‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70

69. ஏழரை இருள்

flowerசிறு கூத்தம்பலத்தின் வாயிலில் பிரீதை வந்துநின்று மும்முறை தலைவணங்கினாள். அவள் நிழல் தன் முன் சுவரில் அசையக் கண்டு திரும்பிப் பார்த்த திரௌபதி விழியுயர்த்தி என்ன என்றாள். கைகளால் அரசியை சந்திக்கவேண்டும் என்றாள் பிரீதை. முழவும் தண்ணுமையும் யாழும் நிறைந்திருந்த அவையில் பிறிதொன்றை நோக்கி உள்ளத்தை கொண்டுசெல்வது எதிர்காற்றில் உந்திச்செல்வது போலிருந்தது. திரௌபதி விரலால் சுதேஷ்ணையை தொட்டாள். காய்ச்சல் கொண்டதுபோல் மயங்கியிருந்த விழிகளுடன் திரும்பிய சுதேஷ்ணை புருவங்களால் என்ன என்றாள்.

பிரீதையை அவள் சுட்டிக்காட்டியபோது உளம் மீண்டு அவளை அடையாளம் காண அரசிக்கு நெடுநேரமாயிற்று. பின்னர் அருகே வரும்படி கைகாட்டினாள். சுவரினூடாக ஒதுங்கி வந்து அரசியின் அருகே முழந்தாளிட்ட பிரீதை அவள் காதில் தான் கொண்டுவந்த செய்தியை ஓரிரு சொற்களில் சொன்னாள். வலி கொண்டவள்போல அரசியின் முகம் மாறியது. பின்னர் பிரீதையை செல்லும்படி கைகாட்டிவிட்டு உடலை அசைத்து அமர்ந்து நாகவிறலியின் சொற்களை மீண்டும் சென்றடைந்தாள். அவள் முகம் கனவில் நெகிழ்ந்தது.

செய்தி சொல்லப்பட்டவுடன் அரசியின் முகத்தில் ஒரு கணத்தில் வந்த மாறுதலிலிருந்தே அச்செய்தி தன்னைப் பற்றியது என்பதை திரௌபதி உணர்ந்தாள். உள்ளம் முள்முனையாகி அச்செய்தியின் முனையை சென்று தொட்டது. எதுவானாலும் ஆகட்டும் என்று பிறிதொரு உள்ளம் அதை உதறியது. நாகவிறலியின் கைவிரல்கள் குறுமுழவின் மீது நடமிட்டன. சூழ்ந்திருந்த சுடர்களின் ஒளியில் அவ்விரல்களின் நிழல்கள் தலைக்குமேல் எழுந்து சுவர்களிலும் கூரையிலுமாக அதே தாளத்தை காற்றில் மீட்டின. அக்கூத்தம்பலமே தாளத்துடன் கூத்திடுவதாகத் தோன்றியது.

நாகவிறலி தமயந்தி சேதிநாட்டுக்குப் போன கதையை சொல்லிக்கொண்டிருந்தாள். கலிங்கத்திலிருந்து சேதிக்கும் அவந்திக்கும் மாளவத்திற்கும் செல்லும் வணிகப்பாதைகள் நெடுங்காலமாகவே அரசர்களால் பேணப்பட்டன. ஐநூறாண்டுகளுக்கு முன் சேதிநாட்டரசர் உபரிசிரவசு சூழ்ந்திருந்த பிற நாடுகளின் அரசர்கள் அனைவரையும் தன் தலைநகர் சூக்திமதியில் கூட்டி அப்பாதைகளைப் பேணுவதற்கான பொதுக்காவல் அமைப்பொன்றை உருவாக்கினார். அது ஷோடசபத சம்யுக்தம் என்று அழைக்கப்பட்டது. அரசர்கள் அதற்கு ஒரு படையை அளித்து அப்படைக்குரிய செலவுகளையும் அளித்தனர்.

சேதி காலப்போக்கில் சிறு நாடாக ஆகியபோது அந்தக் காவல் அமைப்பு நிலமில்லாத நிகர்அரசாக நீடித்தது. அதற்கென்று பன்னிரு காவற்படைகளும் படைத்தலைவர்களும் அவர்களை ஆளும் மையக்குழுவும் அதற்குரிய நெறிகளும் உருவாயின. பதினாறு நெடும்பாதைகளில் நூற்றெட்டு இடங்களில் அவர்கள் வணிகரிடம் திரை கொண்டனர். காட்டு விலங்குகளும் கள்வரும் அணுகாது பாதைகளை அவர்கள் காத்தனர். அப்பாதைகளில் அமைந்த சிற்றூர்கள் சிறு புரவிப்படைகளை அதற்கென்று நிறுத்தி வைத்திருந்தன. அக்காவல் அமைப்பின் கொடி ஒருபுறம் கழுகும் மறுபுறம் நாகமும் கொண்டிருந்தது. அக்கொடி பறக்கும் பாதைகளூடாக மட்டுமே வணிகர்கள் செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.

