சின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’

sinna2

இனிய ஜெயம்

கடந்த சனி, ஞாயிறு கடுமையான காய்ச்சல். . சும்மா படுத்துக் கிடக்கையில் மனம், குமட்டிக்கொண்டிருக்கும் வயிறு, குழம்பிக் கசக்கும் நா, அனல் தகிக்கும் செவிகள் இவற்றிலேயே சிக்கிக் கிடக்கும். கண்களை மூடினால் கிறக்கம் வந்து,, தயாராக நிற்கும் தீக்கனவுகள் எழுந்து வந்து அலைக்கழிக்கும். கூடவே அம்மா. நான் வாசித்துக்கொண்டிருக்கும் வரை நார்மல். அதுதான் அம்மா என் மன உடல் நலனுக்கு அவர்கள் வகுத்து வைத்திருக்கும் எல்லை. அம்மாவை நார்மலாக வைத்திருக்க ஒரே வழி நான் ஏதேனும் வாசித்துக்கொண்டிருப்பதே.

படுத்திருக்கும் சோபா சாய்மானம் முழுவதும் புத்தகங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒன்றை உருவினேன். சந்தியா பதிப்பகம் வெளியீடான சின்ன அண்ணாமலை அவர்கள் தனது வாழ்வின் முக்கிய மற்றும் சுவையான தருணங்களை எழுதி, கட்டுரைத் தொகுதியாக வெளிவந்த ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் கிடைத்தது. சின்ன அண்ணாமலை வாழ்க்கைத் தருணங்கள் குறித்தும் ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் குறித்தும் முன்பு ஒரு உரையாடலில் என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நூலை இப்போதுதான் வாசிக்கிறேன்.

இன்று இந்தியப் பிரதமருக்கு எதிராக ‘’வீரமாக’’ கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் ஆனந்த விகடனின் நாற்பத்தி ஒன்றாம் ஆண்டு தீபாவளி மலர் வாசிக்கக் கிடைத்து. முப்பத்தி ஐந்து கட்டுரைகள். ஜே சி குமரப்பா, அவர்களின் செல்வத்தின் பொறுப்புகள் என்றொரு கட்டுரை அதைத் தவிர எல்லா கட்டுரையும் சும்மா பக்கம் நிரப்பும் கட்டுரைகள். உள்ளடக்கத்தின் கீழே தெளிவாக ‘’இந்த மலரின் கதைகள் கட்டுரைகள் உட்பட யாவும் கற்பனையே எதையும் யாரையும் குறிப்பிடுவன அல்ல’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘’பா – ஸ்ரீமதி கஸ்தூரி பா அம்மை’’ அதாவது காந்தி என்ற பெயர் கூட குறிப்பிடப் படவில்லை. அப்புறம் கீழ்க்கண்ட குறிப்பின் படி ‘’கட்டுரை’’ உட்பட கற்பனையே. இப்படித்தான் ஆங்கிலேயே ஆட்சி முன்பு பம்மிக் கிடந்திருக்கிறது விகடன். இது போன்ற சூழலில்தான் சின்ன அண்ணாமலை பத்திரிகை நடத்துகிறார். [வழமை போல மனைவியின் நகைகளை விற்றுத்தான்] விகடனுக்கு இணையாக தீபாவளி மலர் கொண்டு வந்து நஷ்டம் அடைகிறார். வங்கப் பஞ்சம் எனும் நூல் வெளியீட்டு தண்டனை அடைந்து சிறை செல்கிறார்.

sinna

காந்தியை தொட்டுப்பார்ப்பது என்பது அக்காலத்தில் கிட்டதட்ட ஒரு புனிதக்கடமை போல இருந்திருக்கிறது. என் அம்மாவை பெற்ற அப்பா, காந்தி திருச்சி வருகையில், கூட்டத்தில் முண்டி அடித்து நுழைந்து, அவரை தொட்டுப் பார்த்த கதையை என் சிறு வயதில், அன்றைய பரவசம் சிறிதும் குன்றாமல் சொல்லி இருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் அவரது பால்யத்தில் இதே போல காந்தியை தொட்டுவிட்ட கதையை ஒரு கட்டுரையில் பரவசத்தோடு எழுதி இருப்பார். ஒரு புறம் தீண்டாமை, மறுபுறம் தீண்டும் இன்பம். சின்ன அண்ணாமலை காந்தியை தொட்டுவிட்ட அனுபவமே இந்த நூலின் முதல் கட்டுரை. அங்கே துவங்கிய அண்ணாமலை ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி அளிக்கும் நிலை வரை உயர்கிறார். காந்தி கேட்கிறார் ‘’நஷ்டம் வராம நடத்துவியா?’’ [லாபம் இரண்டாம் பட்சம்,நஷ்டம் வரக் கூடாது அதுவே குறைந்த பக்ஷ வெற்றி] ராஜாஜி சொல்கிறார் ‘’அண்ணாமலையும் உங்களைப்போல வைசியர்தான்’’ காந்தி ‘’அச்சா அச்சா’’ என புன்னகையுடன் அனுமதி அளிக்கிறார்.

அண்ணாமலை அடையும் இந்த உயர்வு,அவரது உழைப்பாலும், சூழலாலும் அவர் அடைந்தது என்பதைக் காட்டிலும், அவருள் இலங்கி, அவரது ஆற்றலாகவும், அவரது மீறலாகவும் வெளிப்படும் இயற்கையின் ஷாத்ரகுணத்தால் என்பதை, அந்த ‘’ஷாத்ரத்தின் வெளிப்பாட்டை’’, வாசகன் உணர்வதே இந்த தன்வரலாற்றுக் குறிப்பு நூலை முக்கிய நூலாக உயர்த்துகிறது. பதின் வயது. மலேஷியா, பள்ளிக்காலத்தின் போதே, அங்கு மதுவுக்கு எதிராக அங்குள்ள மக்களை திரட்டி போராடுகிறார். அங்குள்ள அரசு அவரை கப்பலேற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புகிறது. இப்படி பதின் பருவம் முதலே, அண்ணாமலைக்குள் இலங்கும் இந்த மக்களை திரட்டும் ஆற்றலும், சரியான ஒன்றின் பொருட்டு அரசை எதிர்க்கும் துணிவும் அவரை தேசிய விடுதலைப் போராட்ட முன்னணி தலைவர்கள் வசம் கொண்டு சேர்க்கிறது.

அண்ணாமலை, மக்களை திரட்டும் கலையில் எந்த அளவு தேர்ச்சி கொண்டவர் என்பதற்கு, அவர் மும்பையில் கிங்காங் தாராசிங் குஸ்திபோட்டிக்கு மக்களை திரட்டும் யுக்தி கொண்டு அறியலாம். போராட்ட குணத்துக்கு திருவாடனை சிறை உடைப்பு சம்பவத்தை சுட்டலாம். அவரது ஆதர்சம் ராஜாஜி கலந்து கொள்ளாத ஆகஸ்ட் புரட்சி. ஆனாலும் அண்ணாமலை அதில் ஈடுபடுகிறார். கைதாகிறார். திருவாடனையில் சிறைவைக்கப்படும் அவரை, ஆயிரக்கணக்கில் ஊர் மக்கள் ஒன்று கூடி சிறையை உடைத்து மீட்கிறார்கள். கலவரத்தில் போலிஸ் துப்பாக்கியால் சுட, அண்ணாமலையை காப்பாற்ற ஊர் மக்களில் சிலர், அண்ணாமலைக்கு பாதுகாப்பாக அவர் முன் நின்று, சூடு வாங்கி இறக்கிறார்கள். இறந்துபோக வேண்டியது நாம், பதிலாக வேறு சிலர் நமது கண் முன்னால்,அந்த மரணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நாம் இருந்தால்?. …….மீண்டபின் சித்தம் கலங்கி விடும். தன் இயல்பால் ஷாத்ரமும்,மீறலும் கொண்ட ஆளுமையால் மட்டுமே இப்படி ஒன்றை கடந்து வர முடியும். அண்ணாமலை அத்தகு ஆளுமை. அவருக்கு இது நேர்கிறது.கடந்து வருகிறார்.

நூலுக்குள் வெவ்வேறு கட்டுரைகள் ஊடே, மெல்லிய சித்திரமாக ராஜாஜியின் ஆளுமையும், வளர்ச்சியும்,வீழ்ச்சியும் துலங்கி வருகிறது. ராஜாஜி முதன்முதலாக அண்ணாமலையின் இல்லத்துக்கு வருகிறார். உணவு நேரம். ராஜாஜி இயல்பாக தனக்கும் பரிமாற சொல்கிறார். அண்ணாமலையின் மனைவியார் ‘’நீங்க ஆசாரம் எல்லாம் பாக்க மாட்டீங்களா’’ என தயக்கத்துடன் வினவுகிறார். ராஜாஜி அவருக்கு [மகாபாரத்தில் வரும் ‘’யார் பிராமணன்’’ எனும் விவாதத்தின் சாரத்தை] எது ஆசாரம், எது பிராமணத்துவம் என விளக்குகிறார். அன்று துவங்கி இறக்கும் கணம் வரை திருமதி அண்ணாமலை ராஜாஜி அவர்களின் சிஷ்யை போன்றே ஆகி விடுகிறார். ராஜாஜி இயற்கை எய்திய தகவல் கேட்டு, அதிர்ச்சியில் உயிர் இழக்கும் அளவு அவர் மேல் அன்பு பூண்டவராக இருக்கிறார்.திருமதி அண்ணாமலை. ஒரு முறை காவல் துறை உயர் பதவிக்கு ஆளெடுப்பு நடக்கிறது. வழமை போல பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டாவில் யாரும் அப்ளே செய்யவில்லை எனும் சால்ஜாப்புடன் வேறொரு இடைநிலை சாதிக்காரருக்கு அப் பணி மாற்றி வழங்கப்படும் நிலை. ராஜாஜி ஊடே புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களை பிடித்து, பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டா வழியே, சரியான நபருக்கு அந்தப் பணி சென்று சேரும் வகை செய்கிறார். ஒரு முறை ஒரு பதவிக்காக,பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் போட்டி இடுகிறார். அனுமதி ராஜாஜி வசம் பெற வேண்டும். ராஜாஜி இதில் போட்டி இட உனக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவுகிறார். போட்டியாளரும் பதிலளிக்கிறார். அவர் போனதும் ராஜாஜி அண்ணாமலை வசம் சொல்கிறார் ‘’இந்தப் பதவிக்கு தன்னுடைய தகுதியாக, தான் செய்த பணிகளை அவர் பட்டியல் இட்டார், மாறாக தனது சாதிகோட்டா உரிமை என அவர் சொல்லி இருந்தால் அவரை இரண்டாம் பட்சமாகவே வைத்திருப்பேன்’’. இத்தகு ராஜாஜிதான், காமராஜருடன் இணைந்து செல்ல இயலாமல், தனது கல்விக் கொள்கையை திரித்து, தன்னை சிவில் சமூகத்தின் ஆதரவில் இருந்து விலக்கிய,திமுக உடன் இணைந்து தேர்தலில் காமராஜரை தோற்க்கடித்து [ இந்த நூலுக்குள் பேசப்படாவிட்டாலும் ராஜாஜிக்கு இணையான ஆளுமை சரிவுதான் காமராஜருடயதும்] காங்கிரசுடன் சேர்ந்து தானும் தோற்கிறார்.

கூட்டம் சேர்க்கும், அதை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவராக சின்ன அண்ணாமலை இருந்தாலும், எதிலும் தனது எல்லை எது என்பதை அறிந்தவராகவும் இருக்கிறார். உதாரணமாக அவர் தற்செயலாக தலைமையேற்கும் தொல்காப்பிய மாநாடு. அண்ணாமலை தனக்கு தொல்க்காப்பியம் குறித்து ஏதும் தெரியாது என முன்பே சொல்லி விடுகிறார். இருப்பினும் அமைப்பாளர்கள் அவரது ‘’தன்னடக்கத்தை’’ கைவிட்டு தொல்காப்பியம் குறித்து பேச அழைகிறார்கள். அண்ணாமலையும் மேடை ஏறி, அது ஒரு நல்ல நூல், அனைவரும் வாசிக்கவேண்டிய நூல், தமிழின் சொத்து, என பொதுப்படையாக பேசிக்கொண்டே போகிறார். மக்களை கட்டிப் போடும் பேச்சு. பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரே ஒரு இடத்தில் அடித்து ஆடி விடுகிறார். தொல்க்காப்பியத்தில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் உண்டு எனும் அவரது ஆய்வை முன்வைத்த தருணமே அது. அவருக்கு அடுத்து பேச வரும் இரண்டாமவர் ‘’நான் ஆய்ந்த வரையில் நான்கு சமஸ்க்ருத சொற்களே உண்டு, மீதி மூன்று சொல் எது ‘’ என கேட்டு இருப்பிடம் அமைகிறார். அண்ணாமலை என்னடா இது என முழிக்கத் துவங்க, மூன்றாமவர் பேச எழுகிறார். அவர் தனது ஆய்வில் பதினோரு சமஸ்க்ருத சொற்களை கண்டடைந்ததாக சொல்கிறார். இதன்பிறகே அண்ணாமலை மூச்சு விடுகிறார். ஆம் இரண்டாமவர் தன்னை கேட்டால் மூன்றாமவரை கைகாட்டி விட்டு விடலாம் இல்லையா.

நூலின் பல சுவாரஸ்யமான அத்யாயங்களில் ஒன்று, சின்ன அண்ணாமலை ராஜாஜியுடன் இணைந்து மஞ்சள் பத்திரிகைகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை. ஒரே ஒரு ஆபாச பத்திரிகை மட்டும் அத்தனை தடைகளையும் மீறி,[அதுதான் முன்னணி மஞ்சள் பத்திரிக்கையும் கூட] தமிழகத்தினுள் பவனி வருகிறது. காரணம் அது பதிப்பிக்கப்படுவது பெங்களூரில். பத்திரிகை தலைப்பை சொன்னால் நம்பமாட்டீர்கள். தலைப்பு ‘’இந்து நேசன்’’. சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் என்பதால் பெரும்பாலான அத்யாயங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் முத்தாய்ப்புடன் முடிகிறது. உண்மையில் பல நம்பமுடியாத சம்பவங்கள் தனது வாழ்நாளில் கண்டவர்தான் சின்ன அண்ணாமலை. மும்பையில் கலவரத்தில் தன்னை காப்பாற்றி வீடு சேர்க்கும் முஸ்லிம் ட்ரைவர், தலைமறைவு வாழ்வில் தன்னை மறைத்து வைத்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரி, சிறை வாழ்வில் தனக்கு முகமறியா காதலியாக தொடர் கடிதம் எழுதும் சிறுவன், என பல கதாபாத்திரங்களை உள்ளடக்கிய வாழ்க்கைக்கதை சின்ன அண்ணாமலையுடையது.

இந்தியாவில் காந்தி பணிபுரிந்த வருடங்களை, காந்தி யுகத்தை ராமச்சந்திர குகா கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறார்.

//ஒரே சமயத்தில் மத சீர்திருத்தம், அரசியல் விடுதலை, ஜனநாயக அடிப்படை உரிமை, தொழில் புரட்சி, கல்வி, பெண் விடுதலை, சமூகநீதிக்கான நவீன நோக்கு, என அனைத்து நேர்மறை அம்சங்களையும் நோக்கி புரண்ட தேசம் உலகில் பிறிதொன்றில்லை.//

தேசத்தின் இந்த புரண்டுநகரும் திருகுகண்ணிக்கு எத்தனையோ ஆற்றல்கள் துணை நின்றிருக்கிறது. அந்த ஆற்றலின் திவலை சின்ன அண்ணாமலையில் வெளிப்படுவதைஇந்த தன்வரலாற்று நூலில் காண இயல்வதே இந்த நூலை எளிய.நூல் எனும் தளத்திலிருந்து உயர்த்தி, இதை முக்கிய நூலாக்குகிறது.

கடலூர் சீனு

***

தேசியத் தமிழர் சின்ன அண்ணாமலை

***

முந்தைய கட்டுரைவாசிப்பு கடிதங்கள்
அடுத்த கட்டுரைவங்கடை