்கிருந்த சிறிய படங்களை நோக்கினாள். நாகங்கள், பலவகையான பறவைகள், ஆமைகள். விரல்தொட்டுச் சென்று ஒரு புள்ளியை அடைந்து அங்கிருந்த நீட்டுகல்லை மும்முறை அழுத்தினாள். அங்கே ஒரு கற்பாளம் கீழிறங்கியது. “அதற்குள் என்ன இருக்கிறது என்று நோக்குக!” என்றாள். விகர்ணன் உள்ளே நோக்கி “படைக்கலங்கள்… அல்ல, பித்தளை அடுமனைப்பொருட்கள்” என்றான். “அல்ல, அவை வெண்கலச் சகடங்கள்கொண்ட சிறிய மென்மர வண்டிகள். அதை வெளியே எடுங்கள்” என்றாள் தாரை.

அவன் அதற்குள் இருந்து வெண்கலத்தாலான பூண்களும் சகடங்களும் கொண்ட அமரும் மணை போன்ற நான்கு வண்டிகளை எடுத்து வெளியே போட்டான். “மூன்று போதும்” என்று தாரை சொல்ல ஒன்றை திரும்ப உள்ளே வைத்தான். தாரை மீண்டும் அந்தக் கல்லை அழுத்தி வாயிலை மூடினாள். “மிகச் சிறிய சகடங்கள். ஆனால் ஆற்றல் மிக்கவை” என்று விகர்ணன் சொன்னான். “சகடங்களும் ஆரங்களும் வெண்கலம் என்பதனால் மெழுகென உருளும்தன்மையும் கொண்டவை.” தாரை “இவற்றின்மேல் நெஞ்சையும் வயிற்றையும் அழுத்திக்கொண்டு கால்களை நீட்டி கைகளால் நீந்துவதுபோல உந்தி இப்பாதையில் செல்லவேண்டும். நன்று, அக்கை நடக்கவேண்டியதில்லை. மிக விரைவாக மறுபுறம் சென்றுவிடலாம்” என்றாள்.

துச்சளை “இப்பாதையில் சேறு இருந்தால் நாம் சிக்கிக்கொள்வோம்” என்றாள். “சேறு இருக்காது, அரசி. நன்கு தீட்டப்பட்ட கற்பாதையாகவே இருக்கும். இது செல்வதற்கான பாதை. வருவதற்கு வேறு பாதை உண்டு என எண்ணுகிறேன்” என்றாள் தாரை. “முதலில் நான் செல்கிறேன்” என்ற விகர்ணன் அந்தச் சிறிய வண்டியை எடுத்துப்போட்டு அதன்மேல் படுத்துக்கொண்டு மெல்ல கைகளால் உந்தினான். அது விரைந்து உருண்டு விசைகொண்டு இருளுக்குள் மறைந்தது. “அரசி, தாங்கள்” என்றாள் தாரை. “இறுதியாக நான் வருகிறேன்.”

எடைகுறித்து எப்போதும் கால்களில் இருக்கும் அச்சத்துடன் துச்சளை நடுங்கினாள். “அமர்ந்து உடலை மெல்ல அதன்மேல் அமைத்துக்கொள்க!” என்றாள் தாரை. “ஆம்” என்றபின் அவள் தாரையின் தோள்களை பற்றிக்கொண்டு மெல்ல அமர்ந்தாள். உடலை ஒருக்களித்து அந்த வண்டியின்மேல் படுத்தாள். பின் நெஞ்சை அழுத்தி குப்புறப்படுத்தாள். “கைகளை உடலுடன் சேர்த்துக்கொள்க! ஆடையை நன்கு அமைத்துக்கொள்க!” என்றாள் தாரை. “ஆம்” என்றாள் துச்சளை. வண்டியை மெல்ல உந்திச் செலுத்தினாள் தாரை. அது ஓசையே இல்லாமல் நழுவி இருளுக்குள் சென்றது. நெய்விளக்கை அணைத்துவிட்டு அவளும் வண்டியில் ஏறி தொடர்ந்து சென்றாள்.