விந்தியமலை கடந்து சேதியை அடைவதென்பது காட்டாறுபோல பள்ளத்தாக்குகளில் மலைகளை வளைத்து நெளிந்து செல்லும் பாதைகளில் நாளும் பொழுதுமென்றிலாது சென்றுகொண்டே இருப்பதுதான். முதற்கோடையிலேயே வணிகக் குழுக்கள் செல்லத் தொடங்கும். முதல் மழை வரை அப்பெருக்கு ஓயாது. சகடங்கள் சென்று சென்று சாலையின் மண் குங்கும விழுதென்றாகியது. அங்கு செல்பவர் அனைவரும் சுடுமண் சிலைகள் என்றானார்கள். உச்சிக்கோடையின் வெயிலில் செம்மை கரைந்து வழியும் வியர்வை குருதித்துளிகளென பூழிமண்ணில் சொட்டி சிறு முத்துகளென உருளும். தொலைவில் மலைச்சரிவில் செல்லும் வணிகக் குழுக்களை செம்முகில் ஒன்று ஏந்திச்செல்வதுபோலத் தோன்றும். காற்றில் காட்டெரி என செம்புழுதி எழுந்து சுழித்து மேலேறி அசையும்.

flowerதமயந்தி பூமிகரின் குழுவினருடன் சென்றபோது கோடை முதிர்ந்திருந்தது. பேரொலியுடன் வெடித்துவிடப்போவன போல அனல் கொண்டிருந்தன உச்சிப்பாறைகள். மலைச்சரிவெங்கும் புதர்கள் கருகி செம்மண் புழுதி மூடி அனல் எரிவது போன்ற ஓசையை எழுப்பியபடி காற்றில் அதிர்ந்து கொண்டிருந்தன. மரங்கள் இலைகளை உதிர்த்து கிளை முனைகளில் மட்டும் சற்றே தளிரிலை சூடி சோர்ந்து நின்றிருந்தன. உச்சிப்பொழுதணைந்து வெயில் நிறம் மாறத் தொடங்கிய பின்னரே பறவைகள் எழுந்தன. செல்லும் வழியெங்கும் பாறைகளில் முன்பு சென்றவர்கள் ஊற்றுகளும் விடுதிகளும் எத்தனை தொலைவில் என்று சுண்ணத்தால் எழுதி வைத்திருந்த குழூஉக்குறிகள் இருந்தன. ஒரு சுனையிலிருந்து மறுசுனை நோக்கி உயிரை துளித்துளியாகச் செலவிட்டுச் சென்றடைவதே பயணமென்று இருந்தது.

வியர்வை என குருதி உருமாறிச் சொட்டி ஒழிந்து உடல் வெறுமைகொள்ள முள்ளடர்ந்த சாமிமரத்தின் நிழலில் சற்றே இளைப்பாறியபோது முதுநிமித்திகர் வான்குறிகளை நோக்கினார். அவர் சொல்லச் சொல்ல அருகே நின்ற இளம்மாணவன் அதை தரையில் சிறு குச்சியால் எழுதினான். அவர் குனிந்து அதை கூட்டி நோக்கி பூமிகரிடம் “இன்னும் இரண்டு நாட்கள். அதற்குள் பெருமழை உறுதி” என்று சொன்னார். “இரண்டு நாட்கள் அல்லவா?” என்று பூமிகர் கேட்டார். “இரண்டு நாள் மிகுதி. நாளையே வானம் கிழிபட்டாலும் வியக்கமாட்டேன்” என்றார் நிமித்திகர்.

“மழையில் இச்செம்பூழிப் பாதையில் செல்வதென்பது களிச்சேறு நிறைந்த வயலில் உழுவதைவிடக் கடினமானது. காளைகளின் லாடங்களும் தேய்ந்துவிட்டன” என்றார் பூமிகரின் இளையோனும் பங்கினனுமாகிய சுசி. “கிளம்புங்கள். மழைக்கு முன் நாம் சூக்திமதியை சென்றடைந்தாக வேண்டும்” என்றார் பூமிகர். “ஒரு கணமும் வீணாக்கலாகாது. இனி துயிலில்லை அடுமனைத் தொழிலும் இல்லை. உலருணவும் நீரும் மட்டுமே. கணமும் கால் நிலைக்காது முன் செல்க!” சுசி ஆணைகளை பிறப்பித்தபடி கைமுழவை ஒலிக்க வைத்தார்.

ஆனால் அவர்கள் நெடுந்தூரம் வந்து களைத்துவிட்டிருந்தனர். சகடங்கள்கூட தேய்ந்து கனவிலென ஓசையற்று ஓடின. அவ்வப்போது உடலின் ஆற்றல் ஓய எருதுகள் தலை தாழ்த்தி நுரை கக்கி நின்றன. அவற்றின் வாயைத் திறந்து மூங்கில் குழாயால் வெல்லம் கலந்த நீரை ஊட்டியபின் சாட்டையால் அடித்து மீண்டும் கிளப்பினர். அந்தியிருண்டு வந்தபோது காவலன் ஒருவன் பூமிகரிடம் “நிலவிலாத இரவு, வணிகரே. இப்பாதையில் செல்வது பொருளுடையதல்ல” என்றான். “நாளை உச்சிக்குள் நாம் சேதிநாட்டின் எல்லை கடந்து தலைநகரை சென்றடைந்தாக வேண்டும். இன்றிரவு மட்டும்தான் நம்மிடமுள்ளது” என்றார் பூமிகர்.

“ஆனால் இது வறண்ட காட்டுப்பாதை. இருண்டது” என்றான் காவலன். “பந்தங்களேற்ற மீனெண்ணெய் இருக்கிறதல்லவா?” என்றார் பூமிகர். ஏவலன் “ஆம், அரக்கும் உள்ளது” என்றான். “பிறகென்ன? வண்டிகள் செல்லட்டும்” என்றார் பூமிகர். மறுமொழி கூறாமல் காவலர் தலைவணங்கி விலகினர்.

அந்தியிருளுக்குமுன் சற்றே அமர்ந்து நீரருந்தி இளைப்பாறிவிட்டு மீண்டும் அவர்கள் கிளம்பினர். வானை நோக்கிய நிமித்திகர் “தென்கிழக்குச் சரிவில் விண்மீன்கள் எழவில்லை, வணிகரே. முகில் நிரை அங்கு கூடுகிறதென்று தோன்றுகிறது. நாளை உச்சிக்குள் மழை உறுதி” என்றார். பூமிகர் “நாம் நாளை பின்காலையில் சூக்திமதியில் இருப்போம். கோட்டைப்புறத்திற்கு சென்றுவிட்டாலும்கூட பழுதில்லை. ஏன், அரசப் பெருஞ்சாலையை அடைந்துவிட்டாலேகூட அஞ்சுவதற்கேதுமில்லை” என்றார். “செல்க! செல்க!” என்று ஏவலர் ஒலியெழுப்பினர்.

சலஃபை “வழியில் எவரேனும் விழுந்து இறந்தால்கூட கவலைப்படப் போவதில்லை பெருவணிகர்” என்றாள். “வணிகர்களும் போர்வீரர்களே. வெற்றியன்றி பிறிதொன்றையும் அவர்கள் பொருட்டாக எடுப்பதில்லை” என்றார் மருத்துவர் சுதீரர். “இவர்களுக்கு எதிரி யார்?” என்று சலஃபை கேட்டாள். “வேறு எவர்? இவர்களிடம் பொருள் வாங்கிப் பிழைக்கும் எளிய மக்கள்தான்” என்று சுதீரர் சிரித்தார். “பேச்சு தேவையில்லை, விரைக!” என்று பூமிகர் சொன்னார்.

இருளுக்கு விழி பழக அவர்கள் குனிந்து தரையைப் பார்த்தபடி சீரான காலடியுடன் நடந்து கொண்டிருந்தனர். காளைகளுக்கும் புரவிகளுக்கும் நீருடன் சிறிது மதுவும் கலக்கி ஊட்டப்பட்டிருந்தமையால் அவை களைப்பு ஒழிந்து விசை கொண்டன. சகடங்களின் ஒலிகள் இருளெனச் சூழ்ந்திருந்த பாறைகளில் எதிரொலித்து எங்கெங்கோ சென்று மீண்டு வந்தன. வெந்த மண்ணின் மணம் காற்றில் வீசிக்கொண்டிருந்தது.

சாலையருகே பாறைப் பரப்புகளில் எழுதப்பட்டிருந்த குழூஉக்குறிகளை பந்த ஒளி காட்டிப் படித்தபடி வந்த ஏவலன் “இன்னும் அரைநாழிகைப் பொழுதில் ஊற்று ஒன்று இருக்கிறது” என்றான். “நம்மிடம் நீர் எஞ்சியுள்ளதா?” என்றார் பூமிகர். “சிறிதே உள்ளது. ஆனால் நீரை நிறைத்துக்கொண்டு புரவிகளுக்கும் காட்டியபின் செல்வதே நன்று. இனி வருவது மலைச்சரிவு. சகடக் கட்டையை மிதித்தபடியே வண்டிகள் செல்ல முடியும். காளைகள் விசையழிந்து நலியும்” என்று முதிய ஏவலன் சொன்னான்.

ஊற்றை அறிவிக்கும் குழூஉக்குறியொன்று சாலையோரத்துப் பெருமரமொன்றில் தொங்கிய மரப்பலகையில் இருந்தது. அதை நோக்கியபின் “அருகேதான்” என்று ஏவலன் சொன்னான். பந்தம் எழுந்து சுழன்று ஆணையிட்டதும் வண்டிகள் கடிவாளம் இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. புரவிகளிலிருந்து இறங்கிய காவலர் அவற்றை பிடித்துக்கொண்டு நீர்காட்ட கொண்டுசென்றனர். காளைகளை அவிழ்த்தபோது அவை களைப்புடன் கால்களை உதறி பெருமூச்சுவிட்டன. “மது அருந்தியதால் அவற்றுக்கு மேலும் நீர் தேவைப்படுகிறது” என்று சுதீரர் சொன்னார். “அப்படியே இங்கு அனைவருக்கும் சிறிது மது அளித்திருந்தால் இத்தனை நடை அலுப்பு தோன்றியிருக்காது” என்றாள் சலஃபை.

தமயந்தி சிற்றடி எடுத்துவைத்து சென்று வேர்க்குவையொன்றில் அமர்ந்து கால்களை நீட்டி விரல்களால் மூட்டுகளை நீவிவிடத் தொடங்கினாள். பின்னர் தன் இடையிலிருந்து பாக்கை எடுத்து வாயிலிட்டு மென்றபடி முடிந்த குழலை அவிழ்த்து விரித்து அலுப்பொலியுடன் கூன்முதுகை நிமிர்த்தி படுத்தாள். அக்கணமே துயில் வந்து மூட, வாய் திறந்து உதடுகள் அதிர நீள்மூச்சுவிடலானாள்.

தோல்பைகளில் ஊற்று நீரை ஏவலன் நிறைத்தான். புரவிகளும் காளைகளும் நீரருந்தி கால்களை உதறியபடியும் மூச்செறிந்தபடியும் மேலேறின. நீர் நிறைந்த வயிற்றின் எடை தாளாதவைபோல காளைகள் ஆங்காங்கே படுத்துவிட்டன. புரவிகள் மூன்று காலில் நின்று தலை தாழ்ந்து தொங்க அரைத்துயிலில் ஆழ்ந்தன. பூமிகர் நீரருந்தியபின் வெறும் தரையிலேயே கால்நீட்டி படுத்துக்கொண்டார். ஆங்காங்கே ஒவ்வொருவராக அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுக்கத் தொடங்கிய சற்று நேரத்திலேயே மூச்சொலிகள் கேட்கத்தொடங்கின.

முதிய ஏவலன் மூக்கைச்சுளித்து மணம் கொண்டபின் பூமிகரிடம் வந்து “இது உகந்த இடமல்ல என்று எண்ணுகிறேன், பெருவணிகரே” என்றான். “ஏன்?” என்றார் அவர். “யானைச்சாணியின் மணம். இந்தப் பகுதியில் பிறிதொரு ஊற்றே இல்லை. இங்கு காட்டு யானைகள் நீரருந்த வரக்கூடும்” என்றான். சுசி “காட்டு யானை இங்கு வாழமுடியுமா என்ன? கண்ணுக்கு எட்டிய தொலைவில் பச்சையே இல்லை” என்றார். “ஆம், அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். இலை இல்லாதபோது வறுநிலத்து யானை மரப்பட்டைகளை உண்ணும். அதனால் மிகுவிடாய் கொண்டிருக்கும். விடாய் மிகுந்த யானை பெருஞ்சினம் நிறைந்தது.”

பூமிகர் சில கணங்கள் அவனைப் பார்த்தபின் “இங்கே எங்காவது இது குறித்து எச்சரிக்கை பொறிக்கப்பட்டுள்ளதா?” என்றார். “இங்கு எவரும் இவ்வாறு இரவு தங்குவதுபோல் தெரியவில்லை” என்றான் ஏவலன். “நாமும் தங்கப்போவதில்லை, இதோ கிளம்புகிறோம்” என்றார் பூமிகர். பிறகு அமர்ந்தபடியே உடலை நிமிர்த்தி நிமித்திகரிடம் “சங்கு முழங்கட்டும். நாம் கிளம்பவிருக்கிறோம்” என்றார்.

நிமித்திகர் படுத்தபடியே தன் இளவலைப் பார்த்து கையசைத்தார். அவன் அரைத்துயிலில் தன் தோல் பையிலிருந்த சங்கை எடுத்து வாயில் வைத்தான். “எழுந்து நின்று ஒலியெழுப்பு, மூடா” என்றார் நிமித்திகர். அவன் எழுந்து நின்று சங்கை வாயில் வைத்தபின் சுற்றிலும் துயின்றுகொண்டிருந்தவர்களை பார்த்தான். பூமிகரும் அமர்ந்தபடியே சற்று துயின்றவர்போல் இருந்தார். அவன் சங்கை மீண்டும் பையில் வைத்தபின் கீழே அமர்ந்தான். சில கணங்களில் சங்கை முழக்கிக்கொண்டிருப்பது போன்ற கனவு உள்ளே நிகழ துயின்றுவிட்டான்.

பொழுதாகிவிட்டது என்று கனவுக்குள் அவன் துடித்தெழுந்து சங்கை எடுத்து வாயில் வைத்து மும்முறை ஓசையெழுப்பினான். அப்பகுதியின் அத்தனை பாறைகளும் எதிரொலிக்கும் பேரொலியாக மீண்டும் மீண்டும் அவன் சங்கு அதை முழக்கிக்கொண்டிருந்தது. துயின்றுகொண்டிருந்தவர்கள் எல்லாம் பாய்ந்து எழுந்தனர். அவர்களின் அலறல் குரல்களை அவன் கேட்டான். விழிதிறந்து பார்க்கையில் தன்னை மிதித்தபடி அங்குமிங்கும் ஓடுபவர்களின் நிழல் கொந்தளிப்பே அவனுக்குத் தெரிந்தது. பின்னர் யானைகளின் பிளிறலோசையே சங்கென ஒலித்தது என உணர்ந்தான்.

“யானைக் கூட்டம்! யானைக் கூட்டம்!” என்று யாரோ கத்தினர். யானைகள் அவர்களை சூழ்ந்துவிட்டிருந்தன. மூன்று திசைகளிலிருந்தும் இருளிலிருந்து ஊறிப்பெருகி உருவெடுத்தவைபோல் அவை வந்துகொண்டே இருந்தன. வண்டிகளை அவை அறைந்து சிதறடித்தன. புரவிகள் கனைத்தபடி காட்டுக்குள் சிதறி ஓட எருதுகளை அவை மிதித்து கீழே தள்ளின. கொம்புகளால் குத்தி தூக்கி அப்பாலிட்டன. அம்புகளும் வில்லுமாக எதிர்கொண்ட ஏவலர்களையும் காவலர்களையும் தூக்கி மண்ணில் அறைந்தும் கால்களால் மிதித்தும் கொன்றன. குருதிவீச்சம் எழுந்தது. பந்தங்கள் ஒவ்வொன்றாக மண்ணில் விழுந்து அணைய இருட்டு செறிந்தது.

எரிசுட்டதென எழுந்த வெறியில் அவன் ஓடிய விசை கண்டு அவனை அறிந்த கொம்பன் யானை ஒன்று அவனைத் துரத்தியது. அவன் கால்தடுக்கி கீழே விழுந்து புரண்டு எழுவதற்குள் அவனை இடைசுற்றி பிடித்தது. அவனைத் தூக்கி தன் வலக்காலில் ஓங்கி அறைந்தது. யானையின் துதிக்கையின் எடையையும் கல்லென நெஞ்சில் நிறையும் பேரச்சத்தையும் அவன் இறுதியாக உணர்ந்தான்.

தமயந்தி காலைஒளி நன்கு எழுந்த பிறகே விழித்துக்கொண்டாள். முந்தைய நாளிரவு வேர்க்குவை ஒன்றில் உடல்பொருத்தி படுத்தவள் பின் தன் உடல் வளைவிற்கேற்ப அதனுடன் ஒண்டிக்கொண்டாள். கனவில் அவள் கரிய நீள்உடலும் திரண்ட தோள்களும் கொண்ட அரசியென பட்டத்து யானைமேல் அமர்ந்து அரசப் பெருவீதியில் அணியூர்வலம் சென்று கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் மங்கலப் பேரிசையும் முழங்கின. வானிலிருந்து பெருமழை இறங்கியதுபோல் மலரும் மஞ்சள்அரிசியும் பொழிந்தன.

அவள் ஏறிச்சென்ற பட்டத்து யானை கரிய மாநாகம் ஒன்றின் படம் என்று அவள் பின்னர் உணர்ந்தாள். அதன் படவளைவு மட்டுமே யானை என மண்ணுக்கு மேலிருந்தது. மண்ணுக்கு அடியில் அதன் உடல் கரிய ஆழ்நதி என வளைந்து நெளிந்துகொண்டிருந்தது. ஒளிவிடும் கற்கள் பதிக்கப்பட்ட அரியணையில் அமர்ந்து அவை முழக்கத்தை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் அவளை நோக்கி முறையிட்டனர், மன்றாடினர், முகமன் உரைத்தனர். கோல் தாழ்த்தி தலைவணங்கினர். அவள் கையிலிருந்த செங்கோலை அவர்கள் அச்சத்துடன் நோக்கி பின் விழிவிலக்கிக் கொண்டிருந்தனர். அது பொன்னிறமான நாகம். அதன் படம் விரிந்து நாக்கு பறந்துகொண்டிருந்தது. தரையில் அதன் வால் நெளிந்து சுழித்தது.

பின்னர் அவள் காட்டுக்குள் வேர்க்குவையொன்றில் அமர்ந்திருந்தாள். அவள் அருகே பொந்துக்குள் நாகம் ஒன்றின் விழிகள் மின்னித் தெரிந்தன. நான்கு திசைகளிலும் பிளிறலோசைகள் எழுந்தன. இருளுக்குள் நெளிந்து பறந்தபடி கரிய நாகங்கள் வந்தன. அவை மண்ணில் விழுந்து எழுந்த அறைவோசையில் மரங்கள் அதிர்ந்தன. அலறியபடி அங்கிருந்த அனைவரும் சிதறி ஓடினர். வண்டிகள் நொறுங்கித் தெறித்தன. இறப்புக் கூச்சல்கள். பசுங்குருதியின் எரிமணம். அவள் நாகங்களின் கண்களை மிக அருகிலென பார்த்துக்கொண்டிருந்தாள். கருவண்டுகள்போல மின்னுபவை.

பின்னர் அவை மறைந்தன. முனகல்களும் அழுகைகளும் மட்டும் எஞ்சியிருந்தன. அவையும் கரைந்தபின் இருளுக்குள் அவளை மிக அருகே நின்று நோக்கிக்கொண்டிருக்கும் இரு நாகவிழிகள் மட்டும் எஞ்சின. ஓநாய் என அந்த நாகம் ஊளையிட்டது. பல ஊளைகள் சேர்ந்து ஒலித்தன. விழிகளுக்குள் வண்ணமாக வெயிலை உணர்ந்த பின்னர்தான் அவள் விழித்தெழுந்தாள். எழுந்தமர்ந்தபோது அது எந்த இடம் என்றே அவளுக்குத் தெரியவில்லை. வேர்ப்புடைப்பைப் பற்றியபடி எழுந்து நின்றாள். அதன் பின்னரே அக்காட்சி முப்புடைப்பு கொண்டது.

அவளைச் சூழ்ந்து அடுமனைப் பெண்டிரும் ஏவலரும் வணிகர்களும் இறந்து சிதறிக் கிடந்தனர். குருதி மண்ணில் வழிந்து வற்றி கருமைகொண்டு உலர்ந்திருந்தது. அப்பால் வெண்குவியல்களாக காளைகள் இறந்து கிடந்தன. அவற்றை செந்நாய்கள் சில கடித்து இழுத்துக்கொண்டிருந்தன. அவள் அசைவைக் கண்டு ஒரு செந்நாய் மெல்ல உறுமியது. பிற செந்நாய்கள் அவளை பொருட்படுத்தவில்லை. வண்டிகளில் இருந்த துணிகளும் படைக்கலங்களும் வெண்கல ஏனங்களும் செம்புக் கலங்களும் பாவைகளும் பீதர்நாட்டு வெண்களிமண் தட்டுகளும் அப்பகுதியெங்கும் சிதறிப்பறந்து கிடந்தன.

அவள் அப்பகுதியைச் சூழ நோக்கியபின் உரக்க “சலஃபை! சலஃபை! எங்கிருக்கிறாய்?” என்று கூவினாள். பின்னர்தான் தன் காலடியிலேயே சலஃபை மண்ணில் முகம் புதைத்து குருதி மூடி சிதைந்து கிடப்பதைக் கண்டாள். “பூமிகரே! பூமிகரே!” என்று அவள் கூவினாள். பின்னர் விழுந்துகிடந்த உடல்களினூடாக தென்னி பதறும் கால்களுடன் நடந்து பூமிகரின் உடலையும் கண்டடைந்தாள். அவரது தலை முழுமையாக முதுகு நோக்கித் திரும்பியிருந்தது. அவளுக்கு வேறு எவர் பெயரும் நினைவுக்கு வரவில்லை.

அவ்வுடல்களினூடாக அவள் சுற்றி வந்தாள். செந்நாய்கள் உடல்களின் குடல்களை கடித்து இழுத்துக்கொண்டிருந்தன. பற்களைக் காட்டி சீறி உடல் வெருண்டன. அவள் இறந்து கிடந்த ஒவ்வொருவரையாக உலுக்கி எழுப்ப முயன்றாள். பின்னர் தளர்ந்து அமர்ந்தாள். பசித்தபோது அடுமனை வண்டியின் உடைவுகளுக்குள் கிடந்த அரிசியையும் பருப்பையும் எடுத்து உண்டாள். ஓடையில் இறங்கி நீரள்ளிக் குடித்துவிட்டு மீண்டும் தானிருந்த வேர்க்குவைக்குள்ளேயே வந்து ஒண்டினாள்.

உடலெங்கும் இருந்த பரபரப்பு அவளை அமரமுடியாமல் செய்தது. மீண்டும் எழுந்து சுற்றிவந்தபோது பாக்குப் பொதி ஒன்றை கண்டாள். முகம் மலர்ந்து உவகைக்குரல் எழுப்பி ஓடிச்சென்று அதை எடுத்து திறந்தாள். பாக்கை அள்ளி வாயிலிட்டு குதப்பியபடி அப்பையை நெஞ்சோடணைத்துக்கொண்டு வந்து வேர்க்குவையில் மீண்டும் அமர்ந்தாள். வாயில் ஊறி நெஞ்சில் இறங்கி குருதியில் கலந்த பாக்கு அவள் தசைகள் அனைத்தையும் தளர வைத்தது. கண்கள் மூடிக்கொண்டபோது முகம் சற்று மலர்ந்தது. வேர்க்குவைக்குள்ளேயே நன்றாக உடலை ஒடுக்கிக்கொண்டு துயிலத் தொடங்கினாள்.

flowerஇரண்டு நாட்கள் அங்கேயே அவள் அமர்ந்திருந்தாள். விழிக்கும்போதெல்லாம் அப்பகுதியை புதிதாகவே கண்டடைந்தாள். உடல் மட்கத் தொடங்கியிருந்த பூமிகரையும் பிறரையும் கைகால்களைப் பற்றி அசைத்து அழைத்தாள். காட்டிலிருந்து கூட்டம் கூட்டமாக நரிகளும் செந்நாய்களும் வந்து அவ்வுடல்களை கடித்து உண்ணத்தொடங்கின. இரவெல்லாம் கனவுக்குள் அவள் எரிமின்னும் விழிகளுடன் ஊளையிடும் நாகங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் பகலில் அவ்வுடல்கள் கிழிக்கப்பட்டு குடலுருவப்பட்டு சிதறிப் பரந்திருப்பதை கண்டாள்.

மறுநாள் பின்னிரவில் அவளுடன் இருந்த நாகம் “வா, நாம் நீராடுவோம்” என்றது. அவர்களைச் சூழ்ந்து பல நூறு நாகங்கள் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. குரைத்தபடி சீறியபடி ஒன்றுடன் ஒன்று பூசலிட்டன. அவற்றின் வெண்ணிறப் பற்களையும் எழுந்து பரந்த நாவுகளையும் கண்டாள். “எங்கு?” என்றாள். “இதோ, அருகில்தான் மலையருவி உள்ளது” என்றான். மலையருவியின் ஓசையை அவள் கேட்கத் தொடங்கினாள். “ஆம், மிக அருகில்” என்றாள். மரங்களுக்குமேல் அருவி வானிலிருந்தென பொழியும் நீர் முழக்கத்தை கேட்டாள். “வா” என்று அவன் அவள் கையை பற்றினான். ஈரத்துளிப் பிசிறுகள் அவள்மேல் மென்மையாகப் படிந்து பளிங்குத் துருவல்கள் என ஒளியுடன் மயிர்முனைகளில் அமர்ந்தன. இலை நுனிகள் அனைத்திலிருந்தும் நீர் வியர்த்து வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

மரங்களின் தழைப்புக்கு அப்பால் வெண்ணுரைப் பொழிவென அப்பேரருவியை அவள் கண்டாள். அச்சம் கொண்டு காலெடுத்து பின்னடைய அவன் அவள் கைகளை பற்றிஇழுத்தபடி சென்றான். சிரித்தபடி அவள் அருகே செல்லாமல் பின் காலெடுத்து வைக்க அவன் அவளை அள்ளித்தூக்கிச் சுழற்றி எடுத்துக்கொண்டான். கைகளையும் கால்களையும் உதறியபடி அவள் சிரித்துக் கூவினாள். அவளை கொண்டுசென்று அருவிக்குக் கீழே நிறுத்தினான். நீர்ப்பெருக்கு அவளை அறைந்து மூடியது. உடல் குளிர்ந்து நடுங்கத் தொடங்கியது. “போதும்! போதும்!” என்று அவள் அவனிடம் சொன்னாள். அவனை அறைந்தாள். நீரிலிருந்து விலகி ஓட முயன்றாள். அவன் அவள் கைகளை இறுகப் பற்றியிருந்தான். பற்கள் நடுங்கி அடித்துக்கொண்டன. கைவிரல்கள் குளிரில் ஒன்றுடன் ஒன்று முறுகிக்கொள்ள தசைகள் உளையத் தொடங்கின. பின்னர் அவள் காட்டை மூடிப் பொழிந்துகொண்டிருந்த பெருமழைக்குள் கண்விழித்தாள்.

flowerதமயந்தி நான்கு நாட்கள் சேறுகுழம்பிய சாலையில் தன்னந்தனியாக நடந்தாள். மழைநீரை அருந்தினாள். சாலையோரத்தில் கிடைத்த காய்களை எல்லாம் பறித்துத் தின்றாள். சூக்திமதிக்குள் நுழைந்தபோது அவள் உடலில் நைந்த மரவுரிக் கந்தல் மட்டும் இருந்தது. கூந்தலில் சேறும் சருகுகளும் செறிந்திருந்தன. எங்கிருக்கிறோம் என்னும் உணர்வே இல்லாமல் அவள் நகரில் அலைந்தாள். எதிர்ப்படுபவர்கள் அனைவரிடமும் கையேந்தி உணவுக்கு இரந்தாள். கிடைத்தவை அனைத்தையும் உண்டுவிட்டு சாலையோரங்களின் சிறு கூரைநீட்சிகளுக்கு அடியில் ஒண்டிக்கொண்டு துயின்றாள்.

பூமிகரின் வணிகக் குழுவில் எஞ்சிய சுசி தன் மூன்று துணைவர்களுடன் தப்பி காட்டுக்குள் ஓடி சிற்றூர் ஒன்றில் நோயில்கிடந்து உயிர்தேறி உடைந்த கைகளுடன் சூக்திமதிக்கு வந்துசேர்ந்தார். வணிகர் குழுவினரை அணுகி இழப்பைச் சொல்லி உதவும்படி கோரினார். அங்காடி மையத்தில் அமைந்த குபேரனின் ஆலயத்தில் அவரை அவர்கள் தங்க வைத்திருந்தனர். அவருக்காக வணிகர்கள் ஆளுக்கொரு வெள்ளிநாணயம் ஈந்து ஈட்டுச்செல்வம் திரட்டினர். அதை அவருக்கு அளிப்பதற்காக அந்த ஆலயத்தில் கூடியிருந்தபோது சுசி வெளியே வந்துநின்ற தமயந்தியைக் கண்டார்.

பித்தேறிய வெறிச் சிரிப்புடன் “உணவு! உணவு!” என கூச்சலிட்டாள் தமயந்தி. மழை பெய்துகொண்டிருந்தமையால் அவள்மேல் நீர் சரிந்திறங்கிக்கொண்டிருந்தது. அஞ்சி நடுங்கி உடலொடுங்கி சற்றுநேரம் நின்ற சுசி பின்னர் வெறிகொண்டு அருகிருந்த பொருட்களை எடுத்து அவள்மேல் வீசியபடி கூச்சலிட்டார். “இவள்தான் எங்களை அழித்தவள். கூட்டரே, இவள் பெண்ணல்ல. அழகிய பெண்ணாக எங்களுடன் வந்துசேர்ந்தாள். ஒரே நாளில் முதுமகளென்றானாள். இவள் ஏதோ கொடுங்காட்டணங்கு… நோயையும் இறப்பையும் அளிக்கும் தீயோள்…”

அவரை அவர்கள் பிடித்து தடுத்தனர். இன்னொருவன் “ஆம், நானே அதை கண்டேன். தோழர்களே, இவள் இரவில் கனவிலென எழுந்து நடக்கிறாள். அப்போது உடலில் கூன் இல்லை. தன்னை அரசி என்கிறாள். அரண்மனையில் உலவும் நிமிர்வு கொண்டிருக்கிறாள். ஆணையிடும் குரலில் பேசுகிறாள். இவளில் வாழ்வது மானுடர்களுடன் விளையாடும் தீயணங்கு. ஐயமே இல்லை” என்றான். அவர்கள் அச்சத்தால் உறைந்து நின்றனர். பின்னர் அவளை கற்களால் அடித்து துரத்தினர். அவள் அச்சத்தால் நடுங்கினாள். ஆனால் நிலையழிந்த உள்ளம் கொண்டிருந்தமையால் முகத்தில் சிரிப்பே வெளிப்பட்டது.

அதன்பின் அவளை அங்காடியில் வாழ வணிகர்கள் விடவில்லை. நோக்குமிடமெல்லாம் கல்லால் அறைந்து துரத்தியடித்தனர். அங்காடிச் சிறுவர்கள் மண்ணையும் கற்களையும் அள்ளி வீசி நகையாடினர். நாய்கள் குரைத்தபடி அவளை தங்கள் எல்லைவரை விரட்டிச்சென்றன. தனக்குத்தானே பேசிக்கொள்பவளும் தானே உடைந்து அழுது பின் தேறி சிரிப்பவளுமாகி அவள் விலகிச்சென்றாள். சடையான குழலும் நோய்க்கிழவி முகமும் கொண்டிருந்த அவளை நோய் கொண்டுவரும் கொடுந்தெய்வம் என எண்ணிய சூதரும் ஆயரும் வேளிரும் தங்கள் தெருக்களில் நுழையவிடவில்லை.

அனைவராலும் தாக்கப்பட்டபோது அவள் எங்கும் பதுங்கிக் கொள்பவளானாள். மிகச் சிறிய இடுக்குகளிலேயே ஒடுங்கி விழிகளிலிருந்து மறையும் திறனை உள்ளம் அறியாமலேயே அவள் உடல் கற்றுக்கொண்டது. அவ்வாறு அவள் மறைவது அவர்களின் அச்சத்தை மேலும் பெருக்கியது. பகலில் எலிபோல எங்கேனும் முற்றிலும் பதுங்கியிருந்து இரவில் மட்டும் வெளியே வந்தாள். குப்பைகளிலிருந்து தன் உணவை தேடி உண்டாள். அவளை நாய்கள் தங்களவள் என ஏற்றுக்கொண்டன. ஆகவே ஒலியில்லாமல் நிழலுருவென நகரில் அலைந்தாள்.

முந்தைய கட்டுரைஎழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…
அடுத்த கட்டுரைமன்மதனின் காமம்