வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 8

fire-iconஒருகணத்தில் அபிமன்யூ அனைத்திலிருந்தும் முற்றாக பிரிந்து தனித்துவிட்டிருந்தான். மூச்சிரைக்க படிகளிலேறி தன் அறைக்குச் சென்று அங்கே சிறு பேழையில் இருந்த கணையாழிகளை எடுத்துக்கொண்டு படியிறங்குகையில் எட்டாவது படியிலிருந்து கால் எடுத்து அடுத்த படிக்கு வைக்கும்போது என்ன நிகழ்ந்ததென்று அறியாமல் அவன் நின்றுவிட்டான். அவன் உள்ளம் உடலில் இருந்து தனித்து பிரிந்துவிட்டது. படிக்கட்டின் கைப்பிடியை பற்றியபடி மெல்ல அமர்ந்து தன்னுடலெங்கும் பரவி மயிர்க்கால்களைக்கூட அசைவிழக்கச் செய்த செயலின்மையை உணர்ந்தான்.

அவனைச்சூழ்ந்து உபப்பிலாவ்யத்தின் அத்தனை பகுதிகளும் ஒலியால் கொந்தளித்துக்கொண்டிருந்தன. நகரின் கோட்டைக்கு வெளியே குறுங்காடுகளை அழித்து போடப்பட்டிருந்த பாடிவீடுகளின் நிரை நகரைவிட மும்மடங்கு பெரிதாக பரவியிருந்தது. தெற்குப் பகுதியில் அடுமனையாளர்களும் சூதரும் அரசஏவலரும் தங்குவதற்கான சிறிய மரப்பட்டை வீடுகளும் ஈச்சையோலை வேய்ந்த மூங்கில்குடில்களும் நெடுந்தொலைவில் இருந்த முகுளகம் என்னும் சிறிய பாறை வரை சென்றிருந்தன. அவற்றைச்சூழ்ந்து தோல்கூடாரங்களில் அயலக சிறுவணிகர்களும் மலையிறங்கி வந்த தொல்குடிகளும் தங்கியிருந்தனர்.

கோட்டையின் வடக்குப்பக்கத்தில் அரசர்களுக்கான பெரிய இரண்டடுக்கு பாடிவீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் மூங்கில் வேலியிட்ட ஒரு வளாகம் வகுக்கப்பட்டது. முகப்புக் கட்டடத்தின் இருபுறமும் ஏவலரும் அமைச்சரும் தங்குவதற்கான இணைப்புகளும் பின்புறம் அடுமனையும் நீராட்டறையும் அமைந்த சாய்ப்புகளும் கொண்ட மரக்கட்டடங்கள் உபப்பிலாவ்யத்தின் மாளிகைகளைவிட பெரிதாக இருந்தன. ஒவ்வொரு மாளிகை முகப்பிலும் அங்கு தங்கியிருக்கும் அரசர்களின் கொடிகள் உயர்ந்த மூங்கில் கம்பங்களில் பறந்தன. அவர்களின் தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் யானைகளும் முற்றங்களில் நிரைவகுத்து நின்றன. காற்றிலாடும் கரிய திரையென யானைகளின் அசைவு. அனல்பற்றிக்கொண்டதென பல்லக்குகளின் திரை நெளிவு. புரவிகள் தலைகுலுக்க கழுத்து மணிகளும் சேணக்கொக்கிகளும் குலுங்கும் ஓசை எழுந்தது.

அரசர்களுக்கான பாடிவீடுகளை அமைப்பதிலும் அவற்றை முறைப்படி ஒதுக்குவதிலும் மூத்த அமைச்சர் சௌனகர் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த கணம் முதல் ஈடுபட்டார். நட்பரசர் அருகருகே வரும்படியும் பகையரசர் எதிரெதிர் அமையும்படியும் அவை அமையலாகாதென்பது முதல் நெறி. சமந்தர்கள் அருகமையவேண்டும், ஆனால் அவர்களுக்குள் நல்லுறவு உண்டா என்று தெரிந்திருக்கவும் வேண்டும். ஒவ்வொரு மாளிகைக்கும் அவர்களின் ஊழியர்கள் பிறருடன் கலவாமல் வந்து மீள்வதற்கு உகந்த வகையில் சிறு புறவூடுவழிகள் அமைக்கப்பட்டன. ஒருவரின் அணிநிரை பிறிதொருவருடன் முட்டாதவாறு ஒவ்வொருவரும் எழுந்தருளவும் மீளவும் பொழுது வகுக்கப்பட்டது.

மேற்குப்பக்கம் அரசர்களின் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் தங்குவதற்கான சிறிய மாளிகைகள் அரசமாளிகைகள் அமைந்த அதே ஒழுங்கில் அதே கொடி முகப்புகளுடன் முகமுற்றங்களுடனும் கொல்லை சாய்ப்புகளுடனும் அமைந்திருந்தன. மேற்கு விரிவிலிருந்து உபப்பிலாவ்யத்திற்குள் நுழையாமலேயே வடக்கே செல்வதற்கான நான்கு பாதைகள் அமைந்தன. ஒன்று அரசர்கள் மட்டும் செல்வதற்கு. பிறிதொன்று பிற அனைவருக்கும். ஏவலருக்கும் விலங்குகளுக்குமென இரு வேறுபாதைகள் சற்று அப்பால் உபப்பிலாவ்யத்திற்கு ஏழுநாழிகை அப்பால் இருந்தது. உஜ்ஜீவனி என்னும் சிற்றாறு மூன்று இடங்களில் அணைகட்டி திருப்பிக் கொண்டுவரப்பட்டு மேற்கே புதிதாகத் தோண்டப்பட்ட சஞ்சீவனி என்னும் குளத்தில் நிரம்பி எழுந்து வழிந்து நகருக்குள் நுழைந்து பன்னிரண்டு ஓடைகளினூடாக மறுபக்கம் சென்று மறைந்தது.

பாடிவீடுகள் கட்டி முடிக்கப்பட பன்னிரண்டு நாட்களாயின. கலிங்கச் சிற்பிகள் யானைகள் இழுத்த துலாநிலைகளையும் பெருவடங்களையும் கொண்டு மரப்பட்டைகளைத் தூக்கி அடுக்கி நோக்கி நின்றிருக்கையிலேயே இரண்டடுக்கு மாளிகையொன்றை எழுப்பி முடிப்பதை கோட்டை காவல் மேடையிலிருந்து அபிமன்யூ ஒருமுறை பார்த்தான். அலையறைந்து நுரை திரண்டு மேலெழுவது போலிருந்தது. அருகே நின்றிருந்த சுரேசர் “செவ்வெறும்புகள் இலைப்பொதிக்கூடு கட்டுவதை பார்ப்பது போலிருக்கிறது. நம் விழி நோக்கியிருக்கையிலேயே இலைகளைப்பற்றி இணைத்து விளிம்புகளை பசையால் ஒட்டி அவை பெரிய கூடுகளை கட்டி முடித்துவிடும்” என்றார்.

Ezhuthazhal _EPI_30

விராட நகரியிலிருந்து ஒழியாத தொடரொழுக்கென அத்திரிகளிலும் மாட்டு வண்டிகளிலும் அடுமனைப்பொருட்களும் பிறவும் நகருக்குள் நுழைந்துகொண்டிருந்தன. எட்டு நூற்றுவர்குழுக்கள் சிறுபடைத்தலைவர்களால் வழிநடத்தப்பட்டு முன்னரே நகர்காவலுக்கு வந்துவிட்டிருந்தன. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த ஆறு நூற்றுவர் படைக்குழு அவர்களை ஒருங்கிணைத்து நகரைச் சூழ்ந்து மூன்று காவல் வளையங்களை அமைத்தது. அத்தனை காவல் மேடைகளும் கொடிகளாலும் அகல் விளக்குச் சுடர்களாலும் முழவோசைகளாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்டிருந்தன.

“நகர் விரிந்துவிட்டது. இனி அது ஒருபோதும் சுருங்காது” என்று கோட்டையின் காவல் மருப்பில் நின்றபடி மும்மடங்காக விரிவுபடுத்தப்பட்ட முகமுற்றத்தில் கூடி சிறுகூடாரங்களை விரித்து எழுப்பி அத்திரிகளையும் புரவிகளையும் வண்டிக்காளைகளையும் அவிழ்த்துகட்டிவிட்டு பொதிகளை அவிழ்த்து பரப்பிக்கொண்டிருந்த வணிகர் திரள்களைப் பார்த்தபடி சுரேசர் சொன்னார். அவர் அருகே நின்ற அபிமன்யூ “இது நகரல்ல, திருவிழாத்திரள்” என்றான். “ஆம், கீழே ஊற்றப்பட்ட நீர் என நாற்புறமும் சிதறிப்பரந்துள்ளது இந்நகர். இதற்கு வடிவென்று ஏதுமில்லை. இதைச் சூழ்ந்து ஒரு கோட்டை அமைத்தால் அரணிடப்பட்ட எதற்கும் வடிவென்று ஒன்று அமைந்து விடுகிறது” என்ற சுரேசர் “வடிவென்பது ஓர் அரண் மட்டுமே” என்றார்.

அபிமன்யூ புன்னகையுடன் “இத்தகைய சொற்றொடர்களை அமைப்பதில் மூத்த தந்தை எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பார். வந்ததிலிருந்து நூறு சொற்றொடர்களையாவது கேட்டிருப்பேன். முதல் சில சொற்றொடர்கள் உள்ளத்தை முரசுகோல் பட்டதுபோல் அதிர வைத்தன. நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று நானே எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டேன். பின்னர் இவை எவ்வகையிலோ அலை அடிக்கும் உள்ளமொன்றின் வெளிப்பாடுகள் என்று தோன்றியது” என்றான். சுரேசர் திரும்பி நோக்கி புன்னகையுடன் “எவரும் சொல்லாத ஒன்று இது” என்றார்.

“அமைச்சரே, மூத்த தந்தையின் உள்ளத்துக்குள் கொந்தளிப்பொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இப்புவியின் பேரறத்தையும் முழுமைநெறியையும் முரணொழுக்கத்தையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே அடைந்தவற்றை அள்ளி அள்ளி வைத்து வகுத்துக்கொள்கிறார். இந்நகரைச்சுற்றி கோட்டை அமைவது போல” என்றான். சுரேசர் நகைத்து “நல்ல கருத்து. இதை உங்கள் இரண்டாவது தந்தையிடம் சொல்லலாம், மகிழ்வார்” என்றார். அபிமன்யூ “அவர் பெருந்தோளர், கட்டப்பட்ட எதையும் உடைப்பதற்கு விழைபவர்.” சுரேசர் “நீங்கள்?” என்றார். “நான் வில்லவன், இலக்குகளென்றே அனைத்தையும் பார்ப்பவன். பறந்து கடப்பவன்” என்றான் அபிமன்யூ.

உபப்பிலாவ்யம் சௌனகரால் எட்டு பகுதிகளாக முற்றிலுமாக பகுக்கப்பட்டிருந்தது. அரண்மனை அதைச் சூழ்ந்திருந்த அத்தனை இல்லங்களுடன் முழுமையாகவே பாண்டவ அரசகுடியினருக்குரியவை என்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. கோட்டையை ஒட்டி அமைந்த இல்லங்கள் காவலர்களுக்கும் அங்காடி வீதியிலும் சூதர் வீதிகளிலும் இருந்தவை அரண்மனையின் ஏவல் செய்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. குடிமக்கள்பகுதிகள் ஐந்தாக பிரிக்கபப்ட்டு விராட புரியிலிருந்து வந்த குடித்தலைவர்களுக்கும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வரும் முதன்மை அமைச்சர்களுக்கும் இசைச்சூதர்களுக்கும் அணிப்பரத்தையருக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆலயப் பூசகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடம் தொலைவிலிருந்தே தெரியும்படி உயர்ந்த கொடியால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

தங்களுக்குரிய இடங்களை ஒவ்வொருவரும் மிக எளிதில் உரித்தாக்கிக் கொண்டனர். அவற்றை ஒட்டி தங்களை வடிவமைத்துக்கொண்டு மீறுபவர்களை நோக்கி சினம் கொண்டனர். இடம் அமைவதுவரைதான் அவர்கள் அங்கே அயலவர்களாக இருந்தனர். அமைந்ததும் முந்தைய ஊரைப்பற்றி கடந்தகாலத்தில் பேசலாயினர்.

அபிமன்யூ முதலில் நுழைந்தபோதிருந்த உபப்பிலாவ்யம் அவன் கண்ணெதிரிலேயே முழுமையாக மறைந்து முற்றிலும் புதிய நகரமொன்று எழுந்து வந்தது. அந்நகரம் அதற்கு முன்பு எங்கிருந்தது என்று அவன் எண்ணிக்கொண்டான். சௌனகரின் கற்பனையிலா? ஆனால் அது அவருடைய கற்பனை மட்டுமல்ல. அவருடைய எண்ணங்களும் கலிங்கச் சிற்பிகளும் சூத்ராகிகளும் காவல்படைத்தலைவர்களும் சிற்றமைச்சர்களும் இணைந்து உருவாக்கியது. அடுமனையளர்களும் ஏவலர்களும் சிற்றாலயங்களை அமைத்த பூசகர்களும் அதில் பங்கு கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் அந்நகருக்குள் நுழைந்த அனைவருமே அதை உருவாக்கினார்கள்.

அந்நகர் அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் என இருந்தது. அவர்கள் அதை வெளிப்படுத்தும் உள்ளங்களும் உடல்களும் மட்டுமே. அவர்களுக்கு முன்பு அது இருந்தது. பாடலிபுத்திரமாக, ராஜகிரகமாக, அஸ்தினபுரியாக, காம்பில்யமாக. சிதல்களுக்குள் புற்றென. பறவைகளுக்குள் காற்றென. அவர்கள் மறைந்தபின் பிறந்தெழுபவர்களினூடாக அது அங்கே இருக்கும். எங்கோ கண்காணாத ககனவெளியில் கருத்துருவென எழுந்து தன் கல்மண்மரவுருவை வண்ணவடிவ இருப்பை அடைந்தது. அடைந்தபின்னர் அதற்கப்பால் அப்படியே நீடிப்பது.

இவை அறியாமுகம் ஒன்றின் ஆடிப்பாவைகள். முடிவின்மையில் முடிவின்மையாக இருக்கும் ஒன்று காலஇடவடிவத்தை பருவடிவென்று சூடிக் களைந்தாடுகிறது. இந்நகரும் இதன் மாளிகைகளும் இங்கு கொந்தளிக்கும் திரளும் அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிதல்களும் எண்ணங்களும் நிகழ்வுகள் விளைவுகள் அழிவுகள் ஆக்கங்கள் என அனைத்தும் வேறெங்கோ பிறிதெவ்வகையிலோ நிலைகொள்பவை. இங்கு அது இவ்வாறு தங்களை நிகழ்த்தி பார்த்துக்கொள்கின்றது. கற்றநூல்களில் மொழியென இருந்தவை அறிதலென ஆனபோது வாள்வீச்சென போழ்ந்து சென்றன. அறிதல் நிகழும் தருணமென்பது சாவுக்கணம்.

மின் ஓய்ந்த இருள். உடல் விதிர்க்க உணரும் தனிமை. எண்ணுந்தோறும் சோர்வு அவன் உள்ளத்தின் ஆழத்தை அசைவிழக்கச் செய்தது. ஒவ்வொரு செயலையும் பொருளற்றதென்று காட்டியது அச்சோர்வு. அதை அஞ்சி செயல்வெறி கொண்டான். புலரியில் விழித்தெழுந்த கணம் முதல் பின்னிரவில் உடல் ஓய்ந்து மஞ்சத்தில் விழுவது வரை அங்கு அவனுக்கு பணிகள் இருந்தன. அடுமனைகளை ஒருங்கமைத்தான். காவலணிகளை பகுத்தும் தொகுத்தும் வகுத்தமைத்தான். அரண்மனை ஏவலரை மேலும் மேலுமென விசை கூட்டினான்.

முதலில் ஒவ்வொன்றையும் அமைத்தார்கள். பின் செம்மைப்படுத்தினார்கள். செம்மையென்று ஒன்று கண்ணுக்குத் தென்பட்டதுமே பிற அனைத்தும் மீறல்களென்றும் பிறழ்வுகளென்றும் பிசிறுகளென்றும் தோன்றலாயின. அதன்பின் சீரமைத்தல். சீரமைக்குந்தோறும் செம்மை கூர்மை கொண்டது. அந்நுண்மை மேலும் மேலுமென பிறவற்றை விலக்கி பிறழ்வுகளையும் மீறல்களையும் பிசிறுகளையும் பெருக்கியது. மணநாள் நெருங்க நெருங்க கண் பட்ட அனைத்துமே பிழையென்று தோன்றலாயிற்று கைதொட்ட அனைத்தையுமே செம்மைப்படுத்த வேண்டியிருந்தது. ஒருகணத்தில் அங்கிருந்த அனைத்துமே பிசிறுகளின் பிழைகளின் பெரும்பெருக்கென தோன்றி உளம் மலைக்கச் செய்தது.

ஒருகணமேனும் அனைத்தும் முழுதமையுமா என்று உள்ளிலிருந்து ஏதோ ஒன்று ஏங்கியது. மானுடர்களின் உள்ளே அமைந்து இப்புவியை பிறிதொன்றென சமைக்க விழையும் ஒன்று. இங்குள்ள அனைத்தையும் படைத்தது படைத்தவற்றை ஓயாது அழித்துக்கொண்டிருக்கிறது என்று ஒரு கூற்றை நினைவு கூர்ந்தான். அது யுதிஷ்டிரர் சொன்னது என நினைவில் பதிந்திருந்தது. மீண்டும் ஒருமுறை எழுந்தபோது சௌனகரின் கூற்று அது என்று தெரிந்தது.

அரண்மனை உப்பரிகையில் நின்று பார்த்தபோது வண்ணமலர்கள் பூத்த வசந்தகாலக்காடென கொடிகளும் அணித்தோரணங்களும் பாவட்டாக்களும் அணித்தூண்களும் சித்திர எழினிகளும் காற்றில் கொந்தளிக்க உபப்பிலாவ்யம் விரிந்து கிடந்தது. அவர்கள் அனைவரின் கைகளினூடாகவும் தன்னை பிறப்பித்துக்கொண்டு அவர்களைச் சூழ்ந்து அவர்களால் அறிய முடியாத பேருரு என நின்றிருந்தது. முதல் கணம் அந்நகரிலிருந்து தன் உள்ளம் விலகியது அப்போதுதான் என்று அபிமன்யூ உணர்ந்தான்.

ஒவ்வொரு செயலும் அதிலிருந்து விலகி நின்று நோக்கிய உள்ளத்திற்கு பொருளற்றதாகவும் பொருந்தாததாகவும் தோன்ற சவுக்கால் அறைந்து புரவியை விரையச்செய்வதுபோல உள்ளத்தை உந்தி அவன் பொருத்த வேண்டியிருந்தது. அந்த விசையால் ஒவ்வொரு உழைப்பும் பலமடங்காகியது. ஒவ்வொரு செயலுக்குப்பின்னும் களைப்பு வந்து தசைகளை எடையுடன் அழுத்தியது. திமிறி விலக்கி எண்ணி விசை கூட்டி தன்னை அந்நாட்களின் செயல் கொப்பளிக்குப்புக்குள் செலுத்திக்கொண்டிருந்தான். அதன் உச்சப்புள்ளி ஒன்றை எப்போதோ அடைவோம் என்று எண்ணியே இருந்தான். ஆனால் அதை முடிவின்றி ஒத்திவைக்க முடியுமென்றும் இவையனைத்திற்கும் அப்பால் அதை கடத்தி கொண்டு சென்றுவிட முடியுமென்றும் எண்ணினான்.

அவன் பெயரை கீழே மாளிகையின் அறைகளுக்குள் நகுலன் அழைப்பது கேட்டது. சுரேசர் அவனைப் பற்றி மறுமொழி ஏதோ சொன்னார். பிறிதொரு அறையில் திரௌபதியின் குரலை அவன் கேட்டான். கோட்டை முகப்பில் அரசர் ஒருவர் நுழைவதன் முரசொலியும் கொம்போசையும் எழுந்தது. மேற்கு கள முற்றத்தில் களிறொன்று பிளிறியது. உரத்த குரலில் சகதேவன் “அபிமன்யூ எங்கு சென்றான்? ஒவ்வொரு அரசரையும் இளவரசன் ஒருவனாவது சென்று வரவேற்க வேண்டுமென்று ஆணையிட்டிருந்தேனல்லவா?” என்றான். சிற்றமைச்சர் பூர்ணர் “அவர் தன் கணையாழிகளை எடுக்கச்சென்றார்” என்றார். “சென்று பாருங்கள்! உடனடியாக அவனை அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி நகுலன் மறுபுறம் படிகளில் இறங்கிச் சென்றான்.

அபிமன்யூ அமர்ந்திருந்த படிகளின் முகப்பு வழியாகவே பூர்ணர் அங்குமிங்கும் பார்த்தபடி படிகளில் இறங்கி முற்றத்தை நோக்கி சென்றார். முழு உருவுடன் அவன் மிக அருகே அமர்ந்திருந்தாலும் அவரால் அவனை பார்க்க முடியவில்லை. முற்றிலும் அசைவிழந்து அதனாலேயே காட்சியிலிருந்தும் அவன் மறைந்துவிட்டிருந்தான். அசைவைத்தான் விழிகள் முதலில் அறிகின்றன. அசைவிழந்தால் மறைந்துவிடலாமென்னும் போர்க்கலை அவனுக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அதைவிட அதற்கும் அப்பால் சென்று தொட்டழைப்பது இருப்பு. தன்னிருப்பு கரைந்தோரை பிறர் உள்ளங்கள் அடையாளம் காண்பதில்லை.

எழவேண்டும் என்ற ஆணையை ஆழத்தில் நூறு சுவர்களுக்கு அப்பாலிருந்து அவன் கேட்டான். எழவேண்டும். இன்னும் ஒரு நாள். நாளை புலரியில் அவன் உத்தரையை மணம் கொள்கிறான். உண்டாட்டும் சூதர் கலையாடலும் போர்க்களியாடலும் அந்தியுடன் முடிவடையும். நுரைத்துப் பெருகி எழுந்த உபப்பிலாவ்யம் மீண்டும் தன்னை குறுக்கி அமைத்துக்கொள்ளத் தொடங்கும். மறுநாள் முதல் ஒவ்வொருவராக கிளம்பிச்செல்வர். அரசர்கள், படைத்தலைவர்கள், அமைச்சர்கள், ஏவலர்கள், வணிகர்கள். அவர்கள் வாழ்ந்த மாளிகைகள் மட்டும் இங்கு எஞ்சும். அவர்கள் செல்லும்போதே அவற்றை பிறர் நிரப்பத் தொடங்கிவிடுவார்கள் உண்மையில் அவர்கள் இங்கிருக்கையிலேயே அவ்விடங்களில் பிறர் உள்ளத்தால் இருக்கிறார்கள்.

“அறிக, இளவரசே! அமைக்கப்பட்ட எந்த இல்லமும் குடியேறப்படாததில்லை. இல்லங்களுக்கேற்ப தன்னை விரித்துக்கொள்வது மானுடம். நீர்த்துளியின் ஒவ்வொரு அணுவும் விலகி பரவ விழைகிறது” கலிங்கச்சிற்பி காளிகர் சொன்னார். “இல்லங்கள் என்பவை மானுட உடலின் விராடவடிவங்களே. ஆமையின் ஓடுபோல.” அவன் எங்கோ குரல்களை கேட்டான். கனவிலென. சுபகையின் புன்னகை நினைவிலெழுந்தது. ஆடிப்பாவை குறித்த ஒரு சொற்றொடர். சுபகை ஏன் நினைவிலெழவேண்டும் இப்போது? ஆடிப்பாவை அதில் எங்கு இணைகிறது?

fire-iconஅர்ஜுனனின் உரத்த குரல் “இங்கென்ன செய்கிறாய்?” என்று வினவ அபிமன்யூ திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எழுந்து நின்றான். சற்று நேரம் எங்கிருக்கிறோம் என்ற உணர்வையே அவன் அடையவில்லை. கால்கள் நடுங்கிக்கொண்டிருக்க கைப்பிடியை பற்றிக்கொண்டு உதடுகளை திறந்து மூடினான். “உன்னை அரண்மனை முழுக்க தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவையினர் அமர்ந்துவிட்டார்கள். மூடன் போல் இங்கமர்ந்திருக்கிறாய்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நான் கணையாழியை…” என்று அபிமன்யூ சொல்ல கையால் மறித்து “அவைக்கு செல்! இப்போது அங்கிருக்க வேண்டியவன் நீ” என்றபடி அர்ஜுனன் திரும்பிச் சென்றான். அபிமன்யூ மேல்மூச்சுவிட்டபடி படிகளில் எடைமிக்க காலடிகளை ஒவ்வொன்றாக வைத்து இறங்கி கீழே வந்தான். நெடுந்தொலைவு ஓடி மீண்டதுபோல் உடலெங்கும் களைப்பு நிறைந்திருந்தது. குளிர்ந்த நீர் நிறைந்த தோல்பை என தன்னை உணர்ந்தான். ஒவ்வொரு அடிக்கும் உந்தி முன்செல்ல வேண்டியிருந்தது.

அவனைக்கண்டதுமே சுரேசர் விரைந்து ஓடி வந்து “இளவரசே, எங்கு சென்றீர்கள்? தங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். “அவை கூடிவிட்டதா?” என்று அபிமன்யூ கேட்டான். “அவை முறைமைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. சௌனகர் பேசிக்கொண்டிருக்கிறார். வருக!” என்று சுரேசர் அவனை அழைத்துச் சென்றார். அவனை ஏற இறங்க நோக்கியபின் “தாங்கள் இன்னும் சற்று சிறப்பாக ஆடை அணிந்திருக்கலாம்” என்றார். அபிமன்யூ தன்னை நோக்கி “வெண்ணிறப் பட்டாடை. பொன்னூல் பின்னலிட்ட செம்பட்டுத்தலையணி. ஆரங்கள், தோள்வளைகள், கங்கணங்கள், பொற்கச்சை. இதைவிட சிறப்பாக நான் எப்போதும் உடை அணிந்ததில்லை” என்றான்.

“இளவரசே, இது தங்கள் மணநிகழ்வுக்கான அவைகூடல். அனைவராலும் தாங்கள் நோக்கப்படுவீர்கள்” என்றார் சுரேசர். “இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து கொண்டு வந்த உடை இது” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம்” என்றபின் ஒருகணம் தயங்கிய சுரேசர் “இன்று எத்தனை சிறிய ஊரில் நிலமில்லாதவர்களாக தங்கள் தந்தையர் இருக்கிறார்கள்! வந்துள்ள அத்தனை அரசர்களுக்கும் தெரிந்த ஒன்றுண்டு. இனி வென்றெடுத்தால் மட்டுமே உங்களுக்கு நிலம். அவர்கள் விழிமுன் அவர்கள் எண்ணியிராத உயராடையணிந்து நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்” என்றார்.

அபிமன்யூ “அது ஏளனத்துக்குரியதாகும்” என்றபின் “கவலைவேண்டாம், அமைச்சரே. ஒன்று சொல்கிறேன், அந்த அவையில் எனது மண நிகழ்வைப்பற்றி எவரும் எதுவும் பேசப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்று சுரேசர் கேட்டார். “இது என் மணநிகழ்வை முன்வைத்து இந்திரப்பிரஸ்தத்தை மீட்பது குறித்த சொல்லாடல் மட்டுமே. நம் தரப்பில் எத்தனை மன்னர்கள் வந்திருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கும் பொருட்டே இதை இளைய யாதவர் நமக்கு ஆணையிட்டார்” என்றான்.

சுரேசர் புன்னகைத்து “அவ்வண்ணமெனில் நிலம் மீட்பதைப்பற்றி மேலும் பேசவேண்டியதில்லையென்றே எண்ணுகிறேன். அநேகமாக முதன்மை ஷத்ரிய மன்னர்கள் எவரும் வரவில்லை” என்று அவனை சிற்றறைக்குள் அழைத்துச் சென்று அங்கு நின்ற இரு காவலரிடம் “அரசரின் ஆடைகளை சீர் செய்யுங்கள். கச்சை முறைப்படி மடிக்கப்பட்டிருக்க வேண்டும். குழல் கலைந்திருக்கிறது” என்றார். ஏவலர் தேர்ந்த விரல்களால் அபிமன்யூவின் தோற்றத்தை சீரமைத்தனர்.

அபிமன்யூ “பிதாமகர் சல்யர் வந்துவிட்டாரா?” என்றான். “ஏழுநாட்களுக்கு முன்னரே மத்ர நாட்டிலிருந்து கிளம்பிவிட்டார். வந்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது. பிரியவாகினியை கடந்துவிட்டார் என்று அடுத்த செய்தி நேற்று வந்தது. இன்று காலை தீர்க்கதனுஸைத்தாண்டி அவரது அணிப்படைநிரை சீர்வரிசைகளுடன் வந்து கொண்டிருக்கிறது என்றார்கள்” என்றார் சுரேசர். “அவை நிகழ்வு இன்றென அவருக்குத் தெரியாதா?” என்றான் அபிமன்யூ.

சுரேசர் “அவருக்கும் யாதவர்களுக்கும் நல்லுறவில்லை. அவையில் அவர்களுக்கு இணையாக தான் அமரவேண்டுமென்று ஐயுறுகிறார் போலும். அவை நிகழ்வுகள் முடிந்து இளைய யாதவர் இங்கிருந்து கிளம்பிய பின்னர் அவர் நகர் நுழைவாரென்று எண்ணுகிறேன்” என்றார். “எப்படியும் அவர் வந்தாகவேண்டும். இது அவரது குருதி, அவருடைய கொடி வழியினர் அமரப்போகும் அரியணை.” அபிமன்யூ சிலகணங்கள் எண்ணத்திலமைந்துவிட்டு தலைதூக்கி “நமது செய்தியுடன் சென்றவர் எவர்?” என்று கேட்டான்.

“சௌனகரே நேரில் சென்றழைத்தார். செய்தியைக் கேட்டதும் பேருவகையுடன் எழுந்து ஆம் நாம் நமது தரப்பை மதிப்பிடவேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று சல்யர் சொல்லியிருக்கிறார். எனது படைகளுடன் உபப்பிலாவ்யத்திற்கு வருகிறேன். விராடரும் பாஞ்சாலரும் நானும் இணைந்தால் அஸ்தினபுரியிடம் வாளின் மொழியில் உரையாட முடியும் என்றார். அவரது அவையிலிருந்த குடித்தலைவர்கள் அவரை ஆதரித்து கோல் தூக்கி முழக்கமிட்டனர். எனது தங்கையின் மைந்தர் நிலம் இழந்து வெறும் பெயர் கொண்டவர்களாக அங்கிருக்கிறார்கள். நான் சென்று மீள்கையில் அவர்களின் கொடி அவர்களுக்குரிய நிலத்தில் ஊன்றப்பட்டு பறக்கும் என்றார்” என்றார் சுரேசர்.

அபிமன்யூ சுரேசரையே நோக்கிக்கொண்டிருந்தான். சுரேஷர் அவன் கண்களை சந்தித்து “சௌனகர் அவ்வுணர்வுகள் அனைத்தும் மெய்யென்றே சொன்னார். அவரது கணிப்புகள் எப்போதும் பொய்யாவதில்லை” என்றார். “மேலும் பலகாலமாகவே சல்யர் பால்ஹிகர்களுக்கு எதிர்நிலை கொண்டிருக்கிறார். சென்ற பதினான்கு ஆண்டுகளில் எட்டுமுறை சிறு எல்லைப்பூசல்கள் நிகழ்ந்துள்ளன. பால்ஹிக நாட்டு பூரிசிரவஸ் தனது நகரைச் சுற்றி கல்கோட்டை ஒன்றை எழுப்பியிருக்கிறான். எல்லைகள் முழுக்க காவல் கோட்டங்கள் அமைந்துள்ளன.”

“ஆம், அவரது கனவுகள் எளிய மலைமகனுக்குரியவை அல்ல என்றனர்” என்றான் அபிமன்யூ. சுரேசர் “அஸ்தினபுரியின் துரியோதனரின் இடம் அமர்ந்திருக்கும் தகுதி கொண்டிருக்கிறான். தார்த்தராஷ்டிரர் கோல் கொண்டு அமர்ந்ததுமே பால்ஹிகம் வளரத்தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அவனை எண்ணி சினந்தும் பொறுத்தும் அமர்ந்திருக்கிறர் சல்யர். அவருக்கு வேறு வழியில்லை. நமக்கென்றில்லை, அவருக்கென்றே கூட அவர் இங்கு வந்தாக வேண்டும்” என்றார்.

அறைக்குள் புகுந்து யௌதேயன் “இளையவனே, உன்னை மூன்றுமுறை முதற்தந்தை கேட்டுவிட்டார்” என்றான் “இதோ வந்து கொண்டிருக்கிறேன்” என்று அபிமன்யூ சொன்னான். சுரேசர் “ஆடையணியவேண்டியிருந்தது” என்றார். அபிமன்யூ “அவை முடிய நெடுநேரமாகுமா?” என்றான். “அவையில் அமர்ந்து பழகுக, இளவரசே. அத்தனை அவைகளிலும் நெளிந்துகொண்டே இருக்கிறீர்கள்” என்றார் சுரேசர். யௌதேயன் சிரித்து, “ஆம், அவைகளில் பந்தங்களும் இவன் உடலும் மட்டுமே நெளிந்தாடுகின்றன” என்றான்.

சுரேசர் “எனது கணிப்பென்னவென்றால் இந்த அவை நிகழ்ந்து முடியப்போகும் தருணத்தில் சல்யர் தன் பெரும்படையுடன் நகர் புகுவார். இங்கு பேசப்பட்டவை அனைத்தும் அந்த ஓசையிலும் தூசியிலும் மறந்துபோகும். நுழைகையிலேயே பெருவெள்ளமென நகரை நிறைப்பார். வந்ததுமே அவைத்தலைமை கொள்வார். தன் மருகருக்கு உரிய நிலத்தை தன் கைகளால் மீட்டளித்தேன் என்னும் பெருமையை ஈட்டிக்கொள்வார். அவர் பிந்துவது இதன் பொருட்டே” என்றார். யௌதேயன் “உன் வரவை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள், இளையோனே” என்றான்.

முந்தைய கட்டுரைகேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்
அடுத்த கட்டுரைகடைசி முகம்- கடிதம்