வண்டிகள் மிக விரைவாகவே அகன்று சென்றுவிட்டிருந்தமையால் தாரை தனியாகவே இருளுக்குள் மூழ்கி அமிழ்ந்தாள். இருபுறமும் மென்மையாக்கப்பட்ட வளைந்த கற்சுவர் இருளுக்குள் இருண்ட மின்னாக சென்று மறைவதை, காதில் காற்றின் தீற்றலை உணர்ந்தாள். ஓரிடத்தில் நீர்த்துளிகள் அவள்மேல் விழுந்து தெறித்தன. மேலே மேற்குப்பகுதியின் ஏரி இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டாள். சகடம் ஓசையிடவேயில்லை. கற்பாளங்களை அத்தனை இசைவாகப் பொருத்தி ஒற்றைக்கல் என ஆக்கியிருந்தனர். வண்டி விரைவழிந்து மெல்ல நின்றது. சுரங்கத்தின் மறு எல்லையில் வெளியுலகின் மெல்லிய ஒளி தெரிந்தது. விகர்ணன் துச்சளையை கைபற்றி மேலே இழுக்க அவள் மூச்சுவாங்கியபடி எழுந்து படிகளில் ஏறி அப்பால் சென்றாள்.

தாரை மேலேறியதுமே தன் ஆடைகளை சீரமைத்துக்கொண்டு அங்கிருந்த சிற்றறைக்குள் அந்த வண்டிகளை எடுத்துவைக்கும்படி சொன்னாள். அவன் தூக்கி வைத்ததுமே அவை உள்ளே ஒரு பாதையில் உருண்டு செல்லத் தொடங்குவதை கேட்க முடிந்தது. “அங்கு சென்று காத்திருக்கும் போலும்” என விந்தையுடன் துச்சளை சொன்னாள். “ஆம், இது இறங்குபாதை. ஆகவேதான் நாம் மிக விரைவாக வந்தோம்… நடந்து வந்திருந்தால் இத்தொலைவுக்கு நான்கு நாழிகை ஆகியிருக்கும்” என்றாள் தாரை.

அவர்கள் அந்தச் சிற்றறையின் மேலே வந்தபோதுதான் அது ஒரு சிறிய ஆலயத்தின் கருவறை என உணர்ந்தனர். ஏகன், த்விதியன், திரையம்பகன் என்னும் மூன்று காவல்தெய்வங்களின் மண்ணாலான பெருஞ்சிலைகள் வரிசையாக இருந்தன. அவர்கள் எழுந்த பாதை அதற்கு நேர்பின்னாலிருந்தது. வெளிவந்ததும் இன்னொரு கல்லை இழுத்து தாரை அதை மூடினாள். கருவறைக்கு வெளியே முற்றத்தில் பொழிந்திருந்த வானொளியில் இலைகளின் மின் விழிக்கு துலங்கியது.

விகர்ணன் தன் மூட்டையை எடுக்க “என்ன செய்கிறீர்கள்?” என்றாள் தாரை. “விளக்கு பொருத்துகிறேன். இது அடர்காடு. நாம் சற்றுதொலைவு செல்லவேண்டும்” என்று விகர்ணன் சொன்னான். “காட்டில் விளக்கொளியால் பயனில்லை… நாம் இருப்பதை அது பிறருக்கு காட்டும். நமக்கு எதையும் காட்டாது” என்றாள் தாரை. “விழிபழகினால் நம்மால் அனைத்தையும் பார்க்கமுடியும். வானத்தை மட்டும் பார்க்கவேண்டியதில்லை.” விகர்ணன் “நான் காட்டில் இதுவரை நடந்ததில்லை” என்றான்.

தாரையே அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்றாள். துச்சளை சற்று நடந்தபின் “மெய்யாகவே விழிதுலங்கிவிட்டதடி… வேர்கள் நன்கு தெரிகின்றன” என்றாள். “எவ்விருளிலும் விழி நோக்கும், அக இருளில் அன்றி என்று எங்கள் குலப்பாடல் சொல்கிறது” என்றாள் தாரை. மிக இயல்பாக அவள் அவர்களை இட்டுச்சென்றாள். “தொலைவில் ஓநாயின் முனகல் கேட்கிறது. அங்கே மானுடர் வந்திருக்கிறார்கள்” என்றாள். “இங்கிருந்து தென்கிழக்காகச் சென்றால் நாம் அந்த இடத்தை அடைய முடியும். அங்குதான் கலிதெய்வத்தின் ஆலயம்.”

“நீ வந்திருக்கிறாயா?” என்றாள் துச்சளை. “இல்லை. ஆனால் இச்செய்தியை அறிந்ததுமே இவரிடம் ஒருமுறை பார்த்துவரச் சொன்னேன். இவர் சொன்னதைக்கொண்டு என் உள்ளத்தில் இந்த இடத்தை அடையாளப்படுத்திக்கொண்டேன்” என்றாள் தாரை. அவர்கள் காட்டுப்புதர்களினூடாக நடந்தனர். “கட்டுவிரியன் மணக்கிறது. சருகுகள்மேல் கால்வைக்க வேண்டாம். நான் வைக்கும் கால்தடங்களில் மட்டுமே உங்கள் கால்கள் பதிக!” என்றாள் தாரை. “உன்னுள் இருந்து மச்சர்குலக் கன்னி எழுந்துவிட்டாளடி” என்றாள் துச்சளை. “ஆம், மெய்யாகவே இப்போதுதான் விடுதலையையும் உவகையையும் அடைகிறேன். இனி இங்கே அடிக்கடி வருவேன்” என்றாள் தாரை.

காட்டுக்குள் செல்வது துச்சளைக்கும் உவகை அளித்தது. அவளுக்குள் இருந்த அலைக்கழிப்புகள் அனைத்தும் அகன்று உள்ளம் கூர்மைகொண்டிருந்தது. முழு விழிப்பிலிருந்த ஐம்புலன்களையும் தன்னை ஐந்தாகப் பகுத்துக்கொண்டு அது பின்தொடர்ந்தது. சிற்றொலிக்கே உடல் விதிர்த்தது. இலைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு மணம் கொண்டிருப்பதை மூக்கு உணர்ந்தது. ஒரு கூழாங்கல்லின் வளைவின் ஒளி சுடரென தெரிந்தது. “காட்டில் இருந்திருக்கவேண்டுமோ? நகர்களை அமைத்துக்கொண்டதுதான் அனைத்துத் துயர்களுக்கும் தொடக்கமோ?” என்றாள்.

“ஆம், அதையே நானும் உணர்ந்தேன்” என்றான் விகர்ணன். “துயரில்லாமல் மகிழ்ச்சியை தனித்துணரமுடியாது அரசி, ஆகவே எங்கும் மானுட உள்ளம் துயரை சமைத்துக்கொள்ளும்” என்று தாரை சொன்னாள். “நோக்குக, ஒரு மலைப்பாம்பு காத்திருக்கிறது.” துச்சளை அந்த மலைப்பாம்பின் விழிகளையே நோக்கிவிட்டாள். இரு பொருளற்ற நோக்குகள். இரு மணியொளித் துளிகள். அது காத்திருந்தது, தன் வாய்க்குரிய அளவுடன் தன்னை அணுகிவரும் இரைக்காக. “தொலைவில் உடுக்கொலி” என்றாள் தாரை. அவள் சொன்ன பின்னர்தான் மிக மெல்ல செவிப்பறையில் ஊசிமுனையால் தொடுவதுபோல அவ்வோசையை துச்சளை கேட்டாள்.

“ஒரு நாழிகையில் சென்றுவிடலாம்” என்றாள் தாரை. அவளைத் தொடர்ந்து செல்கையில் காலடியிலிருந்து பெரிய சாம்பல்முயல் ஒன்று துள்ளி விலகியது. வேர்ப்புடைப்பின்மேல் ஏறி செவி விடைத்து நோக்கி உடலதிர்ந்தது. உடலை நாண் என இழுப்பதுபோல குறுகி பாய்ந்து சென்றது. “இனி நாம் பேசவேண்டியதில்லை. பறவைகள் நம் அணுகலை அவர்களுக்கும் அறிவிக்கும்” என்றாள் தாரை. துச்சளை ஓர் அதிர்வை, பின்னர் உடலெங்கும் பரவிய மெய்க்கூச்செறிதலை உணர்ந்தாள். அவள் இரையையும் பார்த்துவிட்டிருந்தாள்.

முந்தைய கட்டுரைதேவதேவனின் கவிமொழி
அடுத்த கட்டுரைபுதுச்சேரி,கடலூர் கூடுகை -கடிதங்கள